சுகபோக தேவை, தொலைபேசிக் கட்டணங்களுக்கு வரி : அரசாங்கம்

Published By: Priyatharshan

20 Apr, 2016 | 03:12 PM
image

அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அதிகரிக்கப்படாத அதேவேளை, சுகபோக உணவு வகை, தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் சர்வதேச பாடசாலைக் கட்டணங்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை வெளியிட்டும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

01. பசு மாட்டு வளர்ப்பகமொன்றை நிர்மாணிப்பதற்கென 100 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியொன்றை அம்பிலிபிட்டிய பிரதெசத்தில் பெற்றுக் கொள்ளல் 

மொனராகலை மாவட்டத்திதுக்குரிய, செவனகல பிரதேசச் செயலாளர் பிரிவின் கொஷல் ஆர கிராம சேவகர் பிரிவிலுள்ள, கொஷல் ஆர கிராமத்தில் 200 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காயி மேய்ச்சல் நிலத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

அக்காணியிலிருந்து 100 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணியை மேற்குறித்த பணிக்கென பெற்றுத் தருமாறு அம்பிலிபிட்டிய, ஸ்ரீ போதிராஜ ஸ்தாபனம் வேண்டியுள்ளது. எனவே 1993 ஆம் ஆண்டு 30ம் இலக்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அம்பிலிபிட்டிய, ஸ்ரீ போதிராஜ தொண்டு நிறுவனத்தின், ஸ்ரீ போதிராஜ ஸ்தாபனத்துக்கு 30 வருட காலப் பகுதிக்கு நீண்ட காலக் குத்தகை அடிப்படையில் பெற்று கொடுப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   

02. மஹரகமவில் உள்ள புற்றுநோய் வைதியசாலையின் நவீன வாட்டு தொகுதியை நிர்மாண வேலையைப் பூர்த்தி செய்தல் 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அகமட் ரீ கம்பனி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின் நவீன வாட்டு தொகுதி ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதித்தொகையினை அதிகரிப்பதன் மூலம் குறித்த நிர்மாண பணிகளை துரிதமாக நிறைவேற்றி முடிப்பதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

03. பிரதேசத்தில் வாழும் காணியற்ற பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு ஆணமடுவ தென்னங்குரியாவத்தை காணியை மீண்டும் காணிசீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு மீள்வுரிமையளித்தல் 

ஆணமடுவ பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் கீழ் காணி காணி பதிவு கச்சேரி ஒன்றினை முன்னெடுத்து அதன் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதேசத்தில் காணியுரிமை அற்ற பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு, 9.6 ஏக்கர் பரப்பளவினை கொண்ட தென்னங்குரியாவத்தை காணியினை, காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு மீள்வுரிமைகயளிப்பு செய்வதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி அதிகார சபைகளின் நடவடிக்கைகளை முறைசார்படுத்தல் 

பதவி காலம் முடிவடைவதற்கு உரியதாக இருந்த உள்ளுராட்சி அதிகார சபைகளின் பதவிக்காலம் அமைச்சர் அவர்களுக்கு உரித்தான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு நீடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த உள்ளுராட்சி சபைகளில் அலுவல்களை பேணிச் செல்கின்ற போது பல்வேறு முறைக்கேடுகள் நிகழ்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றது. 

குறித்த விடயம் தொடர்பில் 2016.02.10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த விடயங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரினால் முன்வைக்கப்பட்டது. 

இவ்விடயங்களை பரிசீலனை செய்து 02 வாரங்களுக்குள் தமது பரிந்துரைகளை வழங்குவதற்கு பொது திறைசேரியின் பிரதி செயலாளர், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், மேல் மாகாண சபையின் பிரதான செயலாளர் ஆகியோரைக் கொண்டமைந்த குழு நியமனம் செய்யப்பட்டது. 

இக்குழுவின் சிபார்சுகளுக்கமைய முன் நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. நீர்வெறுப்பு நோய் தொடர்பான கட்டளைச்சட்டம் மற்றும் வளர்ப்பு நாய்களை பதிவு செய்யும் கட்டளைச்சட்டம் என்பவற்றை திருத்தம் செய்தல்

மேற் குறிப்பிடப்பட்டுள்ள இரு சட்டங்களையும் காலத்திற் கேற்றாற் போல் திருத்தம் செய்து குறித்த இரண்டு சட்டங்களையும் இணைத்து ஒரு தனி சட்டமொன்றை கொண்டு வருவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு இணங்க பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஒன்றிணைந்த சட்டமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்  பைசல் முஸ்தபா முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வீதியோர நாய்கள் மூலம் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற அசௌகரியங்கள் மற்றும் நோய்கள் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு, சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சு என்பவற்றுக்கு அறிவுறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

06. 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல் - 2016 ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13ம் திகதிகள்

சர்வதேச வர்த்தக நிலையமானது  உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் இணைந்த நிறுவனமொன்றாகக் காணப்படுகின்றது. 

அதன் முக்கிய வருடாந்த நிகழ்வாக உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு காணப்படுகின்றது. அதில் உலகில் பல முக்கிய முன்னணி வியாபார உயர் தொழில் நிபுணர்கள் கலந்து கொள்வர். 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச வர்த்தக மையம் என்பன இணைந்து “வெற்றிக்கான வர்த்தகம்: இணைப்பு, போட்டி, மாற்றம்” என்ற தலைப்பின் கீழ் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச வர்த்தகம் தொடர்பில் இந்நாட்டில் காணப்படும் திறந்த தன்மையினையும் அதற்காக காணப்படும் உகந்த சூழலினையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இம்மாநாடு வழிவகுக்கும். அதனடிப்படையில் சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிதியுதவியுடன் 2016 ஆம் ஆண்டின் உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டின் நடாத்தும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச வர்த்தக நிலையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்  மலிக் சமரவிக்ரமவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கை போக்குவரத்துச் சபைக்காக புதிய உருளிப்பட்டை கருவிகளை கொள்முதல் செய்தல் 

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளுக்கு தேவையான புதிய உருளிப்பட்டைகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரலை பகிரங்கமான முறையில் மேற் கொள்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 1,108 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

08. மருத்துவ பீடத்திற்கான உத்தேச காணியை கொள்வனவு செய்தல் மற்றும் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்

இணைந்த பல்கலைக்கழகமாக 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வயம்ப பல்கலைக்கழகமானது 1999 ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழகமானது 1999 ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழகமாக தாபிக்கப்பட்டது. 

துரித முன்னேற்றம் கண்டு வரும் இப்பல்கலைக்கழகம் 04 பீடங்களை கொண்டமைந்துள்ளது. மருத்துவக் கல்வித் துறையை விரிபடுத்தும் தேசிய ரீதியான தேவைக்கு பங்களிப்புச் செலுத்தும் நோக்கில் குருநாகல் தேசிய வைத்தியசாலையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தினால் மருத்துவ பீடம் ஒன்று ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக காணியொன்றை கொள்வனவு செய்வதற்கும், தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. தென்பிராந்திய போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - தென் அதிவேக வீதியின் பின்னதூவவிலிருந்து கொடகம விலையிலான தென் பிரிவு நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தின் மிகுதி பணத்தை கொண்டு 03 செயற்றிட்டத்தை முன்னெடுத்தல் 

தென் அதிவேக வீதியின் பின்னதூவவிலிருந்து கொடகம விலையிலான தென் பிரிவு நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தின் எஞ்சிய மிகுதி தொகையான 1.93 பில்லியன் ரூபாய் நிதியினை பயன்படுத்தி 11 பிரதேச வீதிகளை புனரமைத்தல், தென் அதிவேக வீதியில் பொலிஸ் காவல் பணிகளுக்காக பயன்படுத்த 04 பொலிஸ் கார்கள், தென் பிராந்திய கடுகதிப்பாதையின் 114பது கி.மீ. இல் காணப்படுகின்ற நிலச்சரிவினை திருத்துதல் ஆகிய 03 வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

10. கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ வீடத்திற்கான உத்தேச 17 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியின் நிர்மாண பணிகள் 

குறித்த கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2000 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

எனினும் பல்வேறு காரணங்களால் குறித்த நிர்மாண பணிகள் தடைப்பட்டன. 2014 ஆம் ஆண்டு குறித்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக தூண்களுடன் கூடிய குவியல் அத்திவாரத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 5,688.5 மில்லியின் ரூபாய் செலவில் குறித்த நிர்மாண பணிகளை மேற்கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. விசேட செயற்படையணியின் மகா ஓயா முகாமில் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அலுவலகர்களுக்கான வதிவிட கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா பொலிஸ் விசேட செயற்படையணிக்கு உரித்தான முகாமுக்கு அலுவல்கள் மற்றும் சேவை நோக்கம் கருதி சமூகம் தருகின்ற அரச அலுவலகர்களுக்கு மற்றும் விசேட செயற்படையணியின் அதிகாரிகளுக்கு வதிவிட வசதிகளை தற்போது 40 வருட பழைமை வாய்ந்த கட்டிடம் ஒன்று பூர்த்தி செய்கின்றது. 

எனவே அதற்கு பதிலாக சகல வசதிகளும் அடங்கிய கட்டிடம் ஒன்றை 24.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கும் அதற்கான நிதியினை 2017-2019 இடைக்கால வரவு செலவு திட்ட வரைபின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் நிர்வாக தங்குமிட மற்றும் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதற்காக 03 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தை நிர்மாணித்தல் 

பிரபுக்களின் பாதுகாப்பு, கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மற்றம் பாதாள உலக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல சட்ட விரோத செயற்பாடுகளை முடக்கும் பணி உட்பட சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பணியினை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் விசேட அதிரடிப்படை மேற் கொண்டு வருகின்றது.

இதற்காக விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமில் நாள்தோறும் ஏறத்தாழ 800 அளவிலான உத்தியோகத்தர்கள் அலுவலக பணிகளில் ஈடுபடுகின்றனர்.  சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைத்த யோசனையின் அடிப்படையில் விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் நிர்வாக தங்குமிட மற்றும் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதற்காக 03 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிட மொன்றை 58.6 மில்லியின் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கும் அதற்கான நிதியினை 2017-2019 இடைக்கால வரவு செலவு திட்ட வரைபின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. விசேட அதிரடிப்படையின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையில் 51 ஆம் இலக்க கட்டிடத்தை மூன்று மாடி கட்டிடமாக நிர்மாணித்தல்

இராணுவ படையணிகளுக்கு சமமான பயிற்சி, பரிசோதனை மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பயிற்சி, பல்வேறு ஆற்றல்களை மேம்படுத்தும் பயிற்சி எனும் பல பயிற்றுவிப்புக்கள் போன்றன விசேட அதிரடிப்படையின் கட்டுகுருந்த பயிற்சி பாடசாலையில்  இடம்பெறுகின்றன. 

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்  சாகல ரத்னாயகவினால் முன்வைத்த யோசனையின் அடிப்படையில் இப்பயிற்சி 

பாடசாலையில் அமைந்துள்ள 75 வருட பழமைவாய்ந்த வதிவிட கட்டிடத்துக்கு பதிலாக ஒரே தடவையில் 300 அதிகாரிகள் தங்கும் வகையில் 88.2 மில்லியன் ரூபா செலவில் 02 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் அதற்கான நிதியினை 2017-2019 இடைக்கால வரவு செலவு திட்ட வரைபின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. அரச கூட்டுத்தாபனங்கள், நியதி வாரியங்கள் மற்றும் முழுமையாக அரசாங்கத்தால் கொண்டு நடத்தப்படும் கம்பனிகள் என்பவற்றில் சம்பளத் திருத்தம் - 2016

அரச உழியர்களுக்காக அவர்களின் அடிப்படை சம்பளத்துக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்ட 10,000 ரூபா விசேட கொடுப்பனவை கட்டம் கட்டமாக அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானம் 03/2016 ஆம் இலக்க 2016.02.25 ஆம் திகதி வெளியான அரச நிர்வாக சுற்றறிக்கையில் அமுலானது. அதனடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளங்களில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன.

அதற்கு சமாந்தரமாக அரச கூட்டுத்தாபனங்கள், நியதி வாரியங்கள் மற்றும் முழுமையாக அரசாங்கத்தால் கொண்டு நடத்தப்படும் கம்பனிகள் என்பவற்றில் சம்பளத் திருத்தத்தை மேற் கொள்ளும் பொருட்டு தேசிய சம்பளம் மற்றும் சேவையாளர்களின் புள்ளிவிபர ஆணைக்குழுவின் சிபார்சின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. கிராமிய அடிப்படை வசதிகளை அபிவிருத்தி வேலைத்திட்டம் 2016 இனை செயற்படுத்தல் (விடய இல. 39)

கிராமங்களின் அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 10 இலட்சம் வீதம் வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மும்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கிராமிய அடிப்படை வசதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் 2-5 இடைப்பட்ட அளவில் கிராமிய பிரஜா அமைப்புகளின் தலைவர்களின் குழுவின் மூலம் இனங்காணப்பட வேண்டும். 

குறித்த செயற்றிட்டங்கள் 2016 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 31 க்குள் நிறைவுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான தகவல்கள் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. 

16. அமைச்சர்களின் விடய தானங்களுக்கு அமைவான விடயங்கள் தொடர்பில் தமது பிரதேசங்களில் முன்னெடுக்கும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கவென பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்தல்

பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி 

செய்யும் நோக்கில் குறித்த அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றம் ஒன்று கூடும் இரண்டாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பிரசன்னமாய் இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51