தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது அவை பற்றி பேசுபவர்கள் மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள் என்று சொல்வார்களே. கடந்த ஞாயிறன்று மாலைதீவு மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிக்காட்டி உரத்துப் பேசியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளையும் நீதித்துறையையும் ஊடகங்களையும் படுமோசமான முறையில் கையாண்டு இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த ஜனாதிபதி அப்துல்லா யாமீன் மீதான கடுமையான வெறுப்பை மாலைதீவு மக்கள் தங்கள் வாக்குச்சீட்டுகள் மூலமாக பதிவுசெய்திருக்கிறார்கள்.
சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக, ஜனாதிபதி யாமீன் எதிரணியின் பொதுவேட்பாளர் இப்ராஹிம் முஹமத் சோலீயிடம் படுதோல்விகண்டிருக்கிறார். ஆட்சிமாற்றம் ஒன்றைச் செய்வதில் மாலைதீவு மக்கள் நடந்துகொண்டிருக்கும் முறைக்காக அவர்களை நான் பாராட்டுகிறேன்.
தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் தேர்தல்களுக்கு முன்னர் அசைக்க முடியாதவை என்று கருதப்பட்ட ஆட்சிகள் ஜனநாயக தேர்தல்கள் மூலமாக அண்மைய சில வருடங்களில் பதவியில் இருந்துவிரட்டப்பட்ட மூன்றாவது நிகழ்வாக மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் அமைந்திருக்கிறது. இலங்கையில் 2005 நவம்பர் முதல் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சிக்குரிய முறையில் தோற்கடித்தார். மலேசியாவில் இவ்வருடம் மே மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 60 வருடங்களாக ஆட்சியில் இருந்துவந்த பாரிசான் தேசிய கூட்டணியை பகரான் ஹரபான் ( நம்பிக்கைக்கூட்டணி) தோற்கடித்தது.
மாலைதீவு விவகாரங்களில் நான் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவனல்ல. ஆனால், 2015 -- 2016 காலகட்டத்தில் , த இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளராகப் பணியாற்றியபோது 2015 நவம்பர் தொடக்கம் 2016 ஆகஸ்ட் வரை சுமார் 6 மாதங்கள் மாலைதீவு அரசியல் தொடர்பாகவும் செய்திகளைத் திரட்டும் பணியைச்செய்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் யாமீன் அரசாங்கம் அவரின் சகாக்களுக்கும் சகல எதிர்க்கட்சிசளுக்கும் எதிராகச் செயற்பட ஆரம்பித்தது. உண்மையில் அது முக்கியமான நிகழ்வுகள் நிறைந்த காலகட்டமாகும்.
2015 செப்டெம்பரில் யாமீன் தனது துணை ஜனாதிபதியாக இருந்த அஹமட் அதீப் பதவியிலிருந்து அகற்றி கைதுசெய்தார். யாமீனைக் கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சியில் அதீப்புக்கு தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வருடம் டிசம்பரில் மாலைதீவுக்கு எதிராக தடைகளை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் உறுப்பு நாடுகளையும் ஐரோப்பிய பாராளுமன்றம் கேட்டுக்கொண்டது.
2012 பெப்ரவரியில் " சதி " யொன்றின் மூலமாக பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் 13 வருட சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மருத்துவச் சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து வந்த கடுமையான நெருக்குதல்களையடுத்தே யாமீன் அரசாங்கம் நஷீட்டை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்தது.
2016 பெப்ரவரியில் யாமீன் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த அவரது மருமகள் துன்யா மௌமூன் பதவிவிலகி அரசாங்கத்திலிருந்து வெளியேறினார். அரசாங்கம்எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரைத் தொடர்ந்து கைதுசெய்ததை ஆட்சேபித்தே அவர் அவ்வாறு செய்தார்.அதே நாட்களில் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு யாமீன் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.நான்கு மாதங்கள் கழித்து உள்துறை அமைச்சர் உமர் நஸீரும் பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிகழ்வுகளின் வரிசையை 2018 இல் இடம்பெற்ற நிகழ்வுகளுடன் நான் முடிவுசெய்கிறேன்.இவ்வருட ஆரம்பத்தில் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் கைதுசெய்யப்பட்டார்.அடுத்து யாமீனின் ஒன்றுவிட்ட சகோதரரும் 30 வருடங்களாக மாலைதீவை ஆட்சிசெய்த சர்வாதிகாரியுமான முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் 2018 பெப்ரவரியில் கைதானார்.
யாமீனின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளை முழுமையாக விளக்கிக்கூற காலம்தேவை. நான் எந்த ஊகத்தையும் செய்ய நான் முனையவில்லை.ஆனால், எதிரணியும் சர்வதேச ஊடகங்களின் பல பிரிவுகளும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டன என்பது மாத்திரம் நிச்சயமானது.சரவதேச ஊடகங்களை பெருமளவுக்கு நான் குற்றஞ்சாட்டப்போவதில்லை. ஏனென்றால் யாமீன் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக செய்திகளைச் சேகரிப்பதில் ஊடகங்கள் மீது அநாவசியமான கட்டுப்பாடுகளை விதித்தது.அச்செயல் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியை மேலும் அதிகமாக்கியது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி நஷீட் சில தினங்களுக்கு முன்னர் " மோசடித்தனமான தேர்தல் முடிவுகளை " உலகம் நிராகரிக்கவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தமைதான்.
ஞாயிறன்று வாக்களிப்பில் அதிகப்பெரும்பான்மையான மக்கள் பங்கேற்றார்கள் .யாமீன் தோல்வியடைவார் என்று நான் நினைத்தேன்.
மகிந்த ராஜபக்சவும் யாமீனும் ஜனாதிபதி தேர்தல்களின்போது சீனச் சார்புத் தலைவர்களாக காண்பாக்கப்பட்டமை இருவருக்கும் இடையிலான ஒரு பொதுவான அம்சமாகும்.இந்த படிமம் அந்த நாடுகளில் வாக்காளர்கள் மீது செல்வாக்குச் செலுத்தி ராஜபக்சவையும் யாமீனையும் அவர்கள் நிராகரிக்க வழிவகுத்ததா இல்லையா என்பதை நான் அறியேன்.ஆனால், அத்தகைய ஒரு சாத்தியப்பாட்டை நிராகரித்துவிடவும் முடியாது.
அரசியல் தலைர்களை விடவும் மக்கள் விவேகமும் மிடுக்கும் கொண்டவர்கள் ; தகுதியுடைய மாற்றுத் தெரிவொன்றைக் கொடு்த்தால் அவர்கள் உலகைத் திகைக்கவைக்கக்கூடிய வல்லமை கொண்டவர்கள் என்பதே மாலைதீவு உதாரணத்திலிருந்து அரசியல் வர்க்கம் படிக்கவேண்டிய செய்தியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM