தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின் இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொரிய தேசத்தின் பிறப்பிடம் என்று ஐதீகமாக நம்பப்படுகின்ற பேக்ரு மலையில் கைகோர்த்து ஏறியமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை பறைசாற்றுகின்ற ஆற்றல்மிக்க காட்சியாக அமைந்திருந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.
வடகொரியாவில் இருக்கின்ற மலையில் நின்றவாறு ஜனாதிபதி மூன் தென்கொரியாவின் சாதாரண மக்களும் உல்லாசப் பிரயாணிகளாக அந்த மலைக்குவரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டார். அவரது நம்பிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரைவாகச் சுமுகமடைவதன் தெளிவான வெளிப்பாடாகும்.
இவ்வார ஆரம்பத்தில் வடகொரிய தலைநகர் யொங்யாங்கிற்கு பயணம் செய்த தென்கொரிய ஜனாதிபதியின் பிரதான இலக்குகள் அணுவாயுத நீக்கம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கச் செய்வதும் தனது நாட்டுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவுகளில் காணப்படும் புத்துணர்வுக்கு வலுச்சேர்ப்பதுமாகும். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளையும் வெளியிடப்பட்ட அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், உச்சிமகாநாடு கொரிய தீபகற்பத்தில் சமாதானத்துக்கான இயக்குவிசையை வலுப்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
அமெரிக்காவும் ஒத்திசைவான நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தால் , ரொங்ஷாங் - றீ என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஏவுகணைச் சோதனைத் தளத்தை சர்வதேச அவதானிகளின் கண்காணிப்பின் கீழ் முடிவிடுவதற்கும் யொங்பியோன் என்ற இடத்தில் உள்ள அணு ஆலையை நிர்மூலஞ்செய்வதற்கும் இணங்குவதாக பேச்சுவார்த்தைகளின்போது வடகொரியா தெரிவித்திருக்கிறது.
கொரியப் போரின் விளைவாக நாடு பிரிவினைக்குள்ளாகியபோது பிரிந்துபோன குடும்பங்கள் ஒன்றிணைவதற்கு வடகொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலையம் ஒன்றைத் திறப்பதற்கும் இரு தலைவர்களும் இணங்கிக்கொண்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதறகாக முன்கூட்டிச் சித்தமான திகதியொன்றில் தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு விஜயம் செய்வதாக கிம் உறுதியளித்திருக்கிறார். அதன் பிரகாரம் அவர் செய்வாரேயானால் 1953 போர்நிறுத்தத்திற்குப் பிறகு தெற்கிற்கு செல்கின்ற முதல் வடகொரியத் தலைவர் அவரே என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார்.
இரு கொரியாக்களுக்கும் இடையிலான உச்சிமகாநாட்டை நம்பிக்கையுணர்வுடன் வரவேற்றிருக்கும் அமெரிக்கா, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளில் உடனடியாக ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், உச்சிமகாநாட்டில் காணப்படக்கூடியதாக இருந்த அனுகூலமான சூழ்நிலை அணுவாயுதநீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் பயனுறுதியுடைய விளைவுகளுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அவதானிக் கூறுகிறார்கள்.
கிம்முக்கும் மூனுக்கும் இடையே ஏப்ரல் 27 இல் நடைபெற்ற பான்முன்யொம் உச்சிமகாநாடு முன்னைய பகைமைநிலையை உருகச்செய்திருந்தது. அந்த மகாநாட்டுக்குப் பிறகு கொரியாக்களுக்கிடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்ட அதேவேளை, வடகொரியாவுடனான அமெரிக்காவின் ஊடாட்டம் சமாதானத்துக்கான நம்பிக்கையைப் பலப்படுத்தியது. ஆனால், இரு கொரியாக்களும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தைப் பேணக்கூடியதாக இருந்த அதேவேளை, கிம்முக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் சிங்கப்பூரில் நடந்த ஜூன் உச்சிமகாநாட்டுக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ஊடாட்டத்தில் முனனேற்றம் ஏற்பத்தவறிவிட்டது.
அணுவாயுத நீக்கம் என்பது ஒரு பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, எந்தவொரு விசேட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இல்லை.அத்துடன் காலஅட்டவணையொன்றை வகுத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டப்படவும் இல்லை. ஒரு உறுதிமொழியாக அது இருக்கின்றதே தவிர ஒரு உருப்படியான திட்டமாக இல்லை. கூடுதலாக எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதாக இருந்தால் அமெரிக்கா கொரியப்போரை முறைப்படி முடிவுக்குக்கொண்டுவரும் பிரகடனத்தைச் செய்யவேண்டும் என்று வடகொரியா விரும்புகிறது.
சமாதானத்தை நாடுவதிலும் உலக அங்கீகாரத்தைப் பெறுவதிலும் கிம் உறுதியாக இருக்கின்றார் போலத்தெரிகிறது. இரு கொரியாக்களுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தி இதுவேயாகும். இறுதியில் நிலையான சமாதானத்தைக் காண்பதற்கு அமெரிக்காவும் தென்கொரியாவும் கிம்மினால் காட்டப்பட்ட நல்ல சமிக்ஞைகளுக்கு கைமாறு செய்யும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அவதானிகள் வலியுறுத்துகிறார்கள்.
(வீரகேசரி இணையத்தள அரசியல் ஆய்வுத் தளம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM