சாதாரண மக்களின் வாழ்வாதார செலவு நான்காயிரம் ரூபாவால் உயர்வடைந்துள்ள நிலையில் மேலும் பொருளாதார சுமைகளை சுமத்தி வரிகளின் மூலமாக நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
அரசாங்கத்தை வீழ்த்த மக்களை ஒன்றிணைத்து வீதியிலிறங்கி போராடுவதை தவிர மாற்று வழிமுறை இல்லை. ஆகவே இம்மாதம் 22ஆம் திகதியிலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கும் எனவும் அக்கட்சி கூறியது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துக் கூறுகையில்;
எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்களின் அத்தியாவசிய பாவனைப் பொருட்கள் அனைத்தினது விலைகளும் உயர்வடைந்துள்ளன. ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் வரியை குறைப்பதாக கூறினாலும் இப்போது வரிகளை உயர்த்தியுள்ளது. டீசல் மற்றும் பெற்றோல் இரண்டிற்கும் வரிகளை விதிக்கின்றனர். உலக சந்தையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சி என்பதை காரணம் காட்டிய போதிலும் அது உண்மை இல்லை.
இந்த அரசாங்கம் பெற்றோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் வரி அறவீடுகளை செய்து தமது வருமானத்தை அதிகரித்துள்ளது. சாதாரண மக்களின் நாளாந்த வருமானத்தில் வரிகளை உயர்த்தி அவர்களின் பணத்தை சுரண்டும் நோக்கினை அரசாங்கம் கைவிட வேண்டும். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை முழுமையாக மூடிவிட்டு லங்கா ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு மட்டுமே பெற்றோல் கொள்வனவை வழங்கும் நோக்கமும் உள்ளது. வரிகளை அறவிட்டு அதன் மூலமாக அரசாங்கம் சுகபோக வாழ்க்கையினை வாழவே முயற்சித்து வருகின்றது. ஆகவே இந்த நோக்கினை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்த அரசாங்கத்தினால் சரியான பொருளாதார முகாமைத்துவத்தை கையாள முடியாதுள்ளது.
மேலும் பால்மாவின் விலை உயர்வடைந்துள்ளது. இப்போது வரையில் பால் மா பக்கற் ஒன்றுக்கான வரியாக 111 ரூபா அறவிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மேலும் 50 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும்.
மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை சுரண்டி அதன் மூலம் அமைச்சர்களும், அதிகாரிகளும் மாத்திரம் சுகபோக வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் வரியை அநாவசியப் செயற்பாடுகளுக்கு ஒதுக்குகின்றனர். மத்திய வங்கி நட்டத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். அரசாங்கத்தின் நாசகார செலவுகளுக்கு பொதுமக்கள் உழைப்பை ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களின் வாகனங்களை வாங்க, வீட்டினை பராமரிக்கவென 150 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 60 கோடி ரூபா செலவழித்து பிரதமர் கார் வாங்கியுள்ளார். இந்த நிதி சாதாரண அடிமட்ட வாழ்க்கை வாழும் மக்களின் வரிப்பணமாகும்.
இன்று ஒரு நடுத்தர குடும்பத்தின் மாதாந்த செலவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்துக்கு 70 ஆயிரம் ரூபா அளவில் தேவைப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே இரு மடங்கு விலை உயர்வை எட்டியுள்ளன. மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. சாதாரண தொழிலாளர் நாளாந்த வாழ்க்கையினை வாழ மிகவும் கடினப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
மக்கள் பட்டினியிலிருந்துகொண்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது.
இந்த ஆண்டில் மாத்திரம் அரசாங்கம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம் 3300 பில்லியன் கடனாக பெற்றுள்ளனர்.
ஒரு நாளைக்கு 300 கோடி ரூபா என்ற ரீதியில் இந்த அரசாங்கம் கடன்களை பெறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் இந்த பணம் முழுமையாக மக்கள் நலன்களுக்காக சென்றடைகின்றதா? வெறுமனே அரசியல் வாதிகள் தமது சட்டைப்பைகளை நிறைத்துக்கொண்டு மக்களை கடனாளியாக மாற்றி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜே.வி.பி.உறுப்பினர் லால் காந்த கூறுகையில்;
அரசாங்கத்தின் மோசமான வரி அறவீடுகளை தடுக்க, மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள மக்களுடன் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து அதன் மூலம் வாழ்வாதார உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்தை விரட்டும் போராட்டத்தை எந்த வழியிலேனும் முன்னெடுக்க வேண்டும்.
இதை தவிர வேறு ஒரு மாற்று வழிமுறை இல்லை. மக்களின் பொறுமை இனியும் சோதிக்கப்படக்கூடாது. ஆகவே மக்கள் விடுதலை முன்னணி பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.
முதல் போராட்டம் 22ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இது கட்சியின் செயற்பாடு அல்ல, மக்களின் செயற்பாடு. கட்சியின் அடையாளத்தை ஒரு பக்கத்தில் போட்டுவிட்டு கஷ்டத்தை அனுபவிக்கும், வலியை உணரும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து போராடுவதன் மூலமே இந்த அரசாங்கத்தை தடிக்க முடியும்.
இந்த அரசாங்கம் வருமானத்தை மக்களின் வரிகளின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.ஏற்றுமதி உற்பத்திகள் என ஒன்றும் இல்லை. உறுதியாக உள்நாட்டு கொள்கை ஒன்று இல்லை.
அரசாங்கம் தன்னால் நாட்டினை வழிநடத்த முடியாது என தெரிவித்து விட்டது. ஆகவே அரசாங்கம் பதவி விலக வேண்டும். இல்லையேல் மக்கள் ஆட்சியை வீழ்த்த வேண்டும். எனவே சகல மக்களும் கட்சிகளை மறந்து பொது உரிமைக்காக போராடுவோம். இதில் உங்கள் அடையாளங்களுடன் வந்தாலும் பரவாயில்லை. ஆகவே வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறுவழி இல்லை. அரசாங்கத்தை அச்சுறுத்த மாற்று வழியும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM