(நா.தனுஜா)
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிங்கப்பூர், இந்தியா, சீனா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளதே தவிர, நாட்டிலுள்ள மக்களின் நலனைக் கருத்திற்கொள்ளாத நிலையே காணப்படுகின்றது. இந் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பினை உணர்த்தும் வகையில் 'கொழும்பிற்கு மக்கள் சக்தி" எனும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலை மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் என்பன தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பத்தரமுல்லையின் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கூட்டு எதிரணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போதே கூட்டுஎதிரணியின் பிரதிநிதிகளால் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
பொதுஜன பெரமுன உறுப்பினரும் எலிய மற்றும் வியத்மக அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான அருண் தம்பிமுத்து கருத்து வெளியிடுகையில்,
"தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. பொருட்களின் விலை உயர்வடைவதோடு, மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே அரசாங்கம் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதன்மூலம் சிங்கப்பூருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் அதேவேளை, இலங்கைக்கு எவ்வித அனுகூலங்களும் இல்லை.
நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் இந்து சமுத்திரத்திலும், தெற்காசியப் பிராந்தியத்திலும் கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகத் தளமாகும். அதனைச் சீனாவிற்கு விற்றுவிட்டார்கள். இவ்வாறு தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் பாதிக்கும் செயற்பாடாகும். இவை அனைத்தையும் விட மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் வகையில் இன்னமும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.
அதேபோல் எதிர்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு மாத்திரம் தலைவரல்ல. அவர் இந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவர் என்பதையும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும். இரவில் அரசாங்கத்தோடு இணைந்திருந்துவிட்டு, பகலில் மாத்திரம் எதிர்க்கட்சியாக இருப்பதில் அர்த்தமில்லை. தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. எனவே இந்த அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிக்காட்டும் பாரிய மக்கள் எழுச்சிப்பேரணியில் நாட்டை நேசிக்கும் அனைவரும் கலந்துகொள்வார்கள்" என்றார்.
தொடர்ந்து மலையக தேசிய முன்னணியின் தலைவரும், பொதுஜன பெரமுனவின் தமிழ்ப்பிரிவு பொறுப்பாளருமான ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிடுகையில்,
"இந்த அரசாங்கத்தில் நாடு முழுவதுமாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் உள்ளது. அண்மையில் புகையிரத ஊழியர் வேலைநிறுத்தம், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் போன்றன இடம்பெற்றன. இவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவை அனைத்திற்கும் பொது எதிரணி காரணம் என்று அரசாங்கம் கூறிவருகின்றது. அதனை நிறுத்திவிட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ராஜு பாஸ்கரன் கருத்து வெளியிடுகையில்,
"2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்த கட்சியை விட்டுவிட்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கிய போதே இந்த அரசாங்கம் ஜனநாயக மரபை மீறி செயற்பட்டுவிட்டது. தற்போது வரை மக்களின் தேவைகளைக் கவனத்திற்கொள்ளாமல் செயற்படும் இந்த அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மக்கள் எழுச்சிப்போராட்டத்தை செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம்." என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM