(நா.தனுஜா)
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. எனினும் இக்காலநிலை காரணமாக வெள்ளம் ஏற்படும் அபாய நிலைமை இல்லை எனவும், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் மழைவீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய மழை காலநிலை தொடர்பில் மொஹமட் சாலிஹீன் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கைக்கு அப்பால் தாழமுக்க நிலையொன்று காணப்படுகின்றது. எனவே தாழமுக்கத்தை நோக்கி காற்று ஊடறுத்துச் செல்வதாலேயே இவ்வாறான மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. குறிப்பாக காற்று மலைகளில் மோதுவதால் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.
அத்தோடு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் இந்நிலைமை குறைவடையும்.
மேலும் தற்போது காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாகவும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாகவும் மழைவீழ்ச்சி பதிவாகும். வடமேல் மாகாணம், கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்வதோடு, மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
கடற்பிராந்தியங்களைப் பொறுத்தவரையில் கொழும்பு, புத்தளம் தொடக்கம் மன்னார் வரையான கடற்பிராந்தியத்தில் மணிக்கு 35 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்திலும், காலி, கம்பஹா தொடக்கம் மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியத்தில் மணிக்கு 45 கிலோமீற்றரை விட அதிகரித்த காற்று வீசும் எனவும் குறிப்பிட்டார்.
ஆகையால் மீனவர்கள் கடற்பிராந்தியத்திற்குச் செல்வது தொடர்பில் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மழையடன் கூடிய காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி குறிப்பிடுகையில்,
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தற்போதுவரை எவ்வித அனர்த்தங்களும் பதிவாகவில்லை. அத்தோடு தற்போதைய மழைவீழ்ச்சியின் காரணமாக வெள்ளம் ஏற்படும் அபாயம் இல்லை.
எனினும் நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம் என்றார்.
இந்நிலையில் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நிலவிய அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை 291 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
மேலும் தலவாக்கலை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, நானுஓயா, சமர்செட் பகுதியில் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சுக்கு அறியத்தருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் விடுமுறை நிறைவடைந்து, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பதற்கு தடையேற்படாத வகையில் காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடனடியாக சீரமைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM