(எம்.சி.நஜிமுதீன்)
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தற்போது வரையில் உருவாகிய அரசியல் தலைவர்களில் பயங்கரவாதம் மற்றும் மோசடிக்கு எதிராக உரிய முறையில் போராட்டம் நடத்தி ஜனநாயகத்ததை நிலைநாட்டிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷதான். அவர் ஏற்படுத்திய சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் தற்போதைய ஆட்சியாளர்கள் சீர்குலைத்து வருகின்றனர். நாட்டில் தற்போது “ஜம்பர்” ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஏற்படுத்திய சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வேறு எவராலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆகவே விரைவில் நாம் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
“எலிய” அமைப்பு ஏற்பாடுசெய்த புத்திஜீவிகள் சந்திப்பு நேற்று கலேவலயில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
முன்னைய ஆட்சியின் போது சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி உள்ளிட்ட ஏனைய சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடன் பெறாது ஏன் சீனாவிடமிருந்து கடன் பெற வேண்டும் என எம்மீது சிலர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். எனினும் அதற்கான பதிலை தற்போது நாட்டு மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமிருந்து கடன் பெற்றமையினால் அவ்வமைப்புகள் நிபந்தனைகள் விதித்து நாட்டின் மீது அழுத்தம் பிரயோகிக்கின் றன.
அவ்வமைப்புகள் நாட்டில் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கத்தேவையில்லை என ஆலோசனை வழங்கியுள்ளன. சர்வதேச ஆலோசகர்கள் எமது நாட்டின் தேசியத்துவத்தின் முக்கியத்துவம், கலாசாரம், பாரம்பரியம் என்பன தெரியாத நிலையில் இவ்வாறான ஆலோசனைகளை வழங்குகின்றனர். நாம் உலகளாவிய பொருளாதாரத்துடன் ஒன்றித்து பயணிக்க வேண்டிய அதே நிலையில் தேசிய தொழில்களையும் மறந்துவிட முடியாது.
எனவே இவ்வாறான பிரச்சினை நாட்டில் இருக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் எதிர்தரப்பினரை அடக்குவதற்கு மாத்திரம் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். அதனால் நாடும் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் ஜனநாயகம் பற்றி பேசுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் ஏற்படுத்தியுள்ள ஜனநாயகம் சீர்குலைந்துவிடும் எனக் குறிப்பிடுகின்றனர்.
எனினும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தற்போது வரையில் உருவாகிய அரசியல் தலைவர்களில் பயங்கரவாதம் மற்றும் மோசடிக்கு எதிராக உரிய முறையில் போராட்டம் நடத்தி ஜனநாயத்ததை நிலைநாட்டிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக் ஷதான் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள முடியும்.
1987,88,89 ஆகிய காலப் பகுதிகளில் இடம்பெற்ற மோசடியினால் நாட்டிலுள்ள இளைஞர்,யுவதிகள் பாதிக்கப்பட்டபோது அதற்கெதிராக மஹிந்த ராஜபக் ஷ முன்னின்று செயற்பட்டார். அதேபோல் நாட்டில் 27 வருட காலமாக எந்தவொரு ஜனாதிபதியினாலும் கட்டுப்படுத்த முடியாது நாளுக்கு நாள் விஸ்தீரணமடைந்து சென்ற பயங்கரவாதத்தை மூன்று வருட காலப்பகுதிக்குள் துடைத்தெறிந்து நாட்டில் சமாதானத்தை கொண்டு வந்தவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷதான்.
யுத்த காலத்தில் அரச தலைவர்கள் உட்பட பாதுகாப்பு துறையினர், பொதுமக்கள் என சகல வர்க்கத்தினரும் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகியுள்ளனர். பஸ் வண்டி மற்றும் ரயிலில் பயணிக்க முடியாத நிலையிருந்தது. ஏனெனில் அங்கும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அத்துடன் வடக்கிற்கு எந்தவொரு அரசியல் தலைவர்களினாலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. கிழக்கின் மூன்றில் இரண்டு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கொழும்பு நகரிலுள்ள மத்திய வங்கி, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களும் சீர்குலைக்கப்பட்டன. தேரர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறான பயங்கரவாதம் நிலைகொண்டிருந்தபோது நாட்டில் சமாதானம் இருக்க முடியுமா? ஜனநாயகம் இருக்க முடியுமா? எனவே அவ்வாறான நெருக்கடிமிக்க நிலையை இல்லாதொழித்து நாட்டில் சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மஹிந்த ராஜபக் ஷவே ஏற்படுத்தினார்.
மஹிந்த ராஜபக் ஷ ஏற்படுத்திய சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் தற்போதைய ஆட்சியாளர்கள் சீர்குலைத்து வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்து செல்கின்றதெனில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியுமா? மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படுகின்றதென்றால் ஜன நாயகத்தை பாதுகாக்க முடியுமா?
தற்போது நாள் ஒன்று விடிவது ஏதாவதொரு மரணத்தை பறைசாற்றிக்கொண்டாகும். அந்தளவிற்கு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடு அதிகரித்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை நிறைவுசெய்த பின்னர் நாட்டில் அனைவரும் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தார்.பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட் டது.
தென் பகுதிபோல் வடக்கு, கிழக்கிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்கே அவை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. வெள்ளையரின் ஆட்சிக்குப் பின்னர் நாட்டில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில்தான். வவுனியாவிலிருந்து காங்கேசன்துறைக்கும், மதவாச்சியிலிருந்து மன்னாருக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
எனினும் ஜனநாயகம் பற்றிப் பேசும் நல்லாட்சி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நீண்ட காலம் காலம் தாழ்த்தியது. அதேபோல் தற்போது மாகாண சபைத்தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தி வருகிறது. மக்களின் அபிப்பிராயத்தை தெரிவிப்பதற்கு இடமளிப்பது ஜனநாயகத்தின் பிரதான மூலக்கூறாக உள்ளது. எனினும் நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் நடத்துவதாக இல்லை.
எனினும் முன்னைய ஆட்சியில் சகல மாகாணங்களிலும் சகல தேர்தல்களும் உரிய காலத்திற்கு முன்னதாகவே நடத்தப்பட்டன. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தேர்தல் நடத்தப்பட்டது. வடக்கிலும் தேர்தல் நடத்தப்பட்டது. வட மாகாண சபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறவேண்டுமானால் ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் கருணா அணியிடம் உள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என என்னிடம் மஹிந்த ராஜபக் ஷ வேண்டிக்கொண்டார். எனவே தேர்தலுக்கு முன்னர் நாம் ஆயுதங்களைக் களைந்தோம்.
எனவே மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் ஏற்படுத்திய சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வேறு எவராலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது. இவர்கள் அதனை சீரழிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் ஜனநாயக விரோத செயற்பாடுகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பிரதமர் நியமனம் முதல் ஜனநாயக விரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது. பிரதம நீதியரசரையும் அரசியல் அமைப்புக்கு எதிரான முறையில் நீக்கினர். அத்துடன் முதலமைச்சர்களையும் ஜனநாயகத்திற்கு எதிராக மாற்றினர்.
தற்போது தேரர்களுக்கு “ஜம்பர்” அணிவிக்கின்றனர். அதேபோல் அரச உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலருக்கும் “ஜம்பர்” அணிவிக்கின்றனர். எனவே நாட்டில் தற்போது ஜம்பர் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றி பேசுவதில்லை. மாறாக அரசியல் வைராக்கியமே பேசுகின்றனர். குறித்த நபரை குறித்த தினத்தில் சிறையில் அடைப்பதாக பெயர் கூறிக் குறிப்பிடுகின்றனர்.
ஏதாவது பிழை செய்திருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் விதிமுறை உள்ளது. ஆனால் அதற்குப் புறம்பாகவே தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வது? யாரை சிறையில் அடைப்பது என்பது குறித்து அரசியல்வாதிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் குழுக்களுமே அதனைத் தீர்மானிக்கின்றன. எனவே நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் சீரழித்துக்கொண்டு வருகிறது.
சிலர் பாராளுமனறில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது குற்றசாட்டுக்களை முன்வைக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு தமது கடந்த காலம் மறந்து போயுள்ளது.பட்டலந்த வதை முகாம் மற்றும் வெள்ளை வேன் கடத்தலின் ஸ்தாபகர்கள் தற்போது ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றனர்.
நாட்டில் பாரிய பிரச்சினை இருக்கும் நிலையில் , எனது வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்ட அநுநாயக்க தேரர் குறிப்பிட்ட ஆலோசனையை திரிபுபடுத்தி அதனை பலர் பேசினர். அவ்வாறான அராஜக நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தை நாம் மாற்றுவதுடன் எதிர்வரும் அரசாங்கம் எவ்வாறு அமைய வேண்டும் எனவும் கவனம் செலுத்தவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM