(ரி.விரூஷன், எம்.நியூட்டன்)
தமிழ் மக்களுடைய ஆதரவினை பெற்றுக்கொண்ட தமிழ் தலைமைகள் பிரிந்து நிற்குமானால் அது தமிழ் மக்களை அழிக்கின்ற ஒரு செயற்பாடாகவே அமையும். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து ஓர் தூணாக நிற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வட முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகின்றார்' என்ற நூல் வெளியீடானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எம்மிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் வேறுபட்டிருக்கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். தமிழ் மக்களது ஒற்றுமையானது தம்முடைய தலைவிதியை மாத்திரமின்றி இந் நாட்டின் தலைவிதியையே மாற்றும் என்பதை வெளிக்காட்டியுள்ள நாம் அதனை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகள் அவர்களின் உரித்துக்கள் இலங்கை அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட காலத்தில் அதனை பெற்றுக்கொள்வதற்காக ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவிய சர்வதேசத்துக்கு, தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்குரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்குரிய தார்மீக கடமை உள்ளது என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆற்றிய உரைகள் ஆழமான கருத்துக்களையும் சிறப்பான கருத்துக்களையும் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக அவரது அறிவின் அடிப்படையிலும் செயலின் அடிப்படையிலும் அமைந்துள்ளன. இந் நிகழ்வில் பலர் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாக பேசியிருந்தார்கள். அதாவது அவர்கள் பேசிய விடயம் தமிழ் மக்களது இனப்பிரச்சினை க்கு தீர்வு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்.
சாதாரணமாக ஒரு நாடு சுதந்திரம் அடைய முன்பு அந் நாட்டில் வாழ்கின்ற மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வானது முன்வைக்கப்பட்டு அந்த தீர்வுகள் ஒரு அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டு அவை நடமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இலங்கையை பொறுத்தவரையில் அவ்விதமாக நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றிருந்தால் 1948 இலங்கை சுதந்திரம் அடையும் போது தமிழர்களது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக நான் சில விடயங்களை கூற வேண்டும். நாடு சுதந்திரம் அடைய முன்பு இங்கு வந்த டொனமூர் ஆணைக்குழு முன்பு கண்டிய தலைவர்கள் கருத்துக்களை கூறும் போது, இந் நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் அதனை நாம் ஏற்கவில்லை. யாழ்ப்பாணத்து இளைஞர் கழகம், தமக்கு பூரண சுதந்திரம் கேட்டது. அதாவது சிறுபான்மை இனத்தவருக்கும் பெரும்பான்மை இனத்தவருக்கும் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டோம். ஆனால் பிராந்திய ரீதியான அதிகாரங்களை நாம் ஒரே நாட்டுக்குள் கேட்கவில்லை.
தமிழ் மக்கள் தாம் மிகவும் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமது இறையாண்மையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி வேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் நாடு பூராக ஐம்பதுக்கு ஐம்பது கேட்டோம். பிராந்திய சுயாட்சி கேட்டிருந்தால் இந்த பிரச்சி னையை அப்போது தீர்த்திருக்கலாம். ஆனால் கேட்கவில்லை. இதனால் பிரச்சினைகள் இப்போதும் தொடர்கின்றன.
நாடு சுதந்திரம் அடைந்த பிற்பாடு முதல் நடவடிக்கையாக இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. பெரும்பான்மை இன மக்கள் தமிழ் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தின் தோற்றம் மாற்றமடைந்தது. அது தற்போது வடக்கு மாகாணத்தில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அது நிறுத்தப்பட வேண்டிய விடயம். இவ்விதமான கருமங்களை, நாங்கள் பிராந்திய சுயாட்சியுடன் அதிகாரங்களை பெற்றிருந்தால் தவிர்த்திருக்கலாம். அது முடிந்த கதை. இதனை கதைப்பதால் எந்த பிரயோசனமும் வரப்போவதில்லை.
இன்றுள்ள பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும். நாடு பூராகவும் உள்ள மக்கள் இதனை என்ன விதமாக பெறப் போகின்றோம். சர்வதேச ரீதியாக என்னவிதமாக அணுகப் போகின்றோம். வடகிழக்கில் இதனை என்னவிதமாக அணுகப்போகின்றோம் என்பன தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
இன்று நாட்டில் எல்லா மாகாணங்களும் கூடிய அதிகாரங்களை கேட்கின்றன. காணி அதிகாரம், சட்ட ஒழுங்கு அதிகாரம் என கேட்கின்றார்கள். அந்த விடயத்தில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம். இவை தவிர மத்திய அரசாங்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது எனவும், ஆளுநரின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்கின்றார்கள். அண்மையில் தென்மாகாண முதலமைச்சர் ஆளுநர் பதவி நீக்கப்பட வேண்டும் என கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் நாங்கள் யாரையும் பகைக்க வேண்டியதில்லை. எல்லோருடனும் நட்புறவை பேண வேண்டும். நியாயத்தை நீதியை விளக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் பல இனம் வாழ்கின்ற நிலையில் அங்கு எவ்விதமான ஆட்சிமுறையை பின்பற்றியிருக்கின்றார்கள் என்பதை விளக்க வேண்டும். அதனை தென்பகுதி மக்கள் அறிய வேண்டும். அதனை தற்போது அவர்கள் அறிந்துகொண்டு வருகின்றார்கள். தென்பகுதி மக்கள் எல்லோரும் துவேசமானவர்கள் இல்லை. துவேசமானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பெரும்பான்மையில் இல்லை.
இன்று ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்க ஒரு முயற்சி நடைபெற்று வருகின்றது. அதனூடாக நிரந்தரமான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு வழியிருக்குமாக இருந்தால் அந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அதனை இழக்க கூடாது. எங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும். அடிப்படை விடயங்களை நாம் அதற்காக விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால் நாங்கள் ஈடுபட்டு எமது மக்களுக்கு உரிய பாதுகாப்பை, அவர்களுக்கு உரிய உரிமைகளை அங்கீகரிக்கக்கூடிய வழி இருந்தால் அதனை நாம் இழக்கக்கூடாது. அதனை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
சர்வதேச சமூகத்தின் பொறுப்பு
இலங்கை பிரச்சினையை தீர்ப்பதற்குசர்வதேச சமூகத்திற்கு ஒரு தார்மீக கடமை இருக்கின்றது. 1987ஆம் ஆண்டு ராஜிவ் காந்தியின் தலையீட்டினாலேயே 13ஆவது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு மாவட்ட சபைகளே பெற முடியாத எமக்கு மாகாண சபைகள் வழங்கப்பட்டு வட கிழக்கு இணைக்கப்பட்டு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டன, முதலமைச்சர் அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டு பல கருமங்கள் நடைபெற்றன. ஆனால் அதனை நாம் நிரந்தர தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அண்ணன் அமிர்தலிங்கம் நான், உட்பட மூவர் கையொப்பமிட்டு ராஜீவ் காந்திக்கு 1987ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் தெளிவாக மாகாண சபை ஒரு தீர்வாக அமைய முடியாது என குறிப்பிட்டோம். நாம் நிரந்தரமான தீர்வு நோக்கி பயணிக்கின்றோம்.
இவ்வாறான நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் எமது மக்கள் சார்பாக அவர்களது உரிமைகளுக்காக தீவிரமான ஆயுத போராட்டத்தை நடத்தினார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெறவில்லை. அந்த முயற்சியில் நீதி நியாயம் இருந்தது. அது மறுக்கப்பட முடியாது. தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அவர்கள் உரிமை உரித்துக்கள் வழங்கப்படாத நிலையிலேயே ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
அதனை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஓர் முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியது. இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உதவின. இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டார்கள். அதனால் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை இலகுவாக தோற்கடித்தது.
இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் அவர்களை அழிக்க முழுமையான ஆதரவை வழங்கியது. இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு ஓர் வாக்குறுதியை கொடுத்தது. நியாயமான அரசியல் தீர்வை நாம் ஏற்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கொடுத்தது.
அது மாத்திரமல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு பல முன்மொழிவுகளை வைத்தது. அரசியல் தீர்வு சம்பந்தமாக இவற்றை முன்வைத்தார்கள். அவ்விதமான தீர்விலே இலங்கை அரசாங்கம் இன்றுவரை பின்னிற்கின்றது. இதனை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களது நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதில் சர்வதேசத்திற்கு தார்மீக கடமை இருக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வினை காண்பதற்கு தங்களது பங்களிப்பினை செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதில் அவர்கள் தவற முடியாது. இதில் அவர்கள் தவறினால் அவர்களுடைய செயற்பாடு சர்வதேச ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும்.
தமிழ் மக்களின் ஒற்றுமை
எல்லாவற்றிற்கும் மேலாக இவற்றை நாம் அடைவதாக இருந்தால் நாம் ஒருமித்து நிற்க வேண்டும். ஒரு தூணாக நிற்க வேண்டும். அதனை பெரும்பான்மையினர் உணர வேண்டும். பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் உணர வேண்டும். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாம் வழங்கிய தீர்ப்பு நாட்டிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் மக்கள் தமது ஒற்றுமையின் மூலமாக தம்முடைய தலைவிதியை மாத்திரமல்ல இந்த நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கக் கூடிய வல்லமை அவர்களிடம் இருக்கின்றது என்பதை நாம் அவர்களிடம் காட்டியிருக்கின்றோம். அந்த நிலைமை தொடர வேண்டும். அந்த ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.
எம்மிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் வேறுபட்டிருக்கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்திற்கு, தமிழ் மக்களின் ஆதரவை தாம் பெற வேண்டும். அவர்களை தாம் தொடர்ந்தும் புறக்கணிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆதரவை பெற்றால் தான் நாம் ஆட்சிக்கு வர முடியும் என்ற சிந்தனை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். இதனைக்கூற வேண்டியது எனது கடமை. அதனை நாம் பாதுகாக்க ஒற்றுமையாக ஒருமித்து நிற்க வேண்டும். நாம் பிரிவோமானால் எமது மக்களை நாம் அழிப்போம். அதற்கு நாம் இடமளிக்க கூடாது. நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM