(வீ.பிரியதர்சன்)
இலங்கை அரசியலில் வெள்ளிக்கிழமையென்றால் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அதுவும் நேற்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இன்றைய வெள்ளிக்கிழமை (14-12-2018) மிகவும் முக்கியம் வாய்ந்த வெள்ளிக்கிழமையாக இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலையில் பார்க்கப்படுகின்றது.
அன்று ஒக்டோபர் மாதம் (26-10-2018) ஜனாதிபதியால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய வெள்ளிக்கிழமையில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இலங்கை அரசியலில் திருப்பங்கள் நடந்தவண்ணமேயுள்ளன.
அதையடுத்து நவம்பர் மாதம் (09-11-2018) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானியொன்றை வெளியிட்டார். இதுவும் இலங்கை அரசியலில் பெரும் திருப்பதையேற்படுத்திய போதிலும், குறித்த வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த விசாரணை 7 நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழுவால் விசாரணை செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் நீதியரசர்களான புவனகே அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட, முர்துபெர்னாண்டோ, பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியர்கள் குழாம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்தமாணியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு நேற்றைய தினம் உயர்நீதிமன்றால் வெளிடப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடையும் வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்கமுடியாதென்றும் அவ்வாறு பாராளுமன்றைக் கலைக்கமுற்பட்டால் பாராளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப்பெற்று பாராளுமன்றை ஜனாதிபதியினால் கலைக்க முடியுமென்றும் தீரப்பு வழங்கப்பட்டது.
பிரதமராக ரணிலை நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடம்பிடித்து வருகின்ற நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியினர் பிரதமருக்கான எமது தெரிவு ரணில் தான் என்று ஒரே பிடியாக இருக்கின்றனர்.
இதற்கிடையில் பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமராக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி நியமிக்கப்பட்ட, மஹிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தனது அணியினரை நேற்றிரவு விஜேராம மாவத்தையிலுள்ள இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று நடத்தப்படும் விசாரணைகளில் அளிக்கப்படும் உத்தரவுக்குப் பின்னரே இறுதி முடிவை எடுப்பது என்று இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக ஜனாதிபதி சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது திங்களன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும். ஜனாதிபதியாக நான் தொடர்ந்தும் செயற்படுவேன். ஐக்கிய தேசிய முன்னணி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டுமென்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஜனாதிபதியாக இருக்கும் வரையில் ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நான் செயற்படுவேன். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் அதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான 9 பேரடங்கிய குழுவொன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கி்ரமசிங்க தலைமையில் கூடிய ஆராய்ந்தனர்.
இவ்வாறிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இடையில் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் எனினும் ரணில் விக்கிரமசிங்க இதற்கு உடன்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் அமையவுள்ள அரசாங்கம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதுடன் சில நிபந்தனைகளுடனே பிரதமர் பதவியில் ரணிலை நியமிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களைப் புரிந்துள்ளார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அவருக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட் கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமைய பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்றும் வெள்ளிக்கிழமையென்பதால் பிரதமராக மீண்டும் ஜனாதிபதியினால் ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையடிப்டையில் நியமிக்கப்பட்டு இலங்கை அரசியலில் மற்றுமொரு அரசியல் திருப்புமுனையை ஏற்படலாமென்ற கோணத்தில் பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM