பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் இது விடயத்தில் தலையீடு செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண சபை அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் ஊவா மாகாணசபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரியதுடன் மாதச்சம்பளம் வழங்கப்படல் வேண்டுமென்று பிறிதொரு பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இவ் இரு பிரேரணைகளும் ஒரே விடயத்தை முன்னிலைப்படுத்துவதால், இரு பிரேரணைகளும் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சச்சிதானந்தன் தொடர்ந்துபேசுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டக் கோரிக்கை நியாயமானது. நான்கு தலைமுறைகளாக எமது மக்கள் சம்பள உயர்வுக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் போராடி வந்துள்ளனர். தற்போதைய நிலையில் தினச்சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டியது அதி முக்கியமாகும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்படுகையில் அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்புள்ளி என்ற அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மாத்திரம் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகளை நம்பியிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இலங்கையின் தேயிலைக்கு “சிலோன் டி” என்று தனியானதோர் முன்னணி அடையாளம் இருந்து வருகின்றது. ஆனால் அத் தேயிலையை உற்பத்திசெய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சொற்பமேயாகும்.
இந்த சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமையினால், பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை தாண்டவமாடுகின்றது. அத்துடன் குறிப்பாக 68 பெருந்தோட்டங்கள் ஊவா மாகாணத்தில் காணப்பட்டாலும் அத்தோட்டங்களில் 44 தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் சம்பளம் 530 ரூபாவாகும். இச்சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள முடியாமையினால் தோட்டங்களில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டுவெளியேறி வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த தேர்தல் காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்கக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவோம் என்றார் ஆனால் அவ் உறுதி நிறைவேற்றப்படவில்லை. தொடர் போராட்டங்களின் மத்தியில் தங்களது வாழ்க்கையையும் உரிமையையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இழந்துவிடக்கூடாது. ஆகவே, 22 தோட்டக் கம்பனிகளையும் அரசுபொறுப்பேற்பதுடன் பெருந் தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் நேரடியாக தலையிடல் வேண்டும் என்றார்.
சபைஉறுப்பினர், ஆ. சிவலிங்கம் பேசுகையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாதினச் சம்பள உயர்வு வழங்கப்படுமேயானால் மகிழ்ச்சியடைவது நாமாகவே இருக்கும். இ.தொ.கா. வின் உப தலைவராக இருக்கும் நான் தோட்டத் தொழிலாளியாக இருந்து வந்தவன். ஆகையினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உண்மை நிலையினை நான் அறிந்தவன் தெரிந்தவன் அனுபவப்பட்டவன்.
தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வாக 920 ரூபா என்ற ரீதியில் வழங்கவே முடிவு செய்துள்ளது. சம்பள உயர்வுபற்றி புரட்சிகர வார்த்தைகளைப் பேசலாம். ஆனால், அது நடைமுறைக்கு உதவாது.
இ.தொ.கா. என்றுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் ஏற்பட அனுமதிக்காது. ஆகையினால் தான் அவர்கள் தொடர்ந்தும் எமது தலைமையை ஏற்று, எமது அமைப்பிலேயே தொடர்ந்தும் அங்கம் வகித்து வருகின்றனர் என்றார்.
இப் பிரேரணை விவாதங்களுக்குப் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்ததால், அப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM