தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 11 ஆவது நாளாக வைத்திய குழு தீவிர சிகிச்சை அளித்ததுவந்த நிலையில், அவரின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்படைந்ததன் காரணத்தால் உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை கொடுக்காத நிலையில், கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்தும் கவலைக்கிடமாகவே உள்ளது காவேரி வைத்தியசாலை நிலைவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வைத்திய குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளையிடப்பட்டு ‘‘டிரக்யாஸ்டமி’’ எனும் கருவி பொருத்தப்பட்டது. சுமார் 20 மாதங்களாக அவர் அந்த செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருகிறார்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி கருணாநிதிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் டிரக்யாஸ்டமி குழாய் கருவியை மாற்றி விட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அன்றே அவர் வீடு திரும்பினார். சுமார் ஒரு வாரம் இயல்பு நிலையில் இருந்த கருணாநிதிக்கு கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
அதுவரை நன்றாக இருந்த கருணாநிதி வயது முதிர்வு காரணமாக முதன் முதலாக உடல் நலிவை சந்தித்தார். காவேரி வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு அவரது வீட்டுக்கு சென்று 2 நாட்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் கருணாநிதியின் உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவை தடுக்க இயலவில்லை.
இந்நிலையில், 28 ஆம் திகதி கருணாநிதிக்கு சிறுநீரகம் செல்லும் பாதையில் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு அவர் மூச்சுவிட திணறியதால் காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது இரத்த அழுத்த குறைவு சீராக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் 30 நிமிடம் உட்கார வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. இதனால் 3 நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் இரத்த தட்டணுக்களும் குறைந்தது.
கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, மஞ்சள் காமாலை, இரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றுக் காலை கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வுநிலை ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் கவலைக்கிடமாக மாறியது.
கருணாநிதி உடல் நிலை மோசமானதால் அவரது குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காவேரி வைத்தியசாலைக்கு சென்றனர். நேற்று மதியம் 1.45 மணிக்கு தயாளு அம்மாள் வைத்தியசாலைக்கு சென்றார். கருணாநிதியைப் பார்த்து அவர் கண்ணீர் வடித்தார். நேற்று பிற்பகல் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளும் வைத்தியசாலைக்கு சென்றனர்.
இதனால் காவேரி வைத்தியசாலை வளாகம் நேற்று மாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க ‘‘தலைவா எழுந்து வா’’ என்று கோஷமிட்டனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவேரி வைத்தியசாலை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பின்னரே தெரியும்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை தோன்றியுள்ளது. அனைவரது பார்வையும் காவேரி வைத்தியசாலையை நோக்கியே திரும்பியுள்ளது.
நேற்றிரவு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றனர். இன்று கருணாநிதிக்கு 11 ஆவது நாளாக வைத்திய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது. ஆனால் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை கொடுக்கவில்லை.
மருந்துகள் அனைத்தும் இரத்த தட்டணுக்கள் அளவு குறைவு காரணமாக மெதுவாகவே பலன் அளிக்கின்றன. இதன் காரணமாக கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வைத்தியர்கள் குழு கடுமையாக போராடி வருகிறது.
கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற வைத்தியர் முகம்மது ரேலே வழங்கியுள்ள ஆலோசனையின் பேரில் கருணாநிதிக்கு வைத்தியர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அந்த சிகிச்சையை கருணாநிதி உடல் ஏற்றக்கொண்டதா என்பது சற்று நேரத்தில் தான் தெரியும். அதற்கு ஏற்ப கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்ய வைத்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி வைத்தியசாலை வெளியிட உள்ள 7 ஆவது அறிக்கை மூலம் தெரியவரும். அதை தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பதற்றமான மனநிலையுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.
தொண்டர்கள் அனைவரும், கருணாநிதி இந்த சவாலிலும் வென்று உடல் நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகத் தான் காவேரி வைத்தியசாலை முன்பு ‘‘எழுந்து வா தலைவா’’ என்ற கோஷம் இரவு-பகலாக விண்ணதிர ஒலித்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM