(ஆர்.யசி)
அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என்றால் அல்லது அவர் இருக்குமிடத்தை கண்டறிய வேண்டும் என்றால் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பின் தொடரவேண்டும். அவ்வாறு பின் தொடர்ந்தால் இலகுவாக கண்டறிய முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான சட்டமாகும். குறிப்பாக 100 நாட்கள் ஆட்சியில் இந்த சட்டத்தை கொண்டுவருவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தது. தகவல் அறியும் சட்டமூலம் போன்று அதற்கு சமமானதாக இதனை கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்தனர். எனினும் மிகவும் காலம் கடந்தே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நாம் அழுத்தம் கொடுத்தது மட்டும் அல்லாது, அரசாங்கம் கொண்டுவராதபோது நாம் தனி நபர் பிரேரனையாக இதனை கொண்டுவரவும் தயாராக இருந்தோம்.
அரசாங்கம் தனது அரசியல் தேவைக்கு அமைய இந்த சட்டமூலத்தை தயாரித்து வைத்துள்ளது. இதில் கணக்காய்வு திணைக்களம் சுயாதீனமாக செயற்பட எந்த வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. கணக்காய்வாளர் நாயகமும் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கவில்லை. ஒரு சட்டம் இருக்கின்றது என்பதை காட்டவே இன்று அரசாங்கம் இதனை நிறைவேற்றியுள்ளது. சட்டம் மட்டுமே இருந்தும் எந்த பலனும் இல்லை. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாக கருதப்பட வேண்டும். இதன் மூலமாக பல்வேறு ஊழல்களை தடுக்க முடியும். பிரதேச சபைகள், மாகாணசபைகள், பாராளுமன்ற, அரச நிறுவனங்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களின் விசாரணைகளை நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற தன்மைக்கு அமையவே கணக்காய்வு சட்டமூலம் உருவாக்கப்பட்டது.
ஆனால் நிறைவேற்றும் போது இவை அனைத்துமே பறிக்கப்பட்டு வெறுமனே காலத்தை கடத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. கணக்காய்வாளர் தனது அதிகாரங்களை செயற்படுத்த முடியாது அமைச்சரவை தீர்மானம் மூலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளக கணக்காய்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தேசிய ரீதியில் உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தில் இவை பறிக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரி ஒருவர் பொய்யான கருத்தினை விசாரணைகளில் முன்வைத்தால் அது தவறு என நிருபிக்கப்பட்டால் அவருக்கான உயரிய தண்டனை 1 இலட்சம் என்று இந்த சட்டம் கூறியுள்ளது. இந்த திட்டத்தை 5 ஆயிரமாக குறைக்க அரசாங்கமே யோசனையை கொண்டுவந்துள்ளது.
சட்டத்தில் உள்ள கோரிக்கையையும் நிராகரித்து அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்கும் பக்கமே நிற்கின்றது. இந்த சட்டத்தை கொண்டுவருவதன் மூலமாக குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சட்டத்தையே பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் கையாள்கின்றது. நாம் 16 திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால் அவற்றில் ஒரு சிலவற்றை ஏற்றுகொண்ட போதும் எமது யோசனைகளை அவர்களின் யோசனைகளாக முன்வைத்தனர்.
எனது ஆடையை வேறு ஒருவர் அணிந்துகொண்டு அவரது ஆடையாக கூறுவது போன்றதே இந்த அரசாங்கம் செய்துகொண்ட விடயமாகும். இந்த சட்டத்தை பலவீனப்படுத்திய பிரதான பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். ஊழல் வாதிகளை காப்பாற்ற, ஊழலை மறைக்க பிரதம அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் இணைந்து சூழ்ச்சி செய்துவிட்டனர். அமைச்சர்களின் தேவைக்காக அரச அதிகாரிகள் செய்யும் தவறுகளை இன்று அமைச்சர்கள் காப்பாற்றுகின்றனர்.
கென்யா நாட்டின் கணக்காய்வு சட்டத்தை பார்த்தால், கணக்காய்வாளருக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழல் குற்றங்களில் நேரடியாக பொலிஸுக்கு முறைப்பாடு செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவ்வாறு ஒன்றும் இல்லை, வெறுமனே பாராளுமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதை தாண்டி எதனையும் செய்ய முடியாது. மேலும் பிரதமரது சிங்கப்பூர் விஜயம் எதற்காக என்பது எமக்குத் தெரியாது.
எனினும் மேமுதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து கண்டிப்பாக இந்த விஜயத்தில் கலந்துரையாடப்படும் என நம்ப முடியும். ஆனால் அர்ஜுன மஹேந்திரனை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர பிரதமர் போகவில்லை என்பதையும் கூற முடியும். எனினும் அர்ஜுன மஹேந்திரன் எங்கு ஒளிந்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் பிரதமர் பின்னால் ஒருவர் பின்தொடர்ந்தால் அவரை பிடிக்க முடியும். ஊடகங்களும் அதனை செய்ய முடியும். அப்போது அவரை கண்டறிய முடியும். சிலவேளைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உதயங்க வீரதுங்கவை வரவழைப்பதாக கூறியதை போன்று பிரதமர் அர்ஜுன மஹேந்திரனை வரவழைக்க சென்றாரோ தெரியவில்லை. நீ உதயங்கவை வரவழைத்தால் என்னால் அர்ஜுனவையும் வரவழைக்க முடியும் என்ற நேரடி சவால் ஏதும் உள்ளதா என்பதும் தெரியவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM