வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் யொங் -- உன்னுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சடுதியாக முடிவுக்குவந்தமை கொரிய அணுவாயுத நெருக்கடிக்கு அமைதிவழித் தீர்வொன்றை காண்பதற்கான முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு என்பது தெளிவானது. இரு நாள் உச்சிமகாநாட்டை இரு நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றில் கூட கைச்சாத்திடாமல் கடந்த வியாழக்கிழமை இடையில் நிறுத்திக்கொண்டன. பேச்சுவார்த்தைகள் திடீரெனத் தோல்விகண்டமைக்கு இரு நாடுகளும் முரண்பாடான விளக்கங்களைத் தெரிவித்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
வடகொரியா ஒரேயொரு அணு நிலையத்தை மூடவேண்டுமானால் அதற்கு பிரதியுபகாரமாக அமெரிக்க தடைகள் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்று கிம் வலியுறுத்தியதாக ட்ரம்ப் கூறறினார். ஆனால, யொங்பியோனில் உள்ள தங்கள் நாட்டின் பிரதான அணு நிலையத்தை கலைக்கவேண்டுமானால் அதற்கு பிரதியுபகாரமாக தடைகளில் ஓரளவை மாத்திரமே நீக்கவேண்டுமென்று தாங்கள் கேட்டுக்கொண்டதாக வடகொரிய வெளியுறவு அமைச்சர் றி யொங் ஹோ பிறகு சொன்னார்.உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு விடயம் மட்டும் தெளிவு ; அதாவது கடந்த வருடம் சிங்கப்பூர் உச்சிமகாநாட்டுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையில் காணப்பட்ட தோழமைப்பண்பை ஹனோயில் காணமுடியவில்லை.
சிங்கப்பூர் சந்திப்புக்குப் பிறகு இரு தரப்பினருமே " புதிய அமெரிக்க -- வடகொரிய உறவுகளைக் " கொண்டிருப்பதற்கும் கொரியத் தீபகற்பத்தில் " நிலைபேறானதும் உறுதியானதுமான சமாதான நடைமுறை " ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இணங்கிக்கொண்டனர். முற்றுமுழுதான அணுவாயுதநீக்கத்தை நோக்கிச் செயற்படுவதற்கும் வடகொரியா உறுதியளித்தது. இத்தடவை சமாதானச்செயன்முறைகளின் எதிர்காலத்திசை மார்க்கம் குறித்து எந்தவிதமான கருத்தும் வெளியிடப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையிலான எதிர்காலச் சந்திப்பு ஒன்றுக்கான உடனடித்திட்டம் பற்றி வடகொரியா எதுவும் கூறவில்லை.
சிங்கப்பூரில் வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பில் அடுத்தகட்டநகர்வைச் செய்வதற்கு அமெரிக்காவும் வடகொரியாவும் தவறியமையே பிரச்சினையின் ஒரு பகுதியாகும்.கடந்த வருடம் ஜூன் உச்சிமகாநாட்டுக்கு சில வாரங்கள் முன்னதாக ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாக அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை முழுமையாக முடக்குவதாக வடகொரியா அறிவித்தது. அதற்கு பிரதியுபகாரமாக 1950 -- 1953 கொரியப் போருக்கு முறைப்படியான முடிவொன்றை அமெரிக்கா பிரகடனம் செய்யவேண்டும் என்றும் கேடட்கப்பட்டது.ஆனால், ட்ரம்ப் நிருவாகம் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது. நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினாலும் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட உத்வேகமான சூழ்நிலை மழுங்கிப்போனது.
வடகொரிய தலைநகர் யொங்யாங்கிற்கான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் முதல் விஜயம் செய்தபோது அவரைச்சந்திக்க கிம் மறுத்தார். முதலாவது ட்ரம்ப் - கிம் உச்சிமகாநாட்டுக்குப் பிறகும் வடகொரியா தொடர்ந்தும் அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தை தொடருவதாக அமெரிக்க புலனாய்வுச்சமூகம் அறிவித்தது.இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்ததற்கு மத்தியிலேயே தலைவர்களுக்கிடையிலான இரண்டாவது உச்சிமகாநாடு அறிவிக்கப்பட்டது.
இரு தரப்பினருமே தங்களது கோரிக்கைகளில் உறுதியாக நின்றதால் ஹனோயில் பெரியதொரு இணக்கப்பாடு எட்டப்படும் என்பதற்கான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லாமல்போனது. ஆனால், இந்த பின்னடைவு சமாதானச் செயன்முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடுமென்று நினைக்கவேண்டிய தேவையில்லை.அணுவாயுதநீக்கம் என்பது நீண்டதொரு செயன்முறை என்று அமெரிக்க ஜனாதிபதியே கூறியிருக்கிறார்.கிம் அறிவித்த அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனை முடக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது.
கொரியத் தீபகற்பம் அமைதியாக இருக்கின்ற அதேவேளை, இரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கின்றன.ஹனோய் உச்சிமகாநாட்டுக்கு முன்னதாக கொரியப்போரின் முடிவை அமெரிக்கா அறிவிக்கும் என்றும் உறவுகளை சகஜமாக்குவதற்கான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக பரஸ்பரம் தலைநகரங்களில் தொடர்பு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து பரஸ்பரம் நம்பிக்கையை இரு தரப்பினரும் கட்டியெழுப்பவேண்டும் என்கின்ற அதேவேளை, அணுவாயுதநீக்கம் போன்ற மிகுந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைக் கையாளுவதற்கு படிப்படியான -- கட்டம்கட்டமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
[ இந்து (ஆங்கிலம்) ஆசிரியதலையங்கம்,2 மார்ச் 2019 ]
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM