இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தருவதற்கான செயற்பாட்டில் அல்லது கருமத்தில் தாமதம் ஏற்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுத்தர விரும்புகிறார். அவருக்கு உதவியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உள்ளார். எனவே இவ்விடயத்தில் அனைவரும் விசுவாசமாக செயற்பட்டால் இந்த கருமம் இந்த வருடத்துக்குள்ளேயே முடிவடையும் என்று நினைக்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சம்பூர் அனல் மின்நிலையத்தின் பாதிப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். போர் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் பல இடங்களில் மக்கள் குடியேறமுடியவில்லை. காணிப்பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இராணுவ பரசன்னம் குறைக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்சி தலைவர் இரா.சம்பந்தன் நேற்றையதினம் காலை நடத்திய சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 2016ஆம் ஆண்டுக்குள் இன்பிரச்சனைக்கான நிரந்த தீர்வை பெற்று தருவதாக கூறியிருந்த நிலையில் அதன் முயற்சி தற்போது எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஊடகவியாலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இச் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்
2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு
2016ஆம் ஆண்டுக்குள் தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தருவேன். எனினும் தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்துவது நானல்ல அதனை ஏற்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள் உண்டு. சில கருமங்கள் அதற்காக நடந்தாக வேண்டும்.
தற்போது மஹிந்த தலைமையிலான ஆட்சி மாறி மைத்திரி தலைமையிலான ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிதபி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் இப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வினை காண விரும்புகின்றனர். மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறாவிட்டாலும் கூட எங்களுடைய உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய கூடிய நிலையில் இருக்கிறார்கள்.
ஆகவே இந்த கருமத்தில் தாமதம் ஏற்படவில்லை. விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால்இந்த கருமம் இந்த வருடத்துக்குள்ளேயே முடிவடையும். அவ்விதமாக முடிவடைந்தால் நல்லது. ஏனெனில் அவ்வாறு முடிவடைந்தால் பிரச்சனையை அதிகம் பாதிக்கப்படாமலும் குழப்பாமலும் தீர்க்கலாம். இவ்விடத்தில் ஊடகங்களும் குழப்பக்கூடாது.
சம்பூர் அனல் மின்னிலையம்
எமது மக்கள் நீண்டகாலமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே போராடிவருகின்றார்கள். இந்நிலையில் திருகோணமலை சம்பூர் பகுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பயைும் மீறி பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியையும் மீறி கடந்த அரசினால் சுவீகரிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியும் கடற்படை முகாமும் நீக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்து மக்கள் மீளக்குடியேறி வருகின்றனர்.
ஆனால் மீதமுள்ள 500 ஏக்கர் காணிகளே அனல்மின் நிலையம் அமைப்பற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை. அத்துடன் அதில் வசித்த 7 குடும்பங்களுக்கு வேறு இடத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அங்கு அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதனால் பாதிப்புக்கள் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயத்திலே உண்மைஇல்லை. என கூறமுடியாது. அதில் உண்மையுண்டு. நான் விசாரித்த அளவிலே அதில்இருந்து வெளியாகும் சில இரசாயன தூதுகள் மற்றும் சாம்பல்களால் பாதிப்புண்டு.
எனவே இது பரிசீலிக்கப்படவேண்டிய விடயம். இது தொடர்பில் நாம் பரிசீலித்து வருகின்றோம். அத்துடன் அரசாங்கத்துடன் இது குறித்து பேசுவோம். இந்திய அரசாங்கத்துடனும் பேசுவோம். மக்களுடனும் நிபுணர்களும் பேசி கலந்தாலோசித்தே ஓர் முடிவுக்கு வருவோம்.
வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றம்
வடமாகாணத்தின் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்பது தொடர்பில் 16 உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து முதலமைச்சருடன், அமைச்சர்களுடன் சபை முதல்வருடன் ஏனைய உறுப்பினர்களுடன் பேசப்படும்.
இது தேவையா இல்லையா அல்லது தேவையென்றால் அது என்ன விதமாக கையாளப்படவேண்டும் என்று தொடர்பாக ஆராயப்படும். மாகாண சபையின் இரண்டறை வருடங்களுக்கு அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை உறுப்பினர்களின் ஜனநாயக உரிமை. எனவே இது தொடர்பில் பரிசீலிக்கப்படும். இது தொடர்பில் மேலதிகமாக கூறுவதற்கு எதுவும் இல்லை.
பொருத்து வீட்டுத்திட்டம்
பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது ஆட்சோபனையை தெரிவித்துள்ளது. இது தெடர்பில் என்னுடைய கருத்து, பொருத்து வீட்டுத்திட்டம் எமது மக்களுக்கு பொருத்தமாக இல்லை என்பதாகும். எனவே எமது மக்கள் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக கல்வீடுகளில் வாழ்ந்தவர்கள் அது அவர்களின் பாரம்பரிய கலாசாரம் முக்கியம் வாய்ந்தது.
மேலும் இவ்விதமான பொருத்து வீடுகள் இந்நாட்டில் எங்கும் கட்டப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் பல்வேறு விதமான வீட்டுத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் எங்கு பொருத்தும் வீடுகள் கட்டப்படவில்லை.
அத்துடன் இவ்வீடு சாதாரண வீட்டினை கட்டுவதற்கு ஏற்படும் செலவினை போன்று இருமடங்கு அதிகமாகவுள்ளது. எனவே இது தொடர்பில் எமது கருத்துக்களை முன்வைத்து ஓர் தீர்வினை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசியல் சாசன வரைபு
அரசியலயமைப்பு செயற்பாட்டில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு என்ன தேவையென்று எங்களுக்கு தெரியும் . இதன்படி நிரந்தரமான நியாயமான நடமுறைப்படுத்த கூடிய நீடிக்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வே ஏற்பட வேண்டும். அது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். அது அவர்களின் பிறப்புரிமை உட்பட சகல உரிமைகளையும் பெறக்கூடிய ஆட்சிமுறையாக அமையவேண்டும்.
எனவே எங்கள் மக்கள் மீது தீர்வு திட்டத்தை திணிக்க மாட்டோம். அது தொடர்பில் மக்களிடம் கலந்துரையாடியே முடிவெடுப்போம். என்றார்.
கேள்வி பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எதிர்கட்சி தலைவர் ஒட்டு மொத்த நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாகபேசுவதில்லை என்றும் தமிழ் மக்கள் சார்பாக மட்டுமே போசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளாரே
பதில் தன்னை பொது எதிரணியின் உறுப்பினர் என வர்ணித்து கொண்டிருக்கும் தினேஸ் குணவர்த்தனவில் ஒவ்வொரு கருத்துக்கும்நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு பதில் சொல்லவும் மாட்டேன்.
மேலும் வடக்கு கிழக்கு என்பது இந்நாட்டின் ஓர் பிரதேசம். ஓர் பகுதி. நான் இப்பகுதி தொடர்பாக பாராளுமன்றிலோ வெ ளியிலோ பேசினால் அதன் அர்த்தம் நான் நாட்டினை பற்றி பேசுகிறேன் என்பதேயாகும்.
தினேஸ் குணவர்த்தன பேசுவது தனது சொந்த பகுதியை பற்றியே அன்றிஅவர் வடக்கு கிழக்கை பற்றி பேசுகிறாரா? எனவே தினேஸ் குணவர்த்தன எங்களை வழிநடத்த முடியாது. அதற்கு அவரிற்கு தகுதியும் இல்லை. உரித்தும் இல்லை.
கேள்வி தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்க அரசியலை நடாத்தி தனது பெருமைகளை மட்டுமே தேடிக்கொள்கிறதே தவிர மக்களது பிரச்சனைகளை கருத்தில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில் எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது. இவர் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பார்க்கிறார். எனவே அவரைபற்றி கேட்டுப்பயனேதும் இல்லை.
நாங்கள் ஓர் பாதையில் இலக்கை நோக்கி போகின்றோம். நாங்கள் அவ் இலக்கை போய் சேரவேண்டும். அந்த வகையில் அதனை தடை செய்ய பலர் முயற்சிக்கிறார்கள். அத்தகையவர்கள் எங்கள் பகுதியிலும் இருக்கிறாரார்கள்.
கேள்வி வடக்கு கிழக்கு தமிழர் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் பாதுகாப்பு என்ற போர்வையில் தடைகள் காணப்படும் போது இத் தடைகள் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு முட்டுக்கடையாக இருக்காது என நம்புகிறீர்களா?
பதில் இக்கருத்தை நான் முழுயைமாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதில்ஓரளவு உண்மையுண்டு. ஆனாலும் எதுவும் நடைபறெவுமில்லை. எனவும் கூறமுடியாது. பல கருமங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் எமது மக்கள் நீண்டகாலமாக கஷ்டப்படுகிறார்கள். போர் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்றபோதும் இன்றும் பல இடங்களில் மக்கள் குடியேறமுடியவில்லை. காணிப்பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இராணுவ பரசன்னம் குறைக்கப்படவேண்டும்.
அத்துடன் இராணுவம் தாமும் பயன்படுத்தாமல் மக்களிடமும் வழங்காமல் தங்கள் மேற்பார்வையில் பல காணிகளை வைத்துள்ளார்கள். இந்த நிலமை தொடரகூடாது.
மேலும் தற்போதைய அரசாங்கத்தினால் அல்லது மைத்திரிபால சிறிசேனவால் ஒன்றும் செய்யப்படவில்லை என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் பல விடயங்கள் நடந்து இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியில் இருந்திருந்தால் அது நடந்திருக்காது. தற்போது போல் உள்ள நிலைமை 100 மடங்கு மோசமானதாக இருந்திருக்கும். எனவே இத்தகைய நிலைமைகளை மக்கள் உணரவேண்டியது அவசியம்.
ஏனெனில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆகவே தற்போதைய அரசாங்கத்துக்கு கவனமாக செயற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனாலும் எமது மக்களின் கஷ்டங்கள் தொடர முடியாது. இம்முறை யாழ்ப்பாணம் சென்றதனால் மக்களுடைய பிரச்சனைகள் பலவற்றை மேலதிகமாக தெரிந்துகொண்டேன். அத்துடன் அதற்கான தீர்வுக்கான எமது முயற்சிகள் தொடரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM