முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்காலச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை செய்திருக்கும் சிபாரிசை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக ஏற்றுக்கொண்டு அது தொடர்பில் நடவடிக்கையில் இறங்கவேண்டும்.
அவர்களின் விடுதலை இந்திய அரசியலமைப்பின் 161 ஆவது சரத்தின் கீழேயே செய்யப்படவேண்டியதாக இருக்கிறது. கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் செய்திருந்த கருணை மனு தகுதியானதெனக் கண்டால், ஆளுநர் விடுதலை தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கலாம் என்று கடந்த வாரம் இந்திய உச்சநீதிமன்றம் கூறியதையடுத்தே சாதகமான தீர்மானத்தை எடுப்பதற்கான வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
ஏனைய 6 கைதிகளின் கருணை மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றன. ஆனால், பேரறிவாளனின் கருணை மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது அவர்களுக்கும் பிரயோகிக்கத்தக்கதேயாகும். மத்திய அரசாங்கம் இந்த கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக இல்லை. ஆனால், தமிழ்நாடு மாநில அட்வகேட் ஜெனரலும் உச்சநீதிமன்றமும் சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் ஆளுநர் எடுக்கக்கூடிய தீர்மானத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது. இவ்வருட ஆரம்பத்தில் மத்திய உள்துறை அமைச்சின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி இந்த கைதிகளை விடுதலை செய்யுமாறு மாநில அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பதவியில் இருந்த அரசாங்கங்களும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் 7 கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்துவந்திருக்கின்றன.ஆனால், இது ஒரு அரசியல் மற்றும் சட்டரீதியான பிரச்சினை மாத்திரமல்ல, ஒரு மனிதாபிமான விவகாரமுமாகும்.அதில் உரிமைகளும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி நியாயாதிக்கம் மற்றும் சட்டக்கோட்பாட்டு விதிமுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. சகல கைதிகளும் 27 வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். தண்டனையும் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை நீண்டகாலத்துக்குச் சிறையில் அடைத்துவைத்திருப்பதுவும் ( சிவேளைகளில் ஆயுட்காலம் பூராவும்) குற்றவியல் நீதிமுறைமையின் இறுதிமுடிவாக இருந்துவிடக்கூடாது. கைதிகளைச் சீர்திருத்தி சமுதாயத்தின்ஏனைய உறுப்பினர்களைப்போன்று அவர்களும் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு உதவுவதே நீதி முறைமையின் நோக்கமாகும். அதனால், 7 கைதிகளையும் தொடர்ந்து சிறையில் அடைத்துவைத்திருப்பது தவறானதும் நேர்மையற்றதுமாகும். அதுவும் 27 வருடங்களாக சிறைவாசத்தை அனுபவித்த நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்களே. கருணை மனு என்ற பதத்தினால் சில வேளைகளில் குறித்துச் சுட்டிக்காட்டப்படுவதைப் போன்று இது வெறுமனே கருணை சம்பந்தப்பட்ட விவகாரமும் அல்ல.நீதி, நேர்மை மற்றும் நடுநிலை சம்பந்தப்பட்ட விவகாரமும் ஆகும்.
இந்தக் கைதிகளை ராஜீவ் காந்தியின் குடும்பம் ஏற்கெனவே மன்னித்துவிட்டது. உச்ச நீதிமன்றம் அதன் அபிப்பிராயத்தை தெரிவித்த கருணை மனுவுக்குரியவரான பேரறிவாளன் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மின்கலத்தை கொள்வனவு செய்தவர் மாத்திரமே.எந்த நோக்கத்துக்காக அது பயன்படுத்தப்படும் என்பதையும் அவர் அறியாதிருந்திருக்கக்கூடும்.
அதனால், சட்ட, தார்மீக மற்றும் ஏனைய கோணங்களில் நோக்கும்போது இந்தக் கைதிகளை விடுதலை செய்வது நியாயமே.இந்த விவகாரம் மிகவும் நீண்டகாலத்துக்கு விவாதிக்கப்பட்டுவிட்டது.மததிய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களுக்கிடையே பல தடவைகள் அலைக்கழிக்கப்பட்டும் விட்டது.
இப்போது உச்சநீதிமன்றமே அதன் தலையை அசைத்து ஒப்புதலை அளித்திருப்பது மாத்திரமல்ல, மாநில அரசாங்கமும் சிபாரிசு செய்தபிறகு விடுதலையைத் தாமதிக்க ஆளுநருக்கு எந்தக் காரணமும் இல்லை.ஆளுநர் தீர்மானமொன்றை எடுப்பதற்கு கால அவகாசம் ஒன்று குறித்துரைக்கப்படவில்லை என்றபோதிலும் அவர் மாநில அரசாங்கத்தின் சிபாரிசு தொடர்பில் முடிவெடுப்பதை கிடப்பில் போடுவது பொருத்தமானதல்ல.மத்திய அரசாங்கத்தின் அபிப்பிராயத்தை அவர் மீண்டும் நாடினால் அல்லது தன்னிடம் அனுப்பப்பட்ட சிபாரிசை அவர் திருப்பி அமைச்சரவைக்கு அனுப்பினால் அதுவும் தவறாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM