- ஈ.ரி.பி.சிவப்பிரியன்
காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மாநிலத்தில் உறுதியான தொண்டர்கள் தளத்தைக்கொண்ட மிகப்பெரிய கட்சியாகக் கட்டிவளர்த்து 12 வருடங்களுக்கும் அதிகமான காலமாக தேசியக்கட்சிகளை ஓரங்கட்டிவைத்திருக்கக்கூடிய துணிச்சலையும் வெளிக்காட்டினார். ஆனால், 2016 டிசம்பரில் அவரது மரணத்துக்குப் பிறகு இரு வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலம் கடந்துவிடுவதற்கு முன்னரே அண்ணா தி.மு.க. மக்கள் மத்தியிலான கவர்ச்சியையும் மத்திய அரசுடன் பேரம்பேசும் வல்லமையையும் இழந்து பெரும் சரிவைக்கண்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவைச் சந்திப்பதற்கு மதுரை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் காத்திருந்த காட்சியும் தமிழகத்தில் பாரதிய ஜனாதாவுடனான கூட்டணியை அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்று அழைக்கவேண்டுமென்று அதன் தலைவர்களினால் தெரிவிக்கப்பட்ட யோசனையை அமித் ஷா நிராகரித்தமையும் அந்த கட்சியை நீண்டகாலத்துக்கு ஓயாதுவந்து வெருட்டிககொண்டேயிருக்கும். அதேபோன்றே, அண்ணா தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தின் சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஜெயலலிதா -- மோடி போயஸ்கார்டன் சந்திப்பு படங்களும் அச்சுறுத்தும்.
பாரதிய ஜனதாவுக்கு இரண்டாம் பட்சமானதாக அண்ணா தி.மு.க. செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற போதிலும், கடந்த வாரத்தைய நிகழ்வுகள் தேசியக்கட்சிக்கு முன்னால் பிராந்திய கட்சி மண்டியிட்டுவிட்டது என்ற விமர்சனங்களுக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.இத்தகைய நிகழ்வுகள் ஜெயலலிதாவின் காலத்தில் கேள்விப்பட்டிருக்கவோ அல்லது எதிர்பார்த்திருக்கவோ முடியாதவையாகும்.
ஜரஞ்சகமான தலைவியின் மறைவுக்குப் பிறகு தினமும் ஒவ்வொரு பிரச்சினைக்கு முகங்கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்ட அண்ணா தி.மு.க.வின் அரசாங்கம் இவ்வளவு காலத்துக்கு நின்றுபிடிக்கிறதென்றால் அதற்கு பாரதிய ஜனதா வழங்குகின்ற ஆதரவு மாத்திரமே காரணம் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. அண்ணா தி.மு.க. அரசாங்கம் வீழ்ந்துவிடாமல் நீடிப்பதை உறுதிசெய்வதற்கு பாரதிய ஜனதா பெரும் பிரயத்தனங்களைச் செய்திருக்கிறது. தமிழகத்திற்குள் ஊடுருவி செல்வாக்கை அதிகரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்விகண்டதும் தன்னுடன் கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள அண்ணா தி.மு.க.வை நிர்ப்பந்தித்தது.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எல்லாமே போயஸ்கார்டனில் உள்ள அவரது மாளிகை வீட்டிலேயே இடம்பெற்றன. தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஜெயலலிதாவின் வீட்டுக்கதவுகளை தட்டுவது வழமையான நடைமுறையாக இருந்தது.தமிழகத்துக்கு பாதகமாக அமையக்கூடியவை என்று அவர் நினைத்த சகல திட்டங்களையும் அவர் துணிச்சலுடன் எதிர்த்தார்.அத்துடன் மாநிலத்தில் தேசியக்கட்சிகள் தன்னைப் பின்பற்றுவதை அவர் உறுதிசெய்தார். மறுதலையாக நடக்க ஒருபோதும் அவர் இடங்கொடுக்கவில்லை.
பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பல தலைவர்கள் தங்களது அரசாங்கத்துக்கான ஆதரவுக்கடிதத்தை ஜெயலலிதாவிடமிருந்து பெறுவதற்காக அவரின் வாசஸ்தலத்துக்கு வெளியே காவல் இருந்ததை அண்ணா தி.மு.க.வின் பழைய தலைவர்கள் அடிக்கடி நினைவூட்டுவார்கள்.
அண்ணா தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் இராணுவத்தைப் போன்ற கட்டுப்பாடுடைய கட்சி என்று அதன் தலைவர்கள் முன்னர் பெருமை பேசினார்கள். ஆனால், இன்று இருக்கும் அண்ணா தி.மு.க. அத்தகைய கட்சியாக இல்லை. அது பல்வேறு குழுக்களாகப் பிரிந்துகிடக்கிறது.அரசாங்கம் கவிழ்ந்துபோய்விடக்கூடாதே என்பதற்காக மாத்திரமே இந்த குழுக்கள் ஐக்கியப்பட்டு நிற்கின்றன. அதன் வரலாற்றில் முதற்தடவையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் உட்பட அண்ணா தி.மு.க.வின் உயர்மட்ட தலைவர்கள் பாரதிய ஜனதாவின் பிரதிநிதியான ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயாலின் வருகைக்காக வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வாசஸ்தலத்தில் பல மணி நேரம் காத்திருந்தார்கள்.
2016 சட்டசபை தேர்தலில் 41 சதவீத வாக்குகளைப் பெற்ற அண்ணா தி.மு.க.வின் தலைவர்கள் மீண்டும் ஒரு தடவை கோயாலுக்காக ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் காத்திருந்தனர்.அந்த ஹோட்டலில்தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்திமுடிக்கப்பட்டன. இறுதியாக பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவுடன் பன்னீர்செல்வம் மதுரையில் நடத்திய சந்திப்பிலேயே எல்லாம் முடிவுக்குவந்தது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாகத்தான் அண்ணா தி.மு.க. இருக்கிறது; தமிழகத்தில் சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களும் அந்த பதாதையின் கீழேயே நடத்தப்படும் என்று ஷா தெட்டத்தெளிவாகக் கூறிவைத்தார்.
பாரதிய ஜனதாவுக்கு அண்ணா தி.மு.க. ஐந்து தொகுதிகளை மாத்திரம் ஒதுக்கியிருக்கக்கூடும், ஆனால், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக கட்சிக்கு செய்யப்பட்டிருக்கின்ற சேதம் பாரதூரமானது என்று அவதானிகள் கூறுகிறார்கள். காவிக் கட்சியை எதிர்த்துநிற்பதற்கான தைரியம் இல்லாததால் அண்ணா தி.மு.க. மிகவும் கூடுதலாக பணிந்துவிட்டது என்று சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிருவாக திணைக்களத்தின் தலைவரான பேராசிரியர இராமு மணிவண்ணன் கூறினார்.
" கடந்த இரு வருடங்களில் அண்ணா தி.மு.க.வின் தவைலவர்கள் குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் கடந்த காலத்தில் கட்சிக்கு இருந்த மரபுகள் சகலவற்றையும் இல்லாமல் செய்துவிட்டார்.எம்.ஜி.இராமச்சந்திரனும் அவருக்குப் பிறகு ஜெயலலிதாவும் வளர்த்தெடுத்த மாபெரும் கட்சியின் கட்டுமானத்தை பனானீர்செல்வம் சிதறடித்துவிட்டார்.ஜெயலலிதாவிடம் என்னதான் குறைபாடுகள இருந்தாலும் அவரால் அரசியல் சதுரங்கத்தில் கருணாநிதியையும் தி.மு.க.வையும் மடக்கிவைத்திருக்கக்கூடியதாக இருந்தது " என்று மணிவண்ணன் கூறினார்.
" பாரதிய ஜனதாவின் வாசற்படித் தரைவிரிப்பு என்று அண்ணா தி.மு.க.வை அழைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அவ்வாறு தான் பாரதிய ஜனதாவினால் அண்ணா தி.மு.க. நடத்தப்படுகிறது " என்று அவர் சொன்னார்.
( டெக்கான் ஹெரால்ட் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM