“இலங்கையில் தேயிலை பெருந்தோட்ட சமூகம்” எனும் 150 வருடங்களை நினைவுகூரும் நூல் வெளியீடு எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அறிமுகப்படுத்தப்பட்டு 150 வருடங்களாகி விட்டன. (1867-2017) இத்தொழில் துறையின் மேம்பாட்டுக்கென கடந்த நான்கு அல்லது ஐந்து தலைமுறையினராக தங்களது உடலையும் உழைப்பையும் முழுமையாக அர்ப்பணித்த இந்திய வம்சாவளி மலையக சமூகத்தை நினைவு படுத்தும் வகையில் நூல் தொகுப்பானது வெளியிட சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நூல் மலையக மக்களின் சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு தளங்களில் ஏற்பட்டுள்ள அசைவியக்கத்தை ஆராய்கின்ற நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டுரை ஆசிரியர்களில் பெரும்பாலானோர் மலையக சமூகத்தைச்சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் இவர்களுடன் இச்சமூகம் பற்றி நீண்ட காலமாக ஆராய்ந்து வருகின்ற ஆய்வாளர்களுமாக விளங்குகின்றனர். இந்நூலில் மொத்தமாக 28 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பு பின்வருமாறு ஆறு பகுதிகளைக்கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
1) தேயிலைத்தொழில் துறையின் அறிமுகம்
2)கல்வியும் சுகாதாரமும்
3)மலையக தமிழரின் மாறி வரும் சமூக நிலை
4)மனித உரிமை ,ஆட்சி உரிமை மற்றும் அரசியல்
5)மலையக பெண்களின் சமூக நிலையும் தொழில் நகர்வும்
6) பண்பாட்டு அடையாளமும் இலக்கியமும்
இத்தொகுப்பினை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது.
மேலும் இந்திய வம்சாவளி மக்களின் பூகோள அமைப்பான கோபியோ இத்தொகுப்பினை கொழும்பில் வெளியிடுவதற்கான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது.
மலையக மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி கணிசமான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. பல ஆய்வுகள் நூல் வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில மொழியிலேயே வெளிவந்துள்ளன. சமூக பிரச்சினைகளை மையப்பொருளாகக்கொண்டு ஆய்வுக்கருத்தரங்குகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. சிலவற்றைத் தவிர இவை யாவும் ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
இருப்பினும் யாவரும் வாசிக்கக்கூடியவாறும் கருத்துப்பரிமாறல்களுக்கு உதவும் வகையிலான ஆவணங்கள் தமிழ் மொழியில் போதுமானதாக இல்லை என்பது உணரப்படுகின்றது.
மலையகத்தின் இன்று ஆசிரியர்களாக கடமையில் இருப்பவர்களில் அநேகமானோர் உயர்கல்விக்கான ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆய்விற்கான மலையக மக்கள் பற்றிய தகவல்களை தேடிக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குபவர்களாக உள்ளனர்.
தமிழ் வாசகர்கள் மலையக மக்களின் இன்னோரன்ன விடயங்களில் தெளிவைப்பெற்றுக்கொள்ள நாளாந்தம் வெளியாகும் பத்திரிகைகளுக்கு மேலாக வேறு ஆவணங்களை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
இவ்வாறான இடைவெளியை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதோடு கடந்த தசாப்தங்களாக தமது உணர்வு பூர்வமான வாழ்க்கையை தேயிலைச்செடிக்கு அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் நோக்கில் இத்தொகுப்பு வெளியிடப்படுகிறது.
இத்தொகுப்பிற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் மலையக சமூகம் பற்றி இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும் இடம்பெறும் கருத்தரங்களில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து இம்மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் அறியும் வண்ணம் செயலாற்றி வரும் பேராசிரியர் சூரியநாராயணன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
மட்டுமன்றி மூத்த அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமான பி.பி.தேவராஜ், நோர்வே நாட்டின் சூழலியல் நிபுணர் பேராசிரியர் சண்முகரத்தினம் ஆகியோரின் வாழ்த்துச்செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மலையகத்தில் நீண்ட காலம் ஆசிரியராக பணி புரிந்து பின்னர் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியராக விளங்கிய ம.கருணாநிதி ,மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி ஆகியோர் நூல் விமர்சனத்தை வழங்கி வைப்பர்.
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதிய பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தொகுப்புரையை நிகழ்த்துவார்.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
- கலாநிதி.ஏ.எஸ்.சந்திரபோஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM