பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 35 பேர் பலியானதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலைய சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ள படத்தில் 3 இளைஞர்கள் கை தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.
படத்தில் வலது பக்கத்தில் இருக்கும் நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் குறித்த நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாகம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை நாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
தாக்குதல் நடந்தது எப்படி?
மேலும் ஸவன்டெம் விமான நிலைய தாக்குதல் நடந்தது எப்படி? என்று ஸவன்டெம் நகர மேயர் பேட்டியளித்துள்ளார்.
விமான நிலையத்துக்கு ஒரு வாகனத்தில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்துள்ளன.
முதலில் மூன்று பேர்களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இன்னொரு நபர் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்காமல் அங்கிருந்து ஓடியிருக்கக்கூடும்.
தனது பேட்டியின்போது இவ்வாறு தெரிவித்த ஸவன்டெம் நகர மேயர் பிரான்சிஸ் வெர்மெய்ரென், தப்பிச்சென்ற மூன்றாவது நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருவதாக கூறி, குறித்த நபரின் புகைப்படங்களை நிருபர்களிடம் காண்பித்தார்.
முகத்தில் கண்ணாடி அணிந்தபடி, வெள்ளைநிற மேல் உடை, கருப்பு தொப்பியுடன் காணப்படும் குறுந்தாடி நபர், ஒரு டிராலியில் தனது சூட்கேசை வைத்து தள்ளிச்செல்லும் காட்சிகள் அந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆந் திகதி மும்பை தாக்குதல் பாணியில் துப்பாக்கி களால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தினர்.
பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி கைது
130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களில் சலா அப்தே சிலாம் என்ற தீவிரவாதிதான் முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. அந்த தீவிரவாதி 4 நாட்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டார்.
பாரீஸ் தாக்குதல்களை தொடர்ந்து, பிரசல்ஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருந்து கொண்டே வந்தது. இதை அந்த நாட்டின் உள்துறை மந்திரி ஜோன் ஜாம்பன் 2 நாட்களுக்கு முன் உறுதிபடுத்தினார்.
இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “சலா அப்தே சிலாம் கைது செய்யப்பட்டுள்ளதால் பழிவாங்கும் நடவடிக்கைகள் வரலாம். நாடு உச்சக் கட்ட உஷார் பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
விமான நிலையத்தில் குண்டுவெடிப்புகள்
இந்த நிலையில் பிரசல்ஸ் நகரின் சர்வதேச விமான நிலையத்தில் (ஜாவெண்டம் விமான நிலையம்) நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணி) அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. அதில் விமான நிலையம் குலுங்கியது. கட்டிடங்கள் சேதம் அடைந்தன. புகை மண்டலம் உருவானது. பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பதற்றத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், பொலிசாரும் அங்கு விரைந்தனர். விமான நிலையம் சுற்றி வளைக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு
இந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஐரோப்பிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள மேல்பீக் சுரங்க ரயில் நிலையத்திலும் ஒரு குண்டு வெடித்தது.
இதனால் அங்கு பயணிகள் பதைபதைத்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த இடங்கள் போர்க்களம் போன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 பேர் பலி
இந்த குண்டுவெடிப்புகளில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இறுதியாக கிடைத்த தகவல்கள், 35 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றன.
இதில் விமான நிலைய குண்டுவெடிப்புகளில் 20 பேரும், சுரங்க ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 15 பேரும் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தற்கொலைப்படை தீவிரவாதிகள்
விமான நிலைய குண்டுவெடிப்புகளை தற்கொலைப்படை தீவிரவாதிகள்தான் நடத்தி உள்ளதாக நம்பப்படுகிறது. குண்டு வெடிப்புகள் நடப்பதற்கு முன்பாக அரபி மொழியில் பலத்த சத்தத்துடன் கோஷம் போட்டதை கேட்க முடிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பாரீஸ் தாக்குதல் குற்றவாளி சலா அப்தே சிலாம் கைது செய்யப்பட்டதின் எதிரொலியே இந்த தாக்குதல்கள் என நம்பப்படுகிறது. விமான நிலையத்தில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு பெல்ட் ஒன்று கைப்பற்றப்பட்டது. பலியான தற்கொலை படைப்படை தீவிரவாதியின் உடல் அருகே ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
விமான நிலையம், ரயில் நிலையம் மூடல்
குண்டு வெடிப்புகளை தொடர்ந்து பிரசல்ஸ் விமான நிலையமும், நகரில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன. அங்கிருந்து இந்தியா, டொராண்டோ (கனடா), நேவார்க் (அமெரிக்கா) நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேவார்க், டொராண்டோவில் இருந்து பிரசல்ஸ் செல்லவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. யூரோ ஸ்டார் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பெல்ஜியம்-பிரான்ஸ் எல்லையும் மூடப்பட்டது.
தேடுதல் வேட்டை
தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பிரசல்ஸ் நகர மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரசல்ஸ் நகரில் வீடு, வீடாக தீவிரவாதிகளை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை நடத்தியது தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று அறிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM