பிரேஸில் தேசத்தின் மரக்கானா விளையாட்டரங்கில் நான்கு வருடங்களுக்கு முன்னர் உலக சம்பியனான ஜெர்மனியும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நான்கு நாட்கள் இடைவெளியில் ஒரே மைதானத்தில் தோல்விகளைத் தழுவி ரஷ்யா 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து வெளியேறின.
தென் கொரியாவிடம் கஸான் விளையாட்டரங்கில் முதலாம் சுற்றின் கடைசிக் கட்ட லீக் போட்டியில் கடந்த புதன்கிழமை 0 க்கு 2 என்ற கொல்கள் கணக்கில் தோல்வி அடைந்து ஜேர்மனி வெளியேறியிருந்தது.
இதே மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் (16 அணிகளுக்கான இரண்டாம் சுற்று நொக் அவுட்) பிரான்ஸிடம் 3 க்கு 4 என்ற கோல்கள் அடிப்படையில் ஆர்ஜன்டீனா தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளுடன் பெரும்பாலும் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படும் ஆர்ஜன்டீன அணித் தலைவர் லயனல் மெசி பெரிதும் அதிர்ந்துபோய் காணப்பட்டார்.
19 வயதுடைய இளஞ்சிங்கம் கய்லியன் எம்பாப்பே போட்டியின் இரண்டாவது பகுதியில் நான்கு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டதன் மூலம் ஆர்ஜன்டீனாவை வெற்றிகொண்ட பிரான்ஸ் முதலாவது அணியாக கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இரண்டு சம்பியன் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப் போட்டியில் ஒரு கோல் பின்னிலையிலிருந்து மீண்டு வந்த பிரான்ஸ் அபார வெற்றியீட்டியது.
போட்டியின் 11ஆவது நிமிடத்தில் எம்பாப்பேயை தனது பெனல்டி எல்லைக்குள்வைத்து மார்க்கோஸ் ரோஜோ முரணான வகையில் வீழ்த்தியதால் பிரான்ஸுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
இரண்டு நிமிடங்கள் கழித்து பெனல்டியை எடுத்த அன்டொய்ன் க்றீஸ்மான் மிக நிதானமாக கோலினுள் பந்தைப் புகுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார்.
இடைவேளைக்கு 4 நிமிடங்கள் இருந்தபோது 25 யார் தூரத்திலிருந்து ஏஞ்சல் டி மரியோ இடதுகாலால் உதைத்த பந்து கடுகதி வேகத்தில் பிரான்ஸ் கோல்காப்பாளர் அணித் தலைவர் ஹியூகோ லோரிஸைக் கடந்து வலது முலையால் உள்ளே நுழைந்தது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 3ஆவது நிமிடத்தில் லயனல் மெசி உதைத்த பந்து திசை திரும்பிவந்துபோது கெப்றில் மார்க்கோடோ மிக வேகமாக செயற்பட்டு கோலாக்கி ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் பிரான்ஸ் அணியினர் மிக வேகமாக பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு ஆர்ஜன்டீனாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆர்ஜன்டீனா தனது வழமையான விளையாட்டிலேயே ஈடுபட்டது.
57ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூக்கஸ் ஹேர்னெண்டெஸ் பரிமாறிய பந்து பெஞ்சமின் பவார்டை அடைந்தபோது அவர் மிக இலாவகமாக கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
ஏழு நிமிடங்கள் கழித்து ஆர்ஜன்டீன கோல் எல்லையில் நிலவிய தடுமாற்றத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட எம்பாப்பே பந்தை கோலினுள் செலுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார். அத்துடன் எம்பாப்பே நின்று விடவில்லை. 68ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து அரங்கில் சற்று முரட்டுத்தனமான விளையாட்டு இடம்பெற்றதுடன் அடிக்கடி மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டையும் காட்டப்பட்டது.
இதனிடையே இரண்டு அணிகளும் ஓரிரு கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டன.
போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன வீரர் சேர்ஜியொ அகேரோ தலையால் பந்தை தட்டி அலாதியான கோல் போட்டார். ஆட்டம் உபாதையீடு நேரத்துக்குள் சென்றபோது இரண்டு அணி வீரர்கள் முரட்டு சுபாவத்துடன் விளையாடியதுடன் முட்டிமோதிக்கொள்ளவும் செய்தனர். இதன் காரணமாக நிலைமையக் கட்டுப்படுத்த வீரர்களை எச்சரித்த மத்தயஸ்தர், இரண்டு அணிகளிலும் தலா ஒரு வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டினார்.
உபாதையீடு நேரத்தின் 3ஆவது நிடத்தில் மெசி உயர்வாகப் பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய சேர்ஜியோ அகுவேரோ தலையால் முட்டி கோலை சமப்படுத்த முயற்சித்தார். ஆனால் பந்து இலக்கு தவறி வெளியே செல்ல பிரான்ஸின் வெற்றி உறுதியானது.
(என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM