(இணுவையூர் கலாபூஷணம் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன்)
“ஒரு நூல் நிலையத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகின்றது” என்றார் சுவாமி விவேகானந்தர்.
இவ்வாறு புகழ்பெற்ற யாழ்.நூலகம், பெரும் அறிவுக்களஞ்சியம் தீக்கிரையாக்கப்பட்டு இவ்வாண்டு ஜூன் மாதம் முதலாம் திகதியுடன் முப்பத்தேழு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன; தீக்கிரையாக்கப்பட்ட அதே இடத்தில் புதிய நூலகம் கம்பீரமாக, புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. எனினும் தீக்கிரையான அந்த விடயத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சு வலிக்கிறது; இதயம் கனக்கிறது; கண்கள் பனிக்கின்றன.
தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணத்து பொதுசன நூலகத்தின் வரலாற்றை சற்று ஆராய்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.
1934 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஒன்பதாம் திகதி யாழ். நகரில் கலாநிதி ஐசாக் தம்பையாவின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பொது நூல் நிலையத்திற்குரிய தோற்றம் அடிகோலப்பட்டது. இக்கூட்டத்தின்போது செயலாளர் க.மு.செல்லப்பா வால் திரட்டப்பட்ட ரூபா 1184.25 சதம் மூலதனமாக பொது நூலகத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் இதுமிகப் பெரிய தொகையாகும்.
பின்னர் அதே ஆண்டு அதாவது 1934 இல் ஆவணி மாதம் முதலாம் திகதி யாழ். ஆஸ்பத்திரி வீதியில், வாடகை அறை ஒன்றில் தமிழ் அன்பர்களால் மனமுவந்து அன்பளிக்கப்பட்ட 844 நூல்களுடனும் 30 சஞ்சிகைகளுடனும் சிறியதொரு நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
வசதிகள் குறைந்து காணப்பட்ட இந்த நூலகத்தை 01.01.1935 அன்று யாழ்.பட்டினசபை பொறுப்பேற்று யாழ்.வாடி வீட்டிற்கு தெற்கிலுள்ள மேல்மாடி வீடொன்றிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு இயங்கிவந்தது. எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வாசகரின் தேவைகளை அந்த நூல் நிலையத்தால் ஈடுசெய்ய முடியவில்லை.
“தொட்டனைத்தூறும் மணற்கேணி– மாந்தருக்கு கற்றனைத் தூறும் அறிவு” அல்லவா?
எனவே, சகல வசதிகளும் கொண்ட நவீன நூலகம் ஒன்றினை அமைக்கும் முயற்சி தமிழ்ப் பெரியார்களால் 1952 ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் திகதி சாம் ஏ.சபாபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்திலேஅல்பிரட் துரையப்பா நூலகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிதியை ஒரு அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பின் மூலமும் களியாட்ட விழாவின் மூலமும் திரட்டலாம் என்ற கருத்தை முன்மொழிந்தார். அந்தக் கருத்து ஏனையோராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட ஏராளமான பணம் திரட்டப்பட்டு 1953 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29 ஆம் திகதி நூல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் புதிய கட்டடம் அமைவதில் பலர் அயராத முயற்சிகளை மேற்கொண்டாலும் பின்வருவோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
வண.பிதா லோங்கின் முயற்சியால் நூலகத்துறை நிபுணரான கலாநிதி எஸ்.ஆர். இரங்கநாதன் நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக்கொடுத்தார். தொடர்ந்து சென்னை அரசுக் கட்டடக் கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் கட்டட வரைபடங்களைத் தயாரித்து உதவினார்.
பொது மக்களின் பூரண ஆதரவுடன் அழகிய கட்டடம் உருவாக்கப்பட்டு முதற்கட்டம் பூர்த்தியாகி அன்றைய யாழ்.முதல்வர் அல்பிரட் துரையப்பாவால் 11.10.1959 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
தீயவர்களால் தீவைக்கப்படும் வரை யாழ்.நூலகம் கொழும்பு பழைய நூலகத்தைவிடப் பெரிய நூலகமாக, வடமாகாணத்து தலைமை நூலகமாகவும் இயங்கிச் சிறப்பித்தது என்றால் அது சற்றும் மிகையாகாது.
மொத்தம் 15,910 சதுர அடிகளைக் கொண்ட விசாலமான நூலகம் கொடியவர்களால் தீக்கிரையாக்கப்பட்டபோது பிரதம நூலகர் உட்பட முப்பத்து மூன்று பேர் கடமையாற்றி வந்தார்கள்.
பெரியவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரம் மக்களுக்கு அரும்பெரும் தொண்டாற்றிவந்த இந்த நூலகத்தை, அறிவாலயத்தை, அரிய பொக்கிஷத்தை தீக்கிரையாக்க எத்துணை கொடிய உள்ளம் இருந்திருக்கவேண்டும். அந்தப் படுபாதகர்களுக்கு?
யாழ்.நூலகம் கொளுத்தப்படுமுன் ஒரு பரிபூரணமான நூலகமாக பின்வரும் பகுதிகளைக்கொண்டு சிறப்பாக இயங்கிவந்தது. நூல்கள் இரவல் வழங்கும் பகுதி, சிறுவர் நூலகம், தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், புதின ஏடுகள் கொண்ட வாசிகசாலை, கருத்தரங்கு கூடம், உசாத்துணைப் பகுதி, அலுவலகம், நூல்கள் சேகரிப்பு அறை இன்னும் பற்பல.
நூலகம் எரியூட்டப்பட்டவேளை, இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57, 000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8995 நூல்களும் உசாத் துணைப்பகுதியில் கிடைத்ததற்கரிய 29,500 நூல்களும் இருந்தன. இவை அனைத்தும் தீயினால் சிதைக்கப்பட்ட, சீரழிக்கப்பட்டன என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேள்வியுற்ற மாத்திரத்திலேயே பரிசுத்த பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியர் தாவீது அடிகளார் தன்னுயிர் நீத்தார்.
இந்த அப்பட்டமான அறிவாலய அழிப்பு பண்பாடற்ற படுகொலையைப் பற்றி கேள்விப்பட்ட மாத்திரத்திலே அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் உடனடியாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நூல்கள் வழங்கத் தீர்மானித்தார்.
கொழும்பில் யாழ். நூலக வாரம் அனுஷ்டிக்கப்பட்டு கொடி தினம் நடத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள வங்கிகள் யாழ். நூலகப் புனரமைப்புக்கு பெரும் நிதி உதவி செய்ய முன்வந்தன. பிரித்தானிய அகதிகள் மறுவாழ்வு நிறுவனம் தானே முன்வந்து பெரும் உதவி புரிந்தது.
நூலகம் எரிக்கப்பட்டு பத்து ஆண்டுகளின் பின்னர் ஐ.தே.க. ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தீ எரிப்புக்குக் காரணம் ஐ.தே.க அமைச்சர் காமினி திசாநாயக்கவே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
யார் எனக்கூறி என்ன பிரயோசனம்? நடந்தது நடந்தது தான்! அழிவு – அழிவுதான்!
ஆனால், ஒன்று மட்டும் உறுதி! நூல்கள் இவ்வையத்தில் உள்ளவரை உலகெங்கும் நூலகங்கள் இயங்கும்வரை இந்த தீய தீ வைப்புச் சம்பவம் அனைவரது இதயத்திலும் மாறாத வடுவாக இருக்கும் என்பது திண்ணம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM