கோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ; நாளை ஆரம்பம் : அச்சுறுத்தலாக அமையும் காலநிலை

Published By: Priyatharshan

03 Apr, 2018 | 04:19 PM
image

கடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெற்று வருகின்றது.

இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் (கொமன்வெல்த் விளையாட்டு) 6, 600 வீர வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.

இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண் பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நாளை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

இம்முறை 21 ஆவது தடவையாக இடம்பெறும் கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பெண்கள் ரக்பி, பீச் வொலிபோல் ஆகிய போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்காளதேஷ், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை உட்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

இதில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 474 வீரர்-வீராங்கனைகளை களம் இறக்குகிறது. இந்த போட்டியை பொறுத்தமட்டில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப்பிடித்து வருகின்றன. 

வரலாற்றில் முதன்முறையாக

வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆண் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் சமமான பதக்கங்களை வழங்கும் முறையை கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் ஆண்கள் பிரிவுகளிலேயே அதிகளவான தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இம்முறை சரிக்கு சமமாக இந்த பதக்க எண்ணிக்கை போட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டித் தொடரிலும்கூட இந்த சமப் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன்படி இம்முறை மொத்தம் 275 தங்கப்பதக்கங்கள் பகிரிந்தளிக்கப்படவுள்ளன. இதில் 133 ஆண்களுக்கான போட்டிகளும் 133 பெண்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு 133 பதக்கங்கள் வீதம் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படவுள்ளன. ஏனைய 9 பதக்கங்கள் இருபாலாரும் பங்கேற்கும் கலப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இலங்கையின் வாய்ப்பை தட்டிப்பறித்த கோல்ட் கோஸ்ட்

2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவது எந்த நகரம் என்ற போட்டியில் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகருமே மோதின. இதில் ஹம்பாந்தோட்டை நகரம் 27 வாக்குகளைப் பெற கோல்ட் கோஸ்ட் நகரம் 43 வாக்குகளைப் பெற்று போட்டியை வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்துக்கொண்டது.

வரலாறு

கொமன்வெல்த் போட்டிகளானது முதன்முதலில் பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என்ற பெயரில் 1930ஆண்டு ஹமில்டனில் நடத்தப்பட்டுள்ளது. 

அதன்பிறகு 1954ஆம் ஆண்டு இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றம் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்று மாற்றம்பெற்றது. மீண்டும் 1970 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. அதன்பிறகு 1978 ஆம் ஆண்டு முதல் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரால் அதிகார்பூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 71 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐக்கிய இராச்சியம் நான்கு அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாட்டு அணியாக கலந்துகொள்ளும் ஐக்கிய இராச்சியமானது இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவையாக பிரிந்துள்ளது. அதேபோல் அவுஸ்திரேலியாவும் இரண்டு அணிகளை அனுப்புகின்றது. அதேபோல் நியூஸிலாந்து அணிகள் இரண்டும் கலந்துகொள்கின்றன.

ஆரம்பவிழா

கோல்ட் கோஸ்ட் நகரின் கராரா மைதானத்தில் நாளை அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 8 மணிக்கு 21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பவிழா நடைபெறவுள்ளது. ஆரம்ப விழாவில் பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது பாரியார் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். 

1930 ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டுவரை நாடுகளின் அணி வகுப்பில் பிரித்தானிய ஒன்றியக் கொடியை ஏந்திச் செல்லும் ஒருவர் மட்டுமே முன் செல்வார். அது பிரித்தானியப் பேரரசில் பிரிட்டனின் முதன்மையான இடத்தைப் அடையாளப்படுத்தியது. அதன்பிறகு அந்த மரபில் மாற்றம் செய்யப்பட்டது. 

1958ஆம் ஆண்டிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தொடக்க விழா நடைபெறும் இடம்வரை தடகள வீரர்கள் கோல் ஒன்றினை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்டம் ஒன்று நடத்தபட்டுள்ளது. இந்தக் கோலினுள்ளே தடகள வீரர்களுக்கான ராணியின் வாழ்த்துச் செய்தி இருந்துள்ளது. கோலினை கடைசியாக ஏந்திச் செல்பவர் வழக்கமாக போட்டியினை நடத்தும் நாட்டின் பிரபல வீரராக இருப்பார். 

தொடக்க விழாவில் அனைத்து நாடுகளும் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணிவகுத்து செல்வார்கள். அத்தோடு இதற்கு முன் போட்டிகளை நடத்திய நாட்டு வீரர்கள் அணி வகுப்பில் முதலவது அணியாகச் செல்வார்கள். அதேபோல் தற்போது தொடரை நடத்தும் நாடு கடைசி அணியாக அணி வகுப்பில் கலந்துகொள்ளும்.

இலங்கை அணி

இம்முறை இலங்கை 13 வகையான போட்டிகளில் பங்குபற்றுகின்றது. இதற்கு மொத்தம் 80 வீரர்கள் வரை வருகை தந்துளனர். பயிற்சியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 150 பேர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

இதில் மெய்வல்லுனர் போட்டிகளில் 13 வீரர்களும், பளுதூக்கல் போட்டிகளில் 11 பேரும், மல்யுத்தம் 6, எழுவர் றக்பி 12 பேர் கொண்ட அணிகளே அதிக வீரர்களை உள்ளடக்கி இம்முறை போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

இன்றைய ஆரம்பவிழா அணிவகுப்பில் இலங்கைக் கொடியை ஏந்திச் செல்லப்போவது பளுதூக்கல் வீரரான சிந்தன கீதால் விதானகே. இவர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பளுதூக்கல் பிரிவில் தங்கப்பதக்கம் ஒன்று வெற்றிகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சபட்ச பாதுகாப்பு

குயிண்ட்ஸ்லான் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1000 இற்கும் அதிகமான விசேட பாதுகாப்பு படையினரும், 3500 பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தோடு ஜெட் வகை யுத்த விமானங்கள்( Fighter Jets) மற்றும் ட்ரோன் துப்பாக்கிகளும் (Drone guns) பயன்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போட்டிகளுக்காக உலக நாடுகளிலிருந்து 6 இலட்சத்து 72 ஆயிரம் பேர்வரை வருகைத் தரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. 

வீரர்கள் தங்கியுள்ள விளையாட்டு கிராமத்திற்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கிராமத்திற்குள் அனுமதியற்ற எவருமே நுழைய முடியாதவகையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு கிராமத்திற்கு மேலாக விமானங்கள் ஹெலிகொப்டர்கள் பறப்பதற்கும் தடைவிதிக்ப்பட்டுள்ளது. ட்ரோன் கெமராக்கள் எனப்படும் பறக்கும் கெமராக்களை விளையாட்டு கிராமத்திற்கு மேலாக பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறந்தால் சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காலநிலை குறித்து அச்சம்

ஆரம்பவிழாவிற்கு மழையினால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நாளிலும் இடையிடையே மழை பெய்துகொண்டிருந்தது. இதே காலநிலை நாரளையும் தொடரும் பட்சத்தில் ஆரம்ப விழா நிகழ்வுகள் பாதிக்கப்படக்கூடும். விழா நடைபெறவுள்ள காராரா மைதானத்தில் 35ஆயிரம் பேர்வரையில் அமர்ந்து பார்க்ககூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பெய்தால் அதில் 5000 பேர்களுக்கு மட்டுமே கூரையுடன் கூடிய இருக்கைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை ஆரம்பமாகும் பொதுநலவாய விளையாட்டு விழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 15 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இதில் மொத்தம் 25 வகையான விளையாட்டு பிரிவுகளில் 275 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரையில் நடைபெற்றுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலின் அடிப்படையில் 852 தங்கப்பதக்கங்களுடன் 2218 மொத்தப் பதக்கங்களைப் பெற்று அவுஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் 669 தங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், கனடா 469 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கொமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகின்றது. 

ஆரம்ப விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. தினசரி போட்டிகள் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில் கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெறுவது இது 5 ஆவது  தடவையாகும். 

ஏற்கனவே 1938 (சிட்னி), 1962 (பெர்த்), 1982 (பிரிஸ்பேன்), 2006 (மெல்போர்ன்) ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றது. 

இந்த போட்டியின் மூலம் அதிகமுறை கொமன்வெல்த் போட்டியை நடத்திய நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா பெறவுள்ளது.  கனடா 4 முறை இந்த போட்டியை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அவுஸ்திரேலிய கோல்ட் கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07