கீத் நொயார் எனும் ஊடகவியலாளரை விஷேடமாக தனக்கு ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன் கீத் நொயார் கடத்தப்பட்ட தினம் இரவு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இருந்து தனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததா எனவும் தனக்கு ஞாபகம் இல்லை எனவும், அவ்வாறு வந்திருப்பின் அவ்வழைப்பு தொடர்பில் தேடிப் பார்க்க ஜனாதிபதியின் செயலர் அல்லது பாதுகாப்பு செயலருக்கு தான் அறிவித்திருப்பேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சி.ஐ.டி.யிடம் தெரிவித்ததாக அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம நேற்று கல்கிசை நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்குத் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் சாராம்சம் 'தனக்கு ஞாபகமில்லை' என்பதாகும் எனவும் அவர் நீதிவானுக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் அடிப்படை சாட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஞாபக மறதி நோய் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும் என சி.ஐ.டி.க்கு உத்தரவிட்ட நீதிவான் லோச்சனா அபேவிக்ரம, விசாரணைகளில் அவர்கள் விடயங்களை மறைப்பார்களாயின் அதன் பின்னணி தொடர்பில் ஆராயப்படல் வேண்டும் எனவும் அவர் சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கினார்.
த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் குறித்த நீதிவான் நீதிமன்ற வழக்கு நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்கிரம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ்.திசேரா, சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோர் மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன்றில் ஆஜரான நிலையில் அவர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம பிரசன்னமானார்.
இதன்போது ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைதாகி பிணையிலுள்ள இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டபிள்யூ.புளத்வத்த, எஸ்.ஏ.ஹேமச்சந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார, சி.ஜயசூரிய ஆகியோருக்கு மன்றில் ஆஜராக வேறு திகதி கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆஜராகவில்லை. எனினும் 8 ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவத் தளபதி அமல் கருணாசேகர விளக்கமறியலில் உள்ள நிலையில் அவர் நேற்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந் நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்து தெளிவுபடுத்திய அரச சிரேஷ்ட சட்டவாதி லக்மினி கிரியாகம, "கனம் நீதிவான் அவர்களே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அவர் தனக்கு ஞாபகம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். கீத் நொயார் எனும் ஊடகவியலாளரை விஷேடமாக தனக்கு ஞாபகம் இல்லை எனவும் அக்காலத்தில் ஊடகங்களில் அரசாங்கத்தையும், படையினரையும் விமர்சித்து பல்வேறு செய்திகள், அறிக்கைகள் வெளிவந்ததாகவும் சி.ஐ.டி.யினரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வண்ணம் அவர் கூறியுள்ளார்.
எனினும் கீத் நொயார் கடத்தப்பட்ட தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக ஞாபகம் இல்லை எனவும் அவ்வாறு வந்திருந்தால் அது குறித்து தேடிப் பார்க்க ஜனாதிபதியின் செயலாளருக்கோ அல்லது பாதுகாப்பு செயலருக்கோ பாரப்படுத்தியிருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரிடம் இருந்து வந்த அழைப்பை மஹிந்த ராஜபக் ஷ மறுக்கவில்லை. மறைமுகமாக அதனை ஏற்றுக்கொன்டு அது தொடர்பில் தேடிப்பார்க்க முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு உத்தரவிட்டமை தொடர்பிலும் மறை முகமாக அவர் ஏற்றுக்கொள்கின்றார்" என்றார்.
இதன்போதே இந் நிலையில் இந்த விவகாரத்தில் அடிப்படை சாட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஞாபக மறதி நோய் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும். இது சிக்கலானது என நீதிவான் லோச்சனா அபேவிக்ரம கூறவே, சாட்சியாளர்கள் ஞாபகமில்லை எனக் கூறுவதால் விசாரணைகளே பாதிக்கப்படுவதாக அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் தொடர்ந்தும் மன்றில் கருத்துகளை முன்வைத்த சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி கிரியாகம, கீத் நொயாரிடம் அவுஸ்திரேலியாவில் வைத்து சி.ஐ.டி. பதிவு செய்த வாக்குமூலத்தில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தினார். குறித்த வாக்குமூலத்தில், தான் கடத்தப்பட முன்னைய தினம் சென்பத்தி எனும் பெயரில் பிரசுரித்த கொழும்பு லோட்டஸ் வீதி தற்கொலை குண்டுத் தாக்குதலை மையப்படுத்திய இராணுவத்தின் இயலாமையை சுட்டிக்காட்டிய கட்டுரையே தாக்குதலுக்குக் காரணமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.
இதனைவிட தன்னைக் கடத்திச் சென்றவர்கள் வேனில் வைத்து, தனக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா, இராணுவத்தில் இருந்து தகவல் தருவோர் யார், வங்கிக் கணக்கு இலக்கம், மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்த விபரங்களை மையப்படுத்தியே கேள்வி கேட்டதாக கீத் நொயார் கூறியுள்ளதாக லக்மினி ஹிரியாகம நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ஏற்கெனவே கீத் நொயார் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொம்பே பதுவத்தை வீடு குறித்த தகவல்களை வெளிப்படுத்த பாதுகாப்பு செயலருக்கு அனுப்பப்பட்ட 2 கேள்விக் கொத்துக்களுக்கும் இன்னும் பதிலில்லை என சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி நீதிவானுக்கு சுட்டிக்காட்டினார். இதனையடுத்து அது குறித்து ஞாபகப்படுத்தல் கடிதம் ஒன்றினை பாதுகாப்புச் செயலருக்கு அனுப்புமாறு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் இராணுவத்தின் செலவு தொடர்பில் கணக்காய்வாளருக்கும் கேள்விக் கொத்தொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் பதிலையும் எதிர்பார்த்துள்ளதாக அரச சட்டவாதி லக்மினி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான், வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து, அதுவரை 8ஆம் சந்தேக நபரான அமல் கருணாசேகரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM