பொருளாதார நெருக்கடிகளால் பொதுமக்களுக்கு கசப்பான மருந்தை வழங்குவதாக கூறி நஞ்சை வழங்காதீர்கள் என ஜே.வி.பி. எம்.பி.விஜித ஹேரத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் பாரிய அளவு கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட்டபோது கடன்படு தொகையில் அவை சேர்த்துக்கொள்ளப் படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அப்போது எதிர்க்கட்சியில் அமைதியாக இருந்த நீங்கள் தற்போது அதனை கண்டறிந்து விட்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தவிக்கின்றீர்கள் எனவும் விஜித ஹேரத் எம்.பி. அரசாங்கத்தை கடுமையாகச் சாடினார்.
வியாழக்கிழமை நிதி அமைச்சின் வரிகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
மொத்த உள்நாட்டு உற்பத்தி நூற்றுக்கு நூற்றுப்பத்து சதவீதமாக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கு நூற்றுஐந்து சதவீதகமாக காணப்பட்ட வீழ்ச்சியை 78 சதவீதமாக மாற்றியதாக முன்னாள் ஜனாதிபதி அரசாங்கம் தெரிவித்தது. இதற்காக அவர்கள் பல நேரில்முறைகளைக் கையாண்டார்கள். அதிகளவான கடன்களைப் பெற்றார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடன்களைப் பெற்றார்கள். ஆனால் அந்தக் கடன்களை படுகடனில் உள்வாங்கியிருக்க வில்லை. இதனால் எவ்வளவு கடன் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை அறிய முடியாதிருந்தது.
இவ்வாறான நிலைமைகளை நாம் அன்றைய காலத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தோம். அப்போது எதிர்க்கட்சியில் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். தற்போது 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா கடன் காணப்படுவதாகவும் அதன் தொகை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பிரதமர் சபையில் தெரிவித்துள்ளார்.
இன்று நீங்கள் இந்தக் கடன்களை கண்டுபிடித்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் இருப்பதாக காட்ட முனைகின்றீர்கள். இந்த விடயத்தை நீங்கள் கண்டுபிடிக்க வில்லை. படுகடன்களில் இணைத்துக் கொள்ளாத கடன்களை கூறி உங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றீர்கள்.
மக்களின் வரிச்சுமையை அதிகரிப்பதை மறைக்க முயற்சிக்கின்றீர்கள். அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 10000 ரூபாவை கூட்டுவதாக வாக்குறுதியளித்தீர்கள், தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பளத்தை அடிப்படைச் சம்பளத்துடன் கூட்டுவதாக கூறினீர்கள். ஜனவரியில் நிறைவேற்றுவதாகக் கூறினீர்கள். நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? முடியாது. அதற்காகவே இவ்வாறான கதைகளைக் கூறி வாக்குறுதிகளை மறைக்க முயற்சிக்கின்றீர்கள்.
இவற்றுக்கும் அப்பால் நெல் (50 ரூபா), தேயிலை (80 ரூபா), இறப்பர் (350 ரூபா) உத்தரவாத விலையை வழங்குவதாகவும், உரமானியம் வழங்குவதாகவும் கூறினீர்கள். இன்றுவரை அவை நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளன. விவசாயிகளுக்கு உரமானியத்தை 2500 ரூபாவாக வழங்குவதாக கூறினீர்கள் ஆனால் அதனை வழங்க முடியாதுள்ளது.
2004 ஆம் ஆண்டு 350 ரூபா உரமானியம் வழங்குதல் உட்பட விவசாயக் கொள்கையொன்றை நாம் விவசாயத்துறை அமைச்சைப் பொறுப்பேற்றிருந்த சமயத்தில் உருவாக்கியிருந்தோம். அதனைப் பயன்படுத்திய இன்றுவரையில் செயற்படுகின்றீர்கள். புதிய திட்டங்கள் எவையும் உங்களிடம் இல்லை. இவற்றையெல்லாம் கைவிட்டு தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், நெருக்கடிகளை சந்திப்பதாகவும் கூறுகின்றீர்கள்.
2015 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்படவில்லை. உலக நாடுகள் சோரோஸின் கொள்கையை பின்பற்றியமையால் 2008 ஆம் ஆண்டே நெருக்கடியினைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டன. பொருளாதார சமநிலை அப்போதே குழப்பமடைந்துவிட்டது. 0.28 சதவீதத்தினால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டுவிட்டது. ஆகவே அதனையும் மறைத்து கற்பனை வாக்குறுதிகளையே வழங்கியுள்ளீர்கள். தற்போது வற் வரியினை அதிகரிக்கின்றீர்கள் (பெறுமதிசேர்வரி) வற்வரியை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே கொண்டு வந்தது. அன்று நிதியமைச்சராக சொக்ஸியும் பிரதி நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும் இருந்தார்கள். இன்று மீண்டும் அதனைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான கொள்கைகளை அமுல்படுத்துங்கள். கடந்த அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டு அனைத்தையும் சுவரில் எழுதுவதற்கு முயற்சிக்காதீர்கள் என்றார். இதேவேளை ஊடகவியலாளர்களையும் நெருக்கடிகளில் தள்ளிவிட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் எம்.பி. சுட்டிக்காட்டினார்.அது குறித்து அவர் மேலும் கூறுகையில் ஊடகவியலாளர் களுக்கு கடன் அடிப்படையில் மடிகணினிகளை வழங்கினீர்கள். 9 சதவீதத்தில் 2 சதவீதத்தை ஊடகவியலாளர்களும் 7 சதவீதத்தை அரசாங்கமும் வழங்குவதாக வங்கிகளில் கடன் பெற்றீர்கள். தற்போது அரசாங்கம் செலுத்த வேண்டிய 7 சதவீதத்தையும் சேர்த்து முழுக்கடனையும் செலுத்துமாறு ஊடகவியலாளர்களுக்கு வங்கிகள் நெருக்கடியளிக்கின்றன. தற்போது இதற்கு யார் பொறுப்புக்கூறுவார்கள் எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM