வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் உலகமே உற்றுநோக்கியுள்ளது.
தனிமைபடுத்தப்பட்ட வட கொரியா, அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்தும் சாத்தியத்தை உள்ளதாக வடகொரிய ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.
இருவருக்குமிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தை இடம்பெற இன்னும் ஒருநாள் மாத்திரமே உள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிற்காக வடகொரிய தலைவர் கிம் யொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர்.
பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் விரோதமான மனநிலையை கடைப்பிடித்து வந்த வட கொரியாவின் கர்ச்சிப்பில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த உச்சிமாநாடு குறித்து "நல்ல எதிர்பார்ப்பு உணர்வு" இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, வட கொரிய தலைவர் கிம், அணுஆயுதங்களை இந்த மாநாட்டின் இறுதியில் கைவிடுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.
வட கொரிய தலைவர் கிம், சிங்கப்பூருக்கு சென்றதை உறுதி செய்துள்ள அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ரொடொங் சின்மன் செய்தித்தாள், "புதிய சகாப்தத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, புதிய உறவினை உருவாக்குவோம்" என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் நிரந்தர மற்றும் அமைதியான ஆட்சியை ஏற்படுத்த மற்றும் அணு ஆயுதங்களை கைவிடுதல் போன்ற விவகாரங்களுக்கு தீர்வு காண, "பரந்த மற்றும் ஆழமான கருத்துகள்" பரிமாறிக் கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் யொங்-உன் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
''ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது'' என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வட கொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதே வேளையில், இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் வட கொரியா எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
கிம் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்த போதிலும், அவ்விரு இடங்களும் வெகு தொலைவில் இல்லை.
நாளை செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெறவுள்ளது.
தற்போது இரு தரப்புக்கும் இடையேயான அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டது. இரு தலைவர்களும் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிப்பர் என்றும், கொரிய பிராந்தியத்தை ''அணுஆயுதமற்ற'' பிரதேசமாக மாற்றுவது, இருதரப்புக்கும் இடையேயான பரஸ்பர கவலைதரும் அம்சங்கள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்தார். விமானத்தில் இருந்து டிரம்ப் இறங்கியவுடன் அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
இதனிடையே, வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தனது சகோதரியான கிம்-யோ-ஜாங் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிம் சிங்கப்பூர் வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எவ்வாறு அமையப் போக்கின்றது. இருவரும் இரு வேறுபட்ட மனநிலையுடையவர்கள் எவ்வாறு பேச்சுவார்த்தையை எதிர்கொள்ளப்போகின்றனர். அதனை எவ்வாறு கையாளப்போக்கின்றனர் என்ற பார்வையில் உலகம் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM