சம்பூர் நிலப்பரப்பை தம்வசமாக்க சீனா போன்ற நாடுகள் பகீரதப்பிரயத்தனங்களை இன்னும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில்அனல் மின் நிலையமொன்று நிறுவப்படுவதால் ஏற்படும் பாதிப்புக்களை நான் உணருவேன்.
இருப்பினும் உரியதரப்பினருடன் கலந்து பேசி நல்லதொரு முடிவைப் பெற முயற்சிப்போம் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையும், தனியார் நிறுவனமும் இணைந்து 10 கோடி ரூபா பெறுமதியான ஆடைத்தொழிற்சாலையொன்றை மூதூர் சீதனவெளிப் பிரதேசத்தில் நிர்மாணிக்கும் முகமாக நேற்றைய தினம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டிய பின் சம்பூரில் நிறுவப்படவுள்ள அனல் மின்நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பசுமை திருகோணமலை அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு அணியினரைச் சந்தித்து உரையாடிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னைய அரசு சம்பூர் பிரதேசத்தை முழுமையாக கபளீகரம் செய்திருந்தது, சம்பூரை விடுவிப்போம் என வாக்குறுதி நல்கியும் அவர்கள் விடுவிக்கவில்லை. புதிய ஆட்சி மாற்றத்தின் காரணமாக அண்மையில் சம்பூர் மக்களுக்கு சொந்தமான 818, ஏக்கர் காணி எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டது. இம்மாத முடிவுக்குள் சம்பூரில் உள்ள கடற்படை முகாம் அமைந்திருக்கும் 237 ஏக்கர் காணியும் விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. இது நல்லதொரு நடவடிக்கையென்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சீனா போன்ற நாடுகள் இப்பகுதியில் பிரசன்னமாவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. அரசு உடன்பட்டால் அவர்கள் மறுநாளே உள்நுழைந்து விடுவார்கள். அனல் நிலையமொன்று அமைக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் விளைவுகளையும் நான் அறிவேன். மக்களாகிய உங்கள் கோரிக்கையை தார்மீகமாக நான் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் இதுவிடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்து பேசி நல்லதொரு முடிவை நோக்கி நகருவோம் என்றார்.
இதேவேளை ஆடைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சம்பந்தன் உரையாற்றுகையில்
திருகோணமலையில் பாரிய அபிவிருத்தியொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. திருகோணமலை கடல்முகம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் நவீனமயப்படுத்தப்பட விருப்பதுடன் பாரிய அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நகரத்தின் அபிவிருத்தி தொடர்பில் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்று பாரிய திட்டங்களைத் தயாரித்து வருகின்றது. எதிர் காலத்தில் திருகோணமலை நகரத்தில் அபிவிருத்தியானது சமூக, பொருளாதார மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது எனத் தெரியப்படுத்துகிறேன்.
இதே போன்றே திருகோணமலைப் பிராந்தியத்தில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜப்பான் நாடு முதலீட்டாளர் மாநாடொன்றை விரைவில் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமானது சர்வதேசத்துக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்ற வேண்டும். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் ஐ.நா. சபை உட்பட சர்வதேசத்துக்கு உறுதியான வாக்குறுதிகளை நல்கியிருந்தார். அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வருவோமென்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
அந்த அரசியல் தீர்வின் மூலம் வடகிழக்கு மக்கள் சுபீட்சமான வாழ்வைப் பெற வேண்டுமாயின் அரசியல் தீர்வு அவசியமானது என்பதை இந்த அரசுக்கும் சர்வதேசத்துக்கும் நாம் உணரவைத்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM