ஒன்றிணைந்த நாட்டுக்குள் நிரந்தரத் தீர்வினை பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பயணத்தில் பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி த்தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான தீர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் சரியாக கொண்டு சேர்க்கும் முயற்சிகளை சிங்கள தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் இறுதி நிகழ்வுகள் நேற்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் ஒரு பாரம்பரிய சரித்திரத்தை கொண்ட மக்கள். இலக்கியம், சங்கீதம், கலாசாரம், பாரம்பரியம் நிறைந்தும் சரித்திரத் தன்மை கொண்டேதாயுமே தமிழர் வரலாறு காணப்படுகின்றது. ஆகவே இவ்விதமான நிகழ்வுகளை நடத்துவதன் மூலமாக தமிழர் பாரம்பரியம் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. எமது அடித்தளம் இதில் தான் தங்கியுள்ளது. அதனை எவரும் மறுக்க முடியாது. ஆகவே நாம் அனைவரும் இதனை பாதுகாக்க வேண்டும். ஆகவே நிகழ்வை நடத்தும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழர் என்ற வகையில் எமக்கு தீர்வுகள் அவசியமாக உள்ளன. நான் விரும்பி அரசியலுக்கு வந்தவனல்ல. எனது தொழிலை நேசித்தேன்.
எனினும் அரசியலுக்கு வந்தவுடன் எனது தொழிலை நான் விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு அரசியல்வாதியாக நாம் சில நகர்வுகளை கருத வேண்டும். நாடு சுதந்திரமடைய முன்பாகவே எமது பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைத்திருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டு இலங்கைக்கு டொனமூர் ஆணைக்குழு வந்தது.
அதன்போது டொனமூர் ஆணைக்குழு பிரேரணைகள் அடிப்படையில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால், முறைப்படி ஆட்சியமைக்கப்பட்டிருந்தால், சுயாட்சியில் இப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு அதுவும் நாடு சுதந்திரம் அடையமுன்னர் இடம்பெற்றிருக்க வேண்டும். 1935 ஆம் ஆண்டு இந்திய சட்டத்தின் மூலமாக மாகாணங்கள் உருவாக்கப்பட்டு மாகாணங்களுக்கு சுய அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
எனினும் அச் சந்தர்ப்பத்தை நாம் இழந்தோம். டொனமூர் ஆணைக்குழுவிற்கு முன்பு பூரண சுதந்திரம் வேண்டும் என கேட்டோம். தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமஷ்டி வழங்கப்பட வேண்டும் என நாம் கேட்கவில்லை. பூரண சுயாட்சியையே கேட்டோம். கண்டிய சிங்களவர்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக நாம் இருக்கவில்லை. சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு வந்தபோது நாம் 50க்கு 50 அதிகாரம் கேட்டோம். அது தவறானது என நான் கூறவில்லை. ஆனால் அது எந்தளவிற்கு யதார்த்தமானது என்பது கேள்விக்குரிய விடயமாகும். இவ்விதமான கோரிக்கைகள் மூலமாக நாடு சுதந்திரம் அடைய முன்னர் தீர்வுகள் கிடைக்கவிருந்த சந்தர்ப்பங்களை நாம் இழந்தோம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் எமது பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் சிக்கலான விடயமாக இருந்தது. சாதாரணமான மாவட்ட சபைகளைக் கூட உருவாக்க முடியாத நிலைமையில் நாம் இருந்தோம். இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 1983ஆம் ஆண்டு இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் தலையீட்டின் காரணமாக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு வடகிழக்கு இணைக்கப்பட்டு ஓரளவு சுயாட்சி உருவாக்கப்பட்டது. அது போதாது. அது ஒரு தீர்வு அல்ல. ஆனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை பெற நாம் யதார்த்தமாக நடந்துகொள்ள வேண்டும். இந்த தீர்வை நாட்டில் வாழும் சகல மக்களும் குறிப்பாக பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்விதமான ஒரு தீர்வே ஏற்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் பிரச்சினையான விடயம் என்னவெனில் பலவிதமான தடைகள், பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எனினும் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வை எதிர்ப்பார்கள் என நாம் நினைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு உண்மைகளை தெளிவுபடுத்தி அனைவரது ஒத்துழைப்புடனும் ஒரு தீர்வை ஏற்படுத்த சிங்கள தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.அதன்மூலமாக ஒரு தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.
அது மட்டுமே எமக்குள்ள ஒரே வழிமுறை. இன்று சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவை பெற்றுள்ளோம். எமது கோரிக்கை ஒரு நியாயமான கோரிக்கை. அது அங்கீகரிக்கப்பட வேண்டிய, தகுதியான கோரிக்கை என்ற நிலைப்பாடு சர்வதேச சமூகத்திடம் உள்ளது. அந்த ஆதரவை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM