ரஷ்யாவில் சுமார் இரு தசாப்தங்களாக ஆட்சியதிகாரத்தின் மீது இறுக்கமான பிடியை வைத்ததிருக்கும் விளாடிமிர் புட்டின் நாடு, பொருளாதார ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் சிக்கலான காலகட்டமொன்றின் ஊடாகச் சென்றுகொண்டிருக்கும் ஒரு நேரத்தில் ஜனாதிபதியாக நான்காவது பதவிக்காலத்தைத் தொடங்கியிருக்கிறார்.
போரிஸ் ஜெல்ட்சின் அதிகாரத்தில் இருந்த வருடங்களின் குழப்பகரமான நிலைவரத்துக்குப் பிறகு தனது முதல் இரு பதவிக்காலங்களிலும் சோவியத்துக்குப் பின்னரான ரஷ்யாவை உறுதிப்பாட்டை ஏற்படுத்தியவர் என்று பாராட்டப்படுகின்ற பட்டின், ரஷ்யா இழந்த பெருமையை மீட்டெடுப்பதில் நாட்டம்கொண்டு செயற்படுகின்ற ஒரு பலம்பொருந்திய ஒரு தலைவராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். இந்தப் படிமம் அவருக்கு மக்கள் செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்க உதவியிருக்கிறது.
மார்ச் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 77 சதவீதமான மக்கள் வாக்குகளை புட்டின் பெற்றார்.சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவில் பதவியில் இருந்த வேறு எந்நவொரு ஜனாதிபதியும் இவ்வாறு பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றதில்லை.இது ஜனநாயகச் செயன்முறைகள் மீது புட்டினும் அவரைச் சார்ந்த குழுவினரும் கொண்டிருக்கக்கூடிய இறுக்கமான கட்டுப்பாட்டை உணர்த்துகிறது.ரஷ்யாவின் மிகவும் முக்கியமான எதிரணித் தலைவரான அலெக்சி நவால்னி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடைசெய்யப்பட்டதன் காரணத்தால் ஜனாதிபதி பதவிக்கான போட்டி புட்டினை மீண்டும் அரியாசனத்தில் ஏற்றுவதற்கான ஒரு சம்பிரதாயமான சடங்கு போன்றே மாறியிருந்தது.
அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவது புட்டினின் மிகவும் முக்கியமான வாக்குறுதிகளில ஒன்று. தனது ஆட்சிக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவிலும் நாட்டின் வேறு பகுதிகளிலும் பெருமளவில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைச் சமாளிப்பது அவருக்கு பெரிய கஷ்டமாக இருக்காமல் போகலாம், ஆனால் பொருளாதாரத்தை உறுதியானதொரு நிலைக்குக் கொண்டுவருவதிலும் முரண்நிலை நிறைந்ததாக இருக்கின்ற வெளியுறவுக் கொள்கைப் போக்கை மாற்றியமைப்பதிலும் அவர் பெருஞ் சவால்களை எதிர்நோக்குகிறார்.நான்காவது பதவிக்காலத்தைத் தொடங்கியபோது நிகழ்த்திய பதவிப்பிரமாண உரையில் புட்டின் தனது புதிய பதவிக்காலத்தில் உள்நாட்டுப் பிரச்சினைகளில் குறிப்பாக, வேதனைமிகு மந்தநிலையில் இருந்து தற்போதுதான் மீண்டுவந்திருக்கும் பொருளாதாரத்த்தின் மீது கவனத்தைக் குவிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
புட்டினின் வீறாப்பான வெளியுறவுக் கொள்கையே மக்கள் மத்தியில் அவருக்கு இருந்துவரும் பேராதரவுக்கான திணணிய ஆதாரமாக விளங்குகிறது.வரலாற்றுக் கொல்லைப்புறமாக விளங்கும் அயலகத்தில் ரஷ்யாவின் செல்வாக்கைப் பாதுகாப்பதில் கொடூரமானவராக அவர் இருந்துவருகிறார்.அந்தச் செல்வாக்கை முனைப்புறுத்திக் காட்டுவதற்காக எத்தகைய கடுமையான நடவடிக்கையையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. 2008 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவுக்கு துருப்புக்களை அனுப்பிய அவர் 2014 ஆம் ஆண்டில் கிறிமியாவை தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டார். இதனால் மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் மோசமடையும் சூழ்நிலை ஏற்பட்டது.20015 ஆம் ஆண்டில் சிரியாவில் செய்த தலையீடு ஒரு சிக்கலான உள்நாட்டுப் போருக்குள் ரஷ்யாவை ஆழமாக இழுத்துவிட்டது மாத்திரமல்ல, அமெரிக்காவுடனான உறவுகளிலும் கடுமையான நெருடலை ஏற்படுத்தியது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீட்டைச் செய்ததாகத் தெரிவிக்கப் பட்ட குற்றச்சாட்டுகள் கெடுபிடி யுத்த கால கட்டத்தில் எதிராளிகளாக இருந்த இருநாடுகளுக்கும் இடையிலான குரோத உணர்வை அதிகரிக்கச் செய்தன.உலக அரங்கில் ரஷ்யா மீண்டும் செல்வாக்குச் செலுத்துகின்ற நிலைக்கு வந்துவிட்டது என்ற எண்ணத்தை புட்டின் மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே ஏற்படுத்தினார்.
ஆனால், மேற்குலக நாடுகள தடைகளை விதிக்கும் நிலை ஏற்படுவதற்கு வழி வகுத்த அவரின் மோதல்தனமான வெளியுறவுக் கொள்கை எதிர்பார்க்கப்படுகின்ற கேந்திர முக்கியத்துவ பலாபலன்களைத் தருமா என்ற கேள்விக்கு திட்டவட்டமான பதிலைக் கூறுவது கஷ்டமானதேயாகும்.மேற்குலகின் தடைகள் ஏற்கெனவே பலவீனமான ரஷ்யப் பொருளாதாரத்தை பாதித்திருக்கின்றன.
அண்மைய வருடங்களில் சீனாவின் உதவியை நாடிய புட்டின் 30 வருடங்களுக்கான 4000 கோடி டொலர்கள் வாயு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.ஈரான், சிரியா மற்றும் வடகொரியா போன்ற சர்ச்சைக்குரிய உலக பிரச்சினைகளில் ரஷயாவும் சீனாவும் ஒத்தழைத்துச் செயற்படுகின்ற போக்கும் அதிகரித்தது.மேற்குலகுடன் தகராறுகளுக்குப் போவதில் அக்கறையில்லாத சீனாவின் அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இனறைய புதிய கெடுபிடி யுத்தத்தில் ஒரு கட்டத்துக்கு அப்பால் மாஸ்கோவை பெய்ஜிங் தொடர்ந்து ஆதரிக்குமா என்பது தெளிவில்லை.
இப்போது புதிய பதவிக்காலத்தை புட்டின் தொடங்கியிருக்கின்ற நிலையில், அவரது ரஷ்யா நெருக்கடிக்குள்ளான ஒரு பொருளாதாரத்துடனும் சுருங்குகின்ற செல்வாக்குடனும் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட சர்வாதிகாரமாகவே பெருமளவுக்குக் காட்சிதரும் என்றே அவதானிகள் அபிபபிராயப்படுகிறார்கள்.
வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM