(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்ற போது அவரது பாதுகாப்புக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறித்து சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி. கொழும்பு பிரதான நீதிவானுக்கு பீ 648 எனும் இலக்கத்தின் கீழ் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அத்துடன் இந்த விசாரணைகளில் ஜனாதிபதி அமெரிக்காவின் நியூயோர்க் நகர் நோக்கி பயணிக்கும் போது, டோஹா கட்டார் விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரின் கைகளில் இருந்த அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜாசிங்க விஜேநாயக்க மலித இசுரு என்பவரே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. யால் நீதிமன்றுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சம்பவம் வருமாறு:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செபடம்பர் 25 ஆம் திகதி ஐ. நா. கூட்டத்தொடரில் உரையாற்றினார். இதற்காக அவர் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அரச அதிகாரிகளும் சென்றனர்.
அந்த விஜயத்துக்கு முன்னர் அரச உளவுத் துறை பணிப்பாளரிடம் இருந்து ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து அறிக்கை பெறப்பட்டது.
அதில் ஜனாதிபதி அமெரிக்கா சென்று ஐ. நா. கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது அல்லது வேறு சந்திப்புக்களை நடாத்தும் போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஐ. நா. வளாகத்துக்குள்ளோ அல்லது சந்திப்புக்கள் நடக்கும் இடங்களிலோ இடம்பெறும் என கூறப்பட்டது. இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் எனக் கூறப்படும் ருத்ரகுமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரியவந்தது.
ஜனாதிபதி தலமையிலான குழுவினர் செப்டம்பர் 23 ஆம் திகதி நியூயோர்க்கை அடைந்தனர். அவர்கள் அங்கு பார்க் அவனியூ லொஸ் ரீஜென்ஸி எனும் ஹோட்டலில் தங்கியிருந்தனர். அதில் இலங்கை ஜனாதிபதிக்கு மேலதிகமாக இஸ்ரேல் ஜனாதிபதி உள்ளிட்டோரும் தங்கியிருந்தனர்.
இந் நிலையில் ஜனாதிபதி குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த அறை இலக்கம் உள்ளிட்ட அவரது பாதுகாப்பு குறித்த மிக இரகசிய தகவல்கள் ஒரு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அவ்விணையத்தளத்தில் ஜனாதிபதி அமெரிக்கா செல்லும் போது அவரது குழுவினருடன் இருக்கும் விமானத்தில் வைத்து எடுக்கப்பட்ட படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இதனைவிட ஜனாதிபதியின் பயணத்தின் இடை நடுவே டோஹா கட்டார் விமான நிலையத்தில் ஜனாதிபதி செல்லும் போது சந்தேகத்துக்கு இடமாக நடந்துகொண்ட ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஜாசிங்க விஜே நாயக்க மலித்த இசுரு என்பவரே இவ்வாறு விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் இருந்த அப்பிள் ரக கையடக்கத்தொலைபேசியும் கையேற்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி குறித்த தகவல்கள் அதிலும் அதி இரகசியமான பாதுகாப்பு குறித்த தகவல்கள் எப்படி ஒரு இணையத்தளத்துக்கு சென்றது என்பது குறித்து கணணிக்குற்றங்கள் சட்டத்தின் 24 (6) ஆம் அத்தியாயத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன என சி.ஐ.டி. நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM