தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது 94 ஆவது வயதில் சற்றுமுன்னர் காலமானார்.
நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக காவேரி மருத்துவ மனையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று மாலை 6.40 மணியளவில் உயிரிழந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் முதுபெரும்தலைவரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று(ஆகஸ்ட் 6) மாலை அறிவித்ததில் இருந்தே, மீண்டும் வைத்தியசாலையை நோக்கி, கட்சியினரும் பொதுமக்களும் படையெடுத்தனர். வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளைச் செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், காவேரி வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று(ஆகஸ்ட் 7) மாலை 6:10 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அறிவித்திருக்கிறது.
வைத்தியசாலையின் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் பலரும் அழத் தொடங்கினார்கள். கோபாலபுரத்தில் அவருடைய குடும்பத்தினர் பெரும் அழுகைக்கு இடையே கூடியுள்ளனர். கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் செல்வார்கள் என்பதால் பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, சிறுநீர்ப் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி. இந்தநிலையில், கடந்த ஜூலை 27 ஆம் திகதி நள்ளிரவில் திடீரென அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.
29 ஆம் திகதி மாலையில் அவருக்கு இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. முதன்முதலாக, அப்போதுதான் தொண்டர்களும் கட்சித்தலைவர்களும் பதறிப்போனார்கள். ‘எழுந்து வா... தலைவா எழுந்து வா’ என்று குரல் எழுப்பிக்கொண்டே, வைத்தியசாலை வாசலில் நின்றார்கள். ‘எங்கள் குரல் தலைவரின் காதுக்குக் கேட்டால், தலைவர் நிச்சயம் எழுந்து விடுவார்’ என்று நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தார்கள். இந்நிலையில், தீவிரச் சிகிச்சையால் உடல்நிலை படிப்படியாகச் சீராகி வந்தது. அதனைத் தொண்டர்களிடையே ஆ.ராசா அறிவித்தார்.
கல்லீரல் செயல்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையால் அவருக்கு ஆரம்பக்கட்ட மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்குக் கல்லீரல் மருத்துவ நிபுணர் முகமது ரேலா ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூச்சு திணறல் காரணமாகக் கருணாநிதிக்கு டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கல்லீரல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலையில் நாளுக்குநாள் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், காவேரி வைத்தியசாலைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றார். தீவிரச் சிகிச்சை பிரிவுக்குச் சென்று கருணாநிதியைப் பார்த்தார். ஏற்கெனவே, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்த படங்களைத் திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் நேரில் பார்த்த படங்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், நேற்று காலை மருத்துவமனைக்கு வந்தார். இதைப் பார்த்த தொண்டர்கள், மிகவும் பதற்றமடைந்தார்கள். மேலும் இந்தச் செய்தி ஊடகங்கள் வழியே ஒளிபரப்பப்பட்டதால், தமிழகம் முழுவதும் கருணாநிதியின் உடல்நிலை குறித்த கவலை அதிகரித்தது.
மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு ஆகியோர் முதல்வர் பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசப்பட்டது. பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு, தலைமைச்செயலாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து காவேரி வைத்தியசாலை மாலை 6:10-க்கு கருணாநிதி உயிர் பிரிந்ததாக அறிவித்தது.
94 வயது கருணாநிதி, கிட்டத்தட்ட 80 ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர். இவரின் அறிக்கையோ, கேள்விபதில் அறிக்கையோ, பேட்டியோ, போராட்டமோ இல்லாமல் செய்திகள் இல்லை. தமிழகத்தையும் கருணாநிதியும் பிரித்துப்பார்க்க இயலாது. ஆளுமை மிக்க, முதிர்ந்த அனுபவம் கொண்டவரை, இழந்து நிற்கிறது தமிழகம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM