பலக்கொட் பகுதியிலுள்ள ஜெய்ஷ் -இ-மொஹம்மட் பயிற்சி முகாம்கள் மீது நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் அறிக்கையொன்றை இன்றையதினம் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 14 ஆம் திகதி பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு ஜெய்ஷ் -இ-மொஹமட் நடத்திய ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சென்ரல் ரிசர்வ் பொலிஸ் படையணியைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
பஹாவல்பூரை அதன் தலைமையலுவலகமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹமட் மசூட் அசாரினால் தலைமை தாங்கப்பட்டு கடந்த இரு தசாப்தங்களாக பாக்கிஸ்தானில் செயற்பட்டு வருகிறது.
இந்த இயக்கம், ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டதென்பதுடன், 2001 டிசம்பரில் இந்தியப் பாராளுமன்றம் மற்றும் 2016 ஜனவரியில் பத்தன்கோட் விமானத்தளத்தின் மீதான தாக்குதல் உட்பட, ஒரு தொடரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானதாகும்.
பாக்கிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலுள்ள பயிற்சி முகாம்களின் அமைவிடம் பற்றிய தகவல்கள் காலத்திற்கு காலம் பாக்கிஸ்தானிற்கு வழங்கப்பட்டு வந்தது.
என்றாலும், பாக்கிஸ்தான் அப்பயங்கரவாத முகாம்களின் இருப்பை மறுத்தே வந்துள்ளது. பல நூற்றுக் கணக்கான ஜிகாதிகளைப் பயிற்றுவிப்பதற்கான பெரும் பயிற்சி வசதிகள் பாக்கிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமல் அந்நாட்டில் செயற்பட்டிருக்க முடியாது.
ஜிகாதிகள் பாக்கிஸ்தானினுள் பயிற்றுவிக்கப்படுவதையும் ஆயுதம் பெறுவதையும் தடை செய்வதற்கு ஏற்ப ஜெய்ஷ்-இ-மொஹம்மட்டிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தது.
பாகிஸ்தான் அதன் மண்ணில்,பயங்கரவாதத்தின் உட்கட்டமைப்புகளை இல்லாதொழிப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஜெய்ஷ் -இ-மொஹம்மட் மற்றுமொரு தற்கொலை பயங்கரவாதத் தாக்குதலை நாட்டின் பல்வேறு பாகங்களில் நடத்த எத்தனிப்பதாகவும் மற்றும் இந்த நோக்கத்தில் பிடாயின் ஜிகாதிகளை பயிற்றுவிப்பதாகவும், நம்பகமான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன.
அப்படியான தாக்குதல்களுக்கான சாத்தியத்தின் பின்னணியில், ஒரு தற்காப்பு ரீதியிலான தாக்குதல் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது.
இன்று அதிகாலை நேரத்தில், புலனாய்வுத் தகவல் அடிப்படையிலான ஒரு நடவடிக்கையில், இந்தியா, பாக்கிஸ்தானின் பலக்கொட் பகுதியிலுள்ள ஜெய்ஷ் -இ-மொஹம்மட்டின் மிகப் பெரிய பயிற்சி முகாம் மீது தாக்குதலை நடாத்தியது. இந்த நடவடிக்கையில், ஜெய் -இ-மொஹம்மட் இயக்கத்தைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள், பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட கட்டளை ஸ்தானத்திலுள்ளோர்கள் மற்றும் பியாதீன்களாகப் பயிற்றுவிக்கப்படும் பல ஜிகாதி குழுக்கள் அழிக்கப்பட்டனர்.
இந்த முகாம் வசதியின் பொறுப்பாளர் ஜெய்ஷ்-இ-மொஹம்மட்டின் தலைவர் மசூட் அசாரின் மைத்துனரான மௌலான யுசூப் அசார் (அல்லது உஸ்தாத் கோரி) ஆவார்.
பயங்கரவாதம் எனும் பீடையுடன் போராடுவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியாகவும் மற்றும் தீர்மானமிக்க வகையிலும் அனைத்து அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பற்றுறுதி கொண்டுள்ளது. எனவே, இந்த இராணுவ ரீதியிலானதல்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கை விசேடமாக ஜெய்ஷ்-இ-மொஹம்மட் முகாமை இலக்காகக் கொண்டதாகும்.
தாக்குதல் இலக்கு பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்டது. இந்த முகாம் பொதுமக்கள் இல்லாத ஒரு மலைமுகட்டின் மீதாக அடர்ந்த காட்டில் அமைந்திருந்தது. வான் தாக்குதல், சற்று நேரத்திற்கு முன்பு தான் நடாத்தப்பட்டதென்பதால், மேலதிக தகவல்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்திற்காக அதன் கட்டுப்பாட்டிலுள்ள மண்ணை உபயோகிப்பதில்லை என பாக்கிஸ்தானிய அரசாங்கம் 2004 இல் உறுதியான பற்றுறுதி அளித்திருந்தது. பாகிஸ்தான் பகிரங்கமாக மேற்கொண்ட அதன் பற்றுறுதிக்கு அமைவாக நடப்பதற்கும் மற்றும் ஜெய்ஷ் -இ-மொஹம்மட் மற்றும் ஏனைய பயங்கரவாதக் குழுக்களின் முகாம்களை கலைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பயங்கரவாதிகளை அவர்களது நடவடிக்கைகளுக்காக பொறுப்புக்கூற வைக்குமெனவும் நாம் எதிர்பார்க்கிறோம் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM