வடக்கு – கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.தே.க.வின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற வடக்கு – கிழக்கை கட்டியெழுப்புவதற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் தாமதமாக இடம்பெறுகின்றன. வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் எவரும் இல்லை. இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் முன்னாள் போராளிகளுக்கு கல்விச் சான்றிதழ் இல்லாமையினால் தொழில்வாய்ப்பைப் பெறுவது நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. எனவே விசேட வர்த்தமானியினூடாக இவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு – கிழக்கில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, வடக்கு – கிழக்கு பிரதிநிதிகளுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்க நான் தயாராகவே இருக்கின்றேன். நீங்கள் பெயர்களைப் கூறுங்கள். நான் நியமிக்கின்றேன் என்றார்.
இதன்போது அமைச்சர் மனோ கணேசன், நான் ஏற்கனவே பகிரங்கமாக அறிவிப்புகளை வெளியிட்டமை ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று கேட்டபோது, ஆம் எனக்கு தெரியும் என்று ஜனாதிபதி கூறினார்.
மனோ கணேசன்
தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகையில்,
நான் அடிக்கடி வடக்கு – கிழக்கு சென்று வருகின்றேன். அப்போது அங்கு அரச அலுவலகங்களிலும் தொழில் முயற்சிகளிலும் வடக்கு – கிழக்கு தமிழ் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் உள்ளமையைக் காண்கின்றேன். வடக்கு – கிழக்கு சாராதவர்களுக்கே தொழில்வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு விசேட பொறிமுறை உருவாக்கப்பட்டு தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார். இதன்போது இந் நிலைமை குறித்து கவனம் எடுப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
மாவை எம்.பி.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா எம்.பி, வடக்கு – கிழக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் நான் உங்களுக்கு மயிலிட்டி நிகழ்வின் போது எடுத்துரைத்திருந்தேன். எமது மக்களின் காணி விடுவிப்பு மிகவும் முக்கியமாகும் என்று குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி, பாடசாலைக் காணிகளோ அல்லது கட்டடங்களோ இராணுவத்திடம் இருந்தால் அவற்றை உடன் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என்றார்.
சுவாமிநாதன்
இச் சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிடுகையில்,
கேப்பாப்புலவு காணி விடுவிப்பில் நிலவிய பிரச்சினையைக் குறிப்பிட வேண்டும். அந்தக் காணிகளில் இராணுவத்தின் கட்டடங்களை அமைத்துள்ளனர். எனவே அவர்கள் அந்தக் கட்டடங்களுக்கான நிதியைக் கேட்கின்றனர். நிதிப் பிரச்சினையே இங்கு பிரதானமாக உள்ளது என்றார். இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், இங்கு நிதிதான் பிரச்சினை என்றால் அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? என்றார். அது குறித்து ஆராயலாம் என இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன், சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோர் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாகவும் கேரள கஞ்சா அதிகமாகக் கொண்டு வரப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இதன்போது பொலிஸ் மா அதிபரை பார்த்து கேள்வியெழுப்பிய ஜனாதிபதி, இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டார்.
பொலிஸ்மா அதிபர்
அதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு இராணுவமும் கடற்படையும் உதவுகின்றன. ஆனால் ஒரு சில நடவடிக்கைகளைக் கொண்டு இவர்கள் பொலிஸார் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்று குறிப்பிட்டார். இதன்போது மீண்டும் கருத்து வெளியிட்ட சித்தார்த்தன் எம்.பி. வடக்கின் வாள்வெட்டு சம்பவங்களுடன் பொலிஸாரின் தொடர்புள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து கோடீஸ்வரன் எம்.பி. குறிப்பிடுகையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே நீர்த் திட்டங்களை முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தினார். அமைச்சர் ஹக்கீம் தமிழ், சிங்கள பிரதேசங்களை மறந்து விட்டதாகக் குறிப் பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், நிதி போதாமை காரணமாகவே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட் டினார்.
மேலும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி. இவ்வாறான கூட்டங்களில் வாக்குறுதிகள் மட்டுமே இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுப் பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதன்போது கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM