(ஆர்.ராம்)
தெற்காசிய பொருளாதார நிலைமை கள் மற்றும் சீனாவின் பொருளாதர வளர்ச்சி , எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இந்திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன் "கேசரி"க்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:
வெளிநாட்டு வர்த்தகம் என்றாலே அச்சம்
1949 ஆம் ஆண்டு சீனா கம்யூனிஸ ஆட்சி நாடாகின்றது. அச்சமயத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு தமது நாடு உலகில் எந்த நாட்டுடனும் உறவினைக் கொண்டிருக்காது அனைத்தையும் தமது நாட்டுக்குள்ளே தாமே கையாளவேண்டும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. பொதுவாக காலனித்துவத்தின் அனுபவத்தைப் பெற்றிருந்த சீனா போன்ற கம்யூனிஸ நாடுகள் தமது நாட்டின் வளங்களையும் மூலங்களையும் ஏகாதிபத்திய நாடுகள் எடுத்துச் சென்றுவிடும் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டன. இதன் காரணத்தால் வெளிநாட்டு வர்த்தகம் என்பதை முழுமையாக எதிர்த்தன. ஒருவேளை வெளிநாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவுகளைப் பேண விரும்பினால் சோவியத் குடியரசுடன் மட்டுமே அத்தகைய உறவுகளை மேற்கொண்டன.
உறவு முறிந்ததால் மாறிய சிந்தனை
குறிப்பாக சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் (சோவியத் குடியரசாக இருந்து மாற்றமடைந்தது) இடையில் வர்த்தக ரீதியாக உறவுகள் வலுவாக காணப்பட்டபோதும் சுமார் பத்தாண்டுகள் வரையில் தான் அந்த உறவுகள் நீடித்திருந்தன. அதன் பின்னர் அந்த உறவுகளில் முரண்பாடுகள் ஏற்படவும் சீன –ரஷ்ய உறவுகள் முறிவடைந்தன. இந்த நேரத்தில் தான் சீனா தன்னுடைய வெளியுறவுக் கொள்ைககளை மீள்பரிசீலனை செய்ததோடு தொடர்ந்தும் ரஷ்யாவுடன் தன்னை மட்டுப்படுத்தாது அடுத்த கட்டங்களை ஆராய ஆரம்பித்தது. இவ்வாறு வர்த்தக ரீதியில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் ஆரம்பமானது.
எதிரிக்கு எதிரி நண்பன்
சீன–ரஷ்ய பனிப்போரை அவதானித்த அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சீன–ரஷ்ய உறவுகளை நிரந்தரமாகப் பிரிக்க வேண்டும் என்ற திட்டத்தைத் தீட்டிக்கொண்டு பாகிஸ்தான் வழியாக சீனாவுக்கு இரகசியமான பயணத்தை முதன்முதலாக மேற்கொண்டார். இதன்மூலம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் 20 ஆண்டு காலமாக நீடித்த தொடர்பாடலற்ற நிலைமை முடிவுக்கு வந்தது. இந்த விஜயத்தின் பின்னர் புதிய சீனக் கொள்கை என்ற தொனியுடன் உறவுகளை நிக்ஸன் ஆரம்பித்தார்.
சந்தேகத்துடன் மாறிய சிந்தனை
இத் தருணத்தில் தான் சீனாவின் ஜனாதிபதியாக இருந்த டெங் சியோ பிங், சிந்தித்தார். வெளிநாடுகளுடன் உறவுகளை வைப்பதால் சீனாவுக்கு நன்மை ஏற்படுமா என்ற சந்தேகத்துடன் ஒருதடவை முயற்சி எடுத்துப்பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தார். இவ்வாறான மாற்றத்தின் மூலமே சீனா முதன்முதலாக சர்வதேச வர்த்தகம் மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவற்றுக்குள் காலடியெடுத்து வைத்தது. மாவோ சே துங், சீனாவின் பொருளாதாரத்தை நவீனத்துவத்துடன் உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
முன்னதாகவே சீனாவானது தனது நாட்டில் கைத்தொழில்துறை, சுங்கத்தொழில்துறை போன்றவற்றில் அதிகளவு முதலீடுகளை செய்திருந்தமையால் அவ்வாறான துறைகள் அதீத வளர்ச்சி மட்டத்திலிருந்தன. அதீத உள்நாட்டு முதலீட்டின் காரணமாக சீனாவின் உள்ளக கட்டமைப்பில் பாரிய வளர்ச்சியும் ஒருங்கே காணப்பட்டது. தன்னை சுயபரிசீலனைக்குட்படுத்திய சீனா மிகை முதலீடுகளை நாட்டுக்குள் செய்து விட்டோம் என்பதையும் உணர்ந்து கொண்டது.
இதன் காரணமாக 1985 ஆம் ஆண்டு சீனா உலக வர்த்தக அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பித்தது. முதலில் 10 ஆண்டுகளுக்கு இணைந்து செல்வதாக சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் உலக வர்த்தக அமைப்பு கடுமையான நிபந்தனைகளை சீனா மீது பிரயோகித்தபோதும் மாவோ சே துங் "சீனாவை உலகத்துடன் இணைத்தே தீருவேன்" என்ற தனது இலக்கில் உறுதியாக இருந்தமையால் அவற்றை சுமுகமாகக் கையாண்டார். அத்துடன் நிக்ஸனின் சீன விஜயத்தின் மூலம் ஏற்பட்ட சீன–அமெரிக்க உறவால் சீனாவுக்கான சந்தை வாய்ப்பு வசதியை சீனா முழுமையாக வழங்கியது.
எவ்வாறு வெற்றிபெற்றது முதல் முயற்சி?
உலக வர்த்தக அமைப்புடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்னதாக சீனா முக்கிய சில விடயங்களை முன்னெடுத்தது. சீன முதலீடுகளில் தனியார் சொத்துக்கள் காணப்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் மூலங்களும் வளங்களுமே காணப்பட்டன. மக்களிடத்தில் மிகையான சேமிப்பு காணப்பட்டாலும் வங்கிகளில் பணத்தை சேமிக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் சேமிப்புக்கான வழிகளை ஏற்படுத்தினாலும் அவர்கள் முதலிடுவதற்குத் தயாராக இல்லை. அது அபிவிருத்தி குறைந்த காலம் என்பதால் தமது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையுடனேயே இருந்தார்கள்.
எனினும் டெங் சியோ பிங், மக்களுக்கான புரிதலை ஏற்படுத்தினார். மக்களுக்கான உத்தரவாதத்தையும் அவரே அளித்தார். அத்துடன் ஒவ்வொருவரின் பெயரிலுமே நிதியை வைப்பிலிடுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார். இதன் காரணத்தால் சீனாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தாமாக வந்து வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்தனர். இதன் காரணத்தால் பெருந்தொகையான நிதி கிடைத்தது. அந்த நிதியைப் பயன்படுத்தி முழுநாட்டிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்கள். போக்குவரத்து, தொடர்பாடல், கட்டட வசதிகள், மின்சாரம் என அனைத்து விடயங்களையும் உயர்த்தினார்கள். தம்முடைய உற்பத்திப்பொருட்கள், தொழிலாளர்கள் என அனைத்தும் உள்நாட்டு வளங்களை மட்டுமே பயன்படுத்தி உட்கட்டமைப்பினை உயர்ந்த தரத்தில் கட்டியெழுப்பினார்கள்.
இதுமட்டுமன்றி 1978 ஆம் ஆண்டு முதல் சீனா தனது கடற்கரைப் பகுதிகளை வெளிநாடுகளின் நேரடி முதலீடுகளுக்காக திறந்து விட்டது. 1997ஆம் ஆண்டு வரை சீனா இதனைப் பின்பற்றியதால் 85 சதவீதமான முதலீடுகள் கிடைக்கப்பெற்றன. இவ்வாறு வெளிநாடுகளின் முதலீடுகளுக்காக சீனாவின் கதவுகள் திறந்தமையானது அதற்கு மேலும் வாய்ப்பாக அமைந்தது. அதேநேரம் இக்காலப்பகுதியில் இரட்டை நாணயப் பரிமாற்றம் என்ற கொள்கையை பின்பற்றிய நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. வர்த்தகம் மற்றும் உள்நாட்டு நிதி ஆகியவற்றுக்காக நிலையான ஒற்றை நாணயக் கொள்கையையே பின்பற்றுவதென்றும் தீர்மானித்தது.
அனைத்தையும் அள்ளிச் சென்ற அலை
அமெரிக்காவுக்கு மட்டும் தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்துகொண்டிருந்த சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு தனது ஏற்றுமதியை உடனடியாக விரிவுபடுத்தியது. இத்தகைய செயற்பாடுகளால் அமெரிக்காவில் இயங்கி வந்த பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் பார்வை சீனாவை நோக்கித் திசை திரும்பியதோடு மட்டும் நின்றுவிடாது அந்த மண்ணை நோக்கி நகரவும் ஆரம்பித்தன.
உதாரணமாகக் கூறுவதாயின் "வோல்மார்ட்", "ஹேன்ஸ்" போன்ற பாரிய வர்த்தக நிறுவனங்கள் சீனாவுக்கு தம்மை விரிவுபடுத்தின. இதன் காரணத்தால் "அடிடாஸ்" போன்ற நிறுவனங்கள் விலைக்குறைப்பினை செய்ய வேண்டாம் என்று "வோல்மார்ட்" இடம் கோரியபோதும் அது வெற்றிபெறவில்லை. மாறாக உங்கள் நிறுவனங்களை சீனாவுக்கு மாற்றுங்கள் என்று "வோல்மார்ட்" போன்ற நிறுவனங்கள் விடுத்த பணிப்புரையே நடைமுைறச்சாத்தியமானது. இதனால் அமெரிக்காவில் இயங்கிவந்த "அடிடாஸ்" உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சீனாவை நோக்கிப் படையெடுத்தன.
கெஞ்சலும் மிஞ்சலும்
இதன்காரணமாக சந்தைவாய்ப்பினை அளித்து சீனாவுக்கு நவீன பொருளாதாரப் பிரவேசத்துக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த அமெரிக்கா சீனாவின் மீது கோபமடைந்தது. நிலையான ஒற்றை நாணயக் கொள்கையின் காரணமாக நாணயப் பெறுமதி விகிதம் குறைக்கப்படுவதோடு உற்பத்திகள் மீது குறைமதிப்பீடுகளே இடம்பெறுவதாகவும் சீனாவிடம் தெரிவித்த அமெரிக்கா, உடனடியாக இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும். அதற்காக நிலையற்ற நாணயக் கொள்கையை அதாவது சந்தை நிலைமைகளை அடியொற்றிய நாணயக்கொள்கையை சீனா பின்பற்ற வேண்டும் என்றும் நேரடியாகவே வலியுறுத்தியது. இருப்பினும் சீனா அதற்கு மறுத்துவிட்டது.
மறுத்ததுடன் நிறுத்தாத சீனா அதற்கான உரிய காரணங்களையும் தெளிவுபடுத்தியது. அதாவது யுவான் மூலம் உற்பத்திகளுக்கான விலைகளைக் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை. மாறாக நிலையான பொருளாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்காகவே யுவானுக்கு நிலையான மதிப்பொன்று பின்பற்றப்படுகின்றது என்று சீனா தனது வாதத்தை முன்வைத்தது.
இருப்பினும் பின்னரான காலங்களில் சர்வதேச நாணய நிதியமானது சீனாவின் யுவான் மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் நேரடியான ஆய்வுகளை மேற்கொண்ட போது சீனாவின் வாதத்திலுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டது. அத்துடன் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் நீடித்திருந்த நாணயக்கொள்கை சார்ந்த முறுகல் நிலைமையானது முடிவுக்கு வந்திருந்தது.
தந்திரமான கொள்கை
அதற்கு அடுத்த காலப்பகுதியில் சீனா ஏனைய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்தது. அதன் முதல் கட்டமாக 2000ஆம் ஆண்டு ஆசியான் அமைப்புடன் ஒப்பந்தத்தை சீனா செய்துகொண்டது. அதன் பின்னர் தற்போது வரையில் சீனா நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளதோடு பல நாடுகளுடன் அவ் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான இறுதி நிலைமைகளும் காணப்படுகின்றன. மேலும் சில நாடுகளும் சீனாவுடன் கைகோர்ப்பதற்கு சிந்திக்கின்ற நிலைமைகளும் ஏற்பட்டுள்ளன.
சீனாவின் சுதந்திர ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் கொள்கையில் பொருளாதார நலன்களைத் தாண்டி அரசியல் ஆதாயம் ஈட்டுகின்ற போக்கும் உள்ளது. ஒப்பந்தங்கள் இடம்பெற்ற பின்னர் அதில் கிடைக்கின்ற வருமானத்தை சீனா மீண்டும் அந்த நாட்டிலேயே முதலிடவோ அல்லது கடனாக வழங்கவோ தான் அதிகமாக முயற்சிக்கும். தற்போதைய சூழலில் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் அவர்களின் வரவு –செலவுத்திட்டங்களில் உள்ள கடன்படுதொகையை குறைக்க வேண்டியுள்ளதால் நிதித்தேவை அதிகமாகவுள்ளது. ஆகவே அந்த நாடுகளும் கடன்களை பெற்றுக்கொள்வதற்கே எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.
மேலும் இத்தகைய நாடுகள் தமது உட்கட்டமைப்பு மேம்பாட்டையும் எதிர்பார்ப்பதால் சீனாவுக்கு இலகுவாக தனது வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடிந்து விடுகின்றது. இச் செயற்பாடுகள் அனைத்துமே இயல்பாகவே உள்நாட்டு அரசியலில் தலையீடுகளை செய்வதற்கு இடமளிப்பதாக அமைந்து விடுகின்றன. இதன் காரணமாகவே சீனா தனது பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி அரசியலில் தலையீடுகளை மேற்கொள்கின்றது. இது சீனாவின் "பொருளாதார உதவி வழி இராஜதந்திரம்" என அழைக்கப்படுகின்றது.
இதேவேளை சீனாவானது பல்தேசிய நிறுவனங்களுக்கான வாய்ப்புக்களை தனது நாட்டுக்குள் சுதந்திரமாக ஏற்படுத்திக்கொடுக்கின்றது. இதன்மூலம் தனது உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை மிகப்பெருமளவில் அதிகரிக்கின்றது. உதாரணமாக கூறுவதானால் ஐ-போன்களை தற்போது சீனா ஏற்றுமதி செய்கின்றது. ஆனால் ஐ-போனில் ஏற்றுமதியை செய்யும் சீனா சார்பான மதிப்புத்தொகை 2 சதவீதமாக மட்டும் தான் உள்ளது. இதனை விடவும் உற்பத்தி மூலப்பொருட்கள், பகுதியளவில் நிறைவடைந்த உற்பத்திகள் என சீனா அனைத்து விடயங்களையும் முன்னெடுத்தது.
இந்த விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது. இந்தியாவுக்கு உற்பத்தி முடிவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் விலைநிர்ணயம் தொடர்பான பிரச்சினைகள் காணப்பட்டன. இந்தியாவிலுள்ள கைத்தொழில்துறையும் பாரியளவில் உற்பத்தியை மேற்கொண்டு ஏற்றுமதியை மேற்கொள்வதில் முழுமையான பலத்துடன் இருக்கவில்லை. அத்துடன் மூலப்பொருட்களை ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்வதிலும் அதிகளவு கவனம் செலுத்தவில்லை. இவ்வாறான நிலைமைகள் கடந்த 8 வருடங்களாக நீடித்திருந்தன. ஆகக்குறைந்தது சீனாவுக்கு மூலப்பொருட்களை விநியோகிக்கும் செயற்பாட்டைக் கூட அந்நாடு முன்னெடுத்திருக்கவில்லை.
வல்லரசின் மீதுள்ள ஆதிக்கம்
4 ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவிடம் 4 ரில்லியன் அமெரிக்க டொலர்களே சீனா சார்ந்த கையிருப்பாக இருந்தது. தொடர்ச்சியான காலத்தில் சீனாவின் யுவானின் சமநிலைத்தன்மையும் வெளி நாட்டு முதலீடுகளும் அத் தொகையை தற்போது 3.33 ரில்லியன் அமெரிக்க டொலர்களாகியுள்ளது. அமெரிக்காவில் சீனாவுக்குள்ள கையிருப்பானது பாரிய நன்மைகளையே அளித்திருக்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சீனாவின் அக் கையிருப்புத் தொகையானது அமெரிக்காவின் வரவு–செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை வெகுவாகக் குறைப்பதாகவே உள்ளது.
ஆகவே அமெரிக்காவுக்கு சீனாவை இலகுவில் புறந்தள்ளி விடமுடியாத நிலைமையே உள்ளது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எவ்விதமான கருத்துக்களை முன்வைத்தாலும் சீனாவின் கையிருப்புத் தொகைக்கான மாற்று நிதி மூலங்களை உடனடியாக பெற்றுக்கொள்வதென்பது அவரால் இலகுவில் இயலுக்கின்ற காரியமல்ல. அதேபோன்று சீனா சடுதியாக தனது நாணயப்பெறுமதியை குறைக்குமாயிருந்தாலும் அதனால் அமெரிக்காவுக்கே நெருக்கடியான பொருளாதார நிலைமைகள் எழுந்து விடும். ஆகவே அமெரிக்காவுக்கு சீனாவுடனான உறவு முக்கியமானதாகின்றது.
திருத்தங்களுடன் நகர்வு
தற்போதைய நிலைமையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் இறைமை தொடர்பான உணர்வுகளை அதிகமாக பிரதிபலிக்கின்றன. சீனாவைப் பொறுத்தவரையில் அதற்கு போட்டித்தன்மை அதிகமாக உள்ளது. ஆகவே தனது முதலீட்டு தளங்களில் ஸ்திரத்தன்மையையே அதிகமாக விரும்புகின்றது. இதனை மையப்படுத்தி சில விடயங்களை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. குறிப்பாக கூறுவதானால் ஆரம்பத்தில் சீனாவின் மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை–கடன்களை வழங்க முடியும் என்ற நிலைமைகள் இருந்தன. ஆனால் தற்போது மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இது சிறந்தவொரு விடயமாகும்.
காரணம், சீனாவின் மாநிலமொன்று சிறிய நாடொன்றுக்கு கடன்தொகையை வழங்குகின்றது. பின்னர் குறித்த காலப்பகுதிக்குள் அதனை அந்த நாடு அத்தொகையை மீளச் செலுத்த முடியாது போகின்றபோது அந்த மாநிலம் தான் வழங்கிய கடனை மீளப்பெறுவதற்காக அதியுச்சமாக எடுக்கக் கூடிய நடவடிக்கையை கையிலெடுத்தால் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள்கேள்விக்குறியாகிவிடும். ஆகவே அதனை மையமாக வைத்து இராஜதந்திரக் கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது.
மேலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் பலர் இராஜதந்திரச் சேவை, பூகோள பொருளாதார விடயங்கள் போன்றவற்றில் கற்கைகளை நிறைவு செய்து வருகின்றார்கள். மேற்குலக நாடுகள் சீனாவிடமிருந்து கற்றுக்கொண்டதை விடவும் அந்த நாடுகளிடமிருந்து சீனா கற்றுக்கொண்டதே தற்போதைய நிலையில் அதிகமாகவுள்ளது. இந்த விடயமும் அந் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிமானதொன்றாகின்றது.
ஒரே பட்டி- ஒரே பாதை
சீனாவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பினை தொடர்ச்சியாக திறைசேரியில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. அதேநேரம் அதிகளவு தொகையை நீண்டகால முதலீடுகளாகவும் மேற்கொண்டுவிட முடியாது. ஆகவே பெருந்திட்டமொன்றில் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு பகுதிகளில் குறுங்கால முதலீடுகளாக அதாவது 10 முதல் 15 வருடங்களுக்குட்பட்டதாக மேற்கொள்கின்றது. இதுதான் தற்போது சீனாவால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொருளாதார, அரசியல், இராஜதந்திர மூலோபாயம் எனப் பார்க்க வேண்டியுள்ளது.
இதன் பிரகாரம் உருவானது தான் "ஒரேபட்டி- ஒரே பாதை" திட்டமாக காணப்படுகின்றது. இத் திட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டம் கசகஸ்தானில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட போது விநோதமான திட்டம் எனப் பலர் கடுமையாக விமர்சித்தார்கள். இப்போது இத் திட்டம் 67 நாடுகளை உள்வாங்கிக்கொண்டதாக அமைகின்றது. இத் திட்டம் சீனாவின் விநியோகத் திறனை அதிகரிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது. மேலும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்கள் பலவும் சீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சிக்கும். அதன்மூலம் தன்னை உலகத்துடன் இரண்டறக்கலந்து விட முடியும் என்பதே சீனாவின் இத்திட்டம் சார்ந்த நீண்டகால இலக்காக இருக்கின்றது.
சீனா இத் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பட்டுப்பாதை நிதியம், கடல்வழி பட்டுப்பாதை நிதியம், மத்திய ஆசியப் பிராந்திய நிதியம், ஆசிய நிதியம் போன்ற பல்வேறு நிதிக் கட்டமைப்புக்களை உருவாக்கி அவற்றினூடாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அம்பாந்தோட்டையின் முக்கியத்துவம்
இவ்வாறான நிலையில் "ஒரே பட்டி -ஒரே பாதை" திட்டத்தில் அம்பாந்தோட்டையின் முக்கியத்துவம் என்ன என்பதை பலர் ஆழமாகக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா ஆரம்பத்தில் கட்டியது. பின்னர் அதன் நிர்வாகப்பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் தன்னகப்படுத்தியது. இவ்வாறு அம்பாந்தோட்டையை முழுமையாக தன்னகப்படுத்துவதால் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் சீனாவின் தென்கடற்பகுதி ஊடாக பிரவேசிப்பதற்காக வாய்ப்புக் கிடைக்கின்றது.
அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள கேந்திர ஸ்தானத்தில் தனது இருப்பும் உறுதியாகின்றது. இது கடல்வழி ரீதியான இணைப்பில் ஆபிரிக்கா உள்ளிட்ட ஏனைய கண்டங்களை இணைப்பதற்கும் அதனையடுத்து செங்கடலூடாக மேல்நோக்கிச் செல்வதற்கும் தங்கு தடையின்றி அமைகின்றது என்பதே சீனாவின் நிலைப்பாடாகும்.
அதேபோன்று அம்பாந்தோட்டையிலிருந்து கீழ்ப்பக்கமாகச் சென்றால் குறுந்தூரத்தில்தான் மலாக்கா நீரிணை இருக்கின்றது. இந்த நீரிணையானது இந்தியப் பெருங்கடலையும் பசுபிக் பெருங்கடலையும் இணைப்பதாவுள்ளது. சீனா, இந்தோனேசியா, மலேசியா, தாய்வான், ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளின் கடல்வழிப் போக்குவரத்துக்கு முக்கியமான பகுதியாகக் காணப்படுகின்றது.
அம்பாந்தோட்டையிலிருந்து நேரடியாகவே மலாக்கா நீரிணையூடாக பிரவேசிக்க முடிவதானது சீனாவுக்கு காணப்படுகின்ற பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினையை தீர்ப்பதாகவுள்ளது. காரணம், இப்பகுதியின் ஊடாக ஆண்டொன்றுக்கு சுமார் 94 ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
முக்கியமாக பெற்றோலியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்களுடன் மலாக்கா நீரிணை ஊடான கப்பல் பயணங்கள் காணப்படுகின்றன. சீனாவும் தனக்கான பெற்றோலியப் பொருட்களை அதிகளவில் இப்பாதையினூடாகவே பெற்றுக்கொள்கின்றது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதானது அந்நாட்டின் கடல்வழி போக்குவரத்து பாதுகாப்புக்கான ஆபத்தை துடைத்தெறிவதாகவே காணப்படுகின்றது. ஆகவே தான் சீனாவைப் பொறுத்தவரையில் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது அதன் கடல்வழிப் போக்குவரத்து திட்டத்தின் ஒரு கேந்திர ஸ்தானமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்தியாவுக்கு பிரச்சினையா?
"ஒரே பட்டி ஒரே பாதை" திட்டத்தின் ஊடாக இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சவால் இருக்கின்றதா என்பது தொடர்பில் பார்க்கின்றபோது இந்தியாவைத் தவிர எந்தவொரு நாடும் எதிர்ப்பினை வெளியிடவில்லை. இந்தியா கூட இறுதி நேரத்தில் தான் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதைக் கூட நேரடியாகச் சொல்லாது இறைமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என்பதை மட்டும் கூறிவிட்டு வந்துள்ளது. அதனைவிடவும் இந்தியத் தரப்பிலிருந்து வேறெந்த விடயங்களும் முன்வைக்கப்படவில்லை.
இவ்வாறு இந்தியா இறைமை தொடர்பான கூற்றை முன்வைத்த பின்னர், சீனா அதனை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இறைமை தொடர்பில் பிரச்சினை காணப்படுமாயின் அத் திட்டத்தை மாற்று வழியில் முன்னெடுப்பதற்குக் கூட தயாராவுள்ளதாக கூறியுள்ளது. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இறைமை என்ற காரணத்தை முன்வைத்த பின்னர் கீழிறங்கிப்போக முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் சீனாவின் உயர் இராஜதந்திர தரப்பினர் கூட இத் திட்டத்தை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளோம் என்று நேரடியாகவே இந்தியத் தரப்பிடம் கூறிய பின்னர் கூட அதற்கு இந்தியத் தரப்பிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் தற்போது வரையில் இல்லை. இதனால் சீனாவுக்கு இந்தியாவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சீனாவின் இத் திட்டம் குறித்து நேர்மறையான கருத்தியலைக் கொண்டுள்ளது.
குறிப்பாக ஆசியாவில் சீனாவின் பிரவேசத்தைக் கூட அமெரிக்க விரும்பவில்லை. ஆகவே இத் திட்டம் முன்னெடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சிந்திக்கின்றது. ஆகவே ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே எதிர்க்கின்றது. அமெரிக்காவின் முகவராக இந்தியா செயற்படுவதால் தான் இவ்வாறு தடுக்க முயல்கின்றதா என்பது தான் அந்த சந்தேகமாகவுள்ளது. ஆகவே இந்தியா இத் திட்டம் சம்பந்தமாக எந்தவிதமான எதிர்வினையும் வெளிப்படுத்தாமலிருப்பது பொருத்தமற்றது.
உலக மேலதிக சக்தி
"ஒரே பட்டி ஒரே பாதை" திட்டமானது ஷி ஜின் பிங் தலைமையிலான அரசாங்கத்தால் பல்வேறு மூலோபாயங்களுடன் முன்னெடுக்கப்படுகின்றது. ஏனைய நாடுகளும் ஏற்றுக்கொண்டாகிவிட்டது. ஏற்கனவே அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அந்நியச் செலாவணி கையிருப்பு என அனைத்துமே இராஜதந்திர ரீதியான மூலோபாயத் திட்டமிடல்களுடனேயே நடைபெறுகின்றன. அவ்வாறு பார்க்கின்ற நிலையில் 2030 ஆம் ஆண்டு சீனா உலகத்தில் பொருளாதார மேலாதிக்க சக்தியாக உருவெடுக்கும் என்பது நிச்சயமாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM