முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் நீண்டகாலமாக செயலிழந்து காணப்படும் ஓட்டுத்தொழிற்சாலையினை புனரமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சினூடாக 35 மில்லியன் ரூபா நிதிகிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தரமான ஓடுகளை உற்பத்தி செய்யக்கூடியதும் பலருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதுமான ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை இன்று வரை மீள ஆரம்பிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
நாட்டில் ஓடுகளின் கேள்வியின் நிவர்த்தி செய்வதற்காக தேசிய சிறு கைத்தொழிற் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு அப்போதைய கைத்தொழில் கடற்றொழில் அமைச்சர் டி.பி.ஆர் குணவர்த்தனவால் 1968 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட தொழிற்சாலையில் 74 வயதான நிரந்தர தொழிற்சாலை ஊழியர்களும் 100 இற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்று தமது வாழ்வாதாரங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக குறித்த ஓட்டுத்தொழிற்சாலை செயலிழந்தது.
இதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு மீளவும் ஓட்டுத்தொழிற்சாலை இயங்கியது.
அதன்பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த குறித்த ஓட்டுத்தொழிற்சாலையானது இன்றுவரை மீள இயங்காத நிலை காணப்படுகின்றது,
மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சின் கீழ் இருபது இலட்சம்ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது எந்த வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை அமைந்துள்ள 13 ஏக்கர் காணி பற்றைக்காடு மண்டிக்காணப்படுவதுடன் இதன் உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.
எனவே குறித்த ஓட்டுத்தொழிற்சாலை மீள இயங்க வைப்பதன் மூலம் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இத்தொழிற்சாலை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக செயலிழந்த நிலையில் காணப்படும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை தொடர்பில் மாவட்ட அரச அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
எமது மாவட்டத்தில் நீண்டகாலமாக பாவனைக்குப்பயன்படுத்தப்படாது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையானது மீளவும் புனரமைக்கும் பொருட்டாக ஒட்டுசுட்டானின் உள்ள சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கம் அதனை எடுத்து நடத்துவதற்கான விண்ணப்பத்தை மேற்கொண்டிருந்ததன் அடிப்படையில் தற்போது மீள்குடியேற்ற அமைச்சினூடாக 35 மில்லியன் ரூபா நிதி எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலமாக மீளவும் புனரமைத்து செயற்படுத்தமுடியும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM