நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி - 2)

28 Oct, 2018 | 07:20 PM
image

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி - 1)

அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கூட உபயோகப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு நான் அதிகாரத்தைக் கொடுத்திருந்தேன். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? கடந்த மூன்று வருட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக மிக மோசமான அவல நிலையே ஏற்பட்டிருக்கின்றது. எனது உரை இன்னும் நீடிக்கும் என்பதால் காலத்தை நான் வீண்விரயம் செய்ய விரும்பவில்லை. ஆயினும் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது அந்த விடயங்களைப்பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என நான் எண்ணியிருக்கின்றேன். இந்த சம்பவங்களின் பின்னணியில் இரண்டு நாட்களுக்கு முன் நான் எடுத்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்குமான முடிவை நான் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணத்தை மிகுந்த மதிப்புடன் நான் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகின்றேன்.

எனது அரசியல் வாழ்க்கைக்கு இன்று 51 வருடங்களுக்கு மேலாகின்றது. கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தோன்றிய நாமல் குமார எனும் நபர் என்னையும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் கொலை செய்யவிருக்கும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நான் பணித்தேன்.

ஆனால் பொலிஸ்மா அதிபர் முதலில் அந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரிடம் கையளித்திருக்கவில்லை. பொலிஸின் வேறொரு பிரிவினரிடமே அதனைக் கையளித்திருந்தார். அதன்போது அந்த விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைமை ஏற்படும் என்பதை நான் உணர்ந்தேன். அவ்வாறு ஊடகங்களில் வெளிவந்த கொலை சதி திட்டகளைப் பற்றி விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த தகவல்களை முன்வைத்து 48 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்பாகவே பொலிஸ்மா அதிபர் அந்த தகவல்களை வெளியிட்ட நபர் சாட்சியமாக கையளித்த ஒலிநாடாக்கள் சந்தேகமானவை என அறிவித்தார். நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்ட ஒலிநாடா மீதான எந்தவிதமான தொழினுட்ப விசாரணையையும் மேற்கொள்ளாது அந்த ஒலிநாடா சந்தேகத்திற்குரியது எனக்கூறும் அளவிற்கு பொலிஸ்மா அதிபரின் அந்த கீழ்த்தரமான செயற்பாடு ஒரு பொலிஸ்மா அதிபருக்கு உகந்ததா என மதிப்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த சதி பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் புலனாய்வு பிரிவினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்தின் புலனாய்வு குழுக்களும் இதுவரைப் பெற்றுக்கொடுத்திருக்கின்ற தகவல்களின்படி இந்த சதித்திட்டம் மிகப் பாரதூரமானதாகவே இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு இதுவரை அறியக் கிடைக்காத பெருமளவு தகவல்கள் இது தொடர்பில் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்துடன்சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பற்றிய தகவல்களையும் இந்த நபர் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அதேநேரத்தில் இந்த விசாரணைகளுக்கு பாதகமான முறையில் பலவிதமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்புமிக்க சில அதிகாரிகள் இந்த விசாரணைகளின் முக்கியமான திருப்புமுனைகளில் கைநழுவிச் செல்லும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் நாட்டு மக்களாகிய எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய உங்களிடம் நான் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்வது இந்த அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு பின்னால் என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும். இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மதிப்பிற்குரிய 225 அங்கத்தவர்களுக்கும் வெளிப்படையாக நான் அழைப்பு விடுக்கின்றேன். மிகத் தூய்மையான எண்ணத்துடன் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அரசியல் நெருக்கடி இப்போது பெருமளவு தணிந்திருக்கின்ற நேரத்தில் எமது நாட்டின் எதிர்காலத்திற்காக நான் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்துடன் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை அமைக்கும் எனது தீர்மானத்துடன் உங்களதும் எனதும் இந்த உன்னத தாய் நாட்டிற்காக அந்த உன்னத குறிக்கோளை அடைந்து ஜனநாயகத்தையும் மக்களிள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி, மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, மக்களின் வரப்பிரசாதங்களை பலப்படுத்தி வளமான பொருளாதாரம் மிக்க பண்புமிக்க மிகவும் ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப இந்த புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த கால கசப்பான அனுபவங்களைப் பற்றி நான் இங்கே மீண்டும் குறிப்பிட வேண்டும். அர்ஜுன் மகேந்திரன் அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்துவந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதற்குக் காரணம் இந்த நாட்டில் யாவரும் அறிந்தவாறு அர்ஜுன் மகேந்திரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மிகவும் நெங்கிய நண்பன் என்பதனாலேயே ஆகும். கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் தேசிய கைத்தொழில் துறை நலிவடைந்து சென்றிருக்கின்றது.

அவற்றை ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கத்திடமிருந்து போதுமான அளவுஒத்துழைப்பு கிடைக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகளில் மாத்திரம் நம்பிக்கை வைத்து உள்நாட்டு கைத்தொழிலாளர்களையும் உள்நாட்டு வர்த்தகர்களையும் நலிவடையச் செய்யும் பொருளாதாரக் கொள்கையே முக்கியமாக இங்கே செயற்படுத்தப்பட்டது. இந்தப் பொருளாதாரக் கொள்கையின் குறைபாடுகள் ஒருபுறத்தில் இருக்க மறுபுறத்தில் இந்தப் பொருளாதாரத்தை சிதைத்த மேற்குறிப்பிட்ட மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு துரிதமாக தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கான சட்டம் மீதான திருத்தங்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்த்தீர்களா என நான் உங்களிடம் வினவ விரும்புகின்றேன். சட்ட நிபுணர்கள், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட இந்த விசாரணைகளை நடத்திய அனைத்து அதிகாரிகளும் இந்த வருட முற்பகுதியிலேயே இப்போது இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமாயின் அதற்கு குறைந்தபட்சம் 15 வருடங்களுக்கு மேல் செல்லும் என தெரிவித்திருக்கின்றார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீளப் பெறுவதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் 15 வருடங்களுக்கு முன் இயலாத காரியம் என்பதை சட்ட நிபுணர்கள் எனக்கு விளக்கமளித்திருக்கின்றார்கள். அதற்குத் தீர்வாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இந்த விசாரணையை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்து மக்களின் இந்த பெருந்தொகை பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஒரு வருடத்திற்குள் விசாரணைகளை நடத்தி முடித்து பெறுபேறுகளைப் பெறுவதற்கு இயலும் வகையில் இலஞ்ச, ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பற்றி எமக்கு அறியத் தரப்பட்டது. குறிப்பிட்ட அந்த மாற்றங்களை செய்து இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி அலுவலகம் ஊடாக பாராளுமன்றத்திற்கு அதனை அனுப்பி வைத்தோம்.

ஐந்து மாதங்கள் கடந்தும் அவை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த ஆவணம் சபாநாயகர் அலுவலகத்தின் பெட்டிகளுக்குள் சென்றுவிட்டன. இதைப்பற்றி நான் மிகத் தீவிரமாக விசாரித்தேன். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களிடமும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியொகத்தர்களிடமும் வினவினேன். அதற்கமைய கடந்த வாரம் பாராளுமன்றத்தின் முன் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்ட சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆயினும் அதற்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதை திகதி குறிப்பிடப்படாது பின்போடப்பட்டிருக்கின்றது. அவ்வாறு பின்போடப்பட்டது ஏன்? எவரின் தேவைக்காக? எவரின் தலையீட்டினால்? இதனால் பொதுமக்களுக்கு சொந்தமான இந்த பெருந்தொகைப் பணம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கிடைக்காது போகின்றது.

குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்க 15 முதல் 20 வருடங்கள் வரை செல்லும். இந்த சீர்திருத்தம் திகதி குறிப்பிடப்படாது பின் போடப்பட்டதன் நோக்கம் இதுவே. கடந்த காலங்களில் ஈஏபி நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒரு சம்பவத்தை நீங்கள் ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். அந் நிறுவனத்தை வெளிநாட்டு வர்த்தகர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விலைமனுக் கோரல் இல்லாத ஊழல் நிறைந்த ஒரு கொடுக்கல் வாங்கலாகவெ ஈஏபி நிறுவனத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன. இதைப் பற்றியும் எதிர்வரும் காலங்களில் விரிவான விசாரணைகளை நடத்த எண்ணியிருக்கின்றேன். பெறுமதிமிக்க விசேட விலைமனுக்;கோரல்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. கட்டிட நிர்மாணப் பணிகளும் விலைமனுக் கோரலின்றி கொடுக்கப்பட்டிருக்கின்றன. விலைமனுக் கோரல்கள் அற்ற விதத்தில் அமைச்சரவைக்கு அவசரமான ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டு அவை மீதான எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாது இந்த பாரிய நிர்மாணப் பணிகள் அந்நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. கண்டி அதிவேக வீதி அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட காணி பற்றிய விசேட விதிமுறைகள் சட்டம் மற்றும் காணி வங்கியை ஸ்தாபிப்பதற்கான சட்டத்திற்கு நான் எனது கடும் எதிர்ப்பை தெரிவித்து அவற்றை பிற்போட்டேன். அமைச்சரவையில் பெரும்பாலும் அமைச்சர்கள் இச்சட்டத்தினை எதிர்க்கின்றார்கள்.

கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட காணிகள் பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுமாயின் நமது இந்த தாய் நாட்டின் அனைத்து நிலங்களையும் எந்தவொரு தங்குதடைகளுமின்றி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சொந்தமாகவே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். டி.எஸ்.சேனாநாயக்க, காமினி திசாநாயக்க, பண்டாரநாயக்க ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட விவசாயக் குடியேற்றங்கள் ஒட்டுமொத்தமாகவே இதனால் அழிந்துவிடும். கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்த நாட்டின் காணி உரிமை பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளை முழுமையாக நாம் அப்புறப்படுத்த வேண்டும்.

அதேபோன்று இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சபை பாரிய ஊழல்களைக் கொண்டதாகும். அதனை இரத்துச் செய்வது பெரும் சவாலாகவே இருந்தது.இருப்பினும் கடும் முயற்சியின் பின்னர் அதை நான் இரத்துச் செய்தேன். அச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஊழல் மிக்கவையாக இருந்தன. அதற்கான ஒரு மாற்றுத்திட்டமாகவே நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் நான் தேசிய பொருளாதார சபையை உருவாக்கினேன். அந்த தேசிய பொருளாதார சபையை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அந்த பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணருக்கான மாதாந்த கொடுப்பனவு உலக அங்கீகாரத்தைப் பெற்ற எம்முடன் தொடர்புகளை வைத்திருக்கும் விசேட சர்வதேச நிதி நிறுவனம் மூலமே வழங்கப்பட்டது. அந்த சர்வதேச நிதி நிறுவனம் பெற்றுக்கொடுத்து வந்த மாதாந்த கொடுப்பனவு கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுத்த ஆலோசனைக்கமைய நிறுத்தப்பட்டது. அவ்வாறு தேசிய பொருளாதார சபையினை பலவீனப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை தடுப்பதற்கும் தன்னாலான அனைத்தையும்அவர் செய்து வந்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முரட்டுத்தனமான தீர்மானங்களே இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை நான் தெளிவாகக் கூறவேண்டும். இதனால் இவ்வாறான அனைத்து செயற்பாடுகளுக்கும் எனக்கிருந்த ஒரே மாற்றுவழி கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக நியமித்து புதிய அரசை அமைப்பது மாத்திரமே ஆகும். மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக பதவியில் அமர்த்தி இந்த புதிய அரசாங்கத்தை அமைப்பது இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான செயலாகுமென கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சுமத்துகின்றது. என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானமானது சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளின்படி அரசியல் யாப்புக்கு அமைவாக எந்தவித முரன்பாடுகளும் அற்ற விதத்திலேயே இந்தப் பதவிப் பிரமாணமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையும் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதும் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த செயற்பாடுகள் அரசியல் யாப்புக்கு முரனானவை என்ற குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்பதை மிகுந்த கௌரவத்துடன்தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல் இன்று நிலவுகின்ற அரசியல் நிலைமையின்படி இந்த நாட்டின் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவம், கடற்படை, வான்படை, படைத்தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு எனக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பைக் கொண்டு நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பலப்படுத்தி ஜனநாயகக் கட்டமைப்பை பலப்படுத்தி நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை இலகுவாக முன்னெடுப்பதற்கு வசதியளிக்கும் வகையில் இந்த அனைத்துதரப்புகளும் அவர்களது கடமைகளை முன்னெடுத்து வருவதையிட்டு அவ்வனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று எனது இந்த உரையை பூர்த்தி செய்யும் நேரத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் என்னை ஜனாதிபதியாக நியமிப்பதில் பாரிய அர்ப்பணிப்புகளை செய்தார்கள் என்பதை நினைவு கூறும் அதே நேரத்தில் நமது இந்த தாய் நாட்டின் சுபீட்சத்திற்காக அன்று நாம் ஏற்படுத்திக் கொண்ட குறிக்கோள்களை அடைய நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எனக் கூறிக்கொள்வதுடன் உங்களுக்கும் உங்களது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நன்நோக்குமிக்க தேசப்பற்றுமிக்க நாட்டின் சாதாரண குடிமகனின் வேதனைகளை உணர்கின்ற சேனாநாயக்க, ஜயவர்தன, பிரேமதாச ஆகியோரின் தூரநோக்கையும் குறிக்கோள்களையும் பாராட்டுகின்ற ஒரு தலைவரை எதிர்காலத்தில் நீங்கள் பெறுவீர்களாயின் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்ற அந்த உன்னத குறிக்கோளை அடைய முடியும் என நான் நம்புகின்றேன். ஆகையால் எனது நாட்டுக்காகவும் எனது அன்புக்குரிய மக்களுக்காகவும் நான் மேற்கொண்ட இந்த அரசியல் தீர்மானத்தினால் பொருளாதார நெருக்கடியை தீர்த்து அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான பொருளாதாரத்துடன் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப உயரிய ஆன்மீக சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் எனக்கூறிக் கொள்வதுடன் அதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அனைத்து அரச ஊழியர்களையும்சகல அரசியல்வாதிகளையும் மதிப்புக்குரிய மகா சங்கத்தினரையும் ஏனைய மதத் தலைவர்களையும் மிகுந்த கௌரவத்துடன் அழைப்பதுடன் இப்பணிகளை இனிதே நிறைவேற்ற உங்களது உத்துழைப்பையும் ஆசீர்வாதத்தையும் நல்குமாறு மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

வணக்கம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37