எதற்காக இலங்கை ரசிகரின் வீட்டிற்கு ரோஹித் சர்மா சென்றார் தெரியுமா ?

Published By: Priyatharshan

26 Mar, 2018 | 06:28 PM
image

(கே.லாவண்யா)

இலங்கையிலுள்ள தனது ரசிகரின் இல்லத்திற்கு வருகைதருவதாக வாக்களித்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது வாக்கினை நிறைவேற்றியுள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா மனிதாபிமான முறையில் தனது ரசிகரான மொஹமட் நிலம் என்பவருக்கு தனது நாட்டிற்கு செல்ல நிதியுதவி அளித்துள்ளார். 

கடந்த வருடம் இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், நியு டெல்லியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் பயிற்சித் தொடரின் போது மொஹமட் நிலம் என்பவர் தனது தந்தை சுகயீன நிலையிலுள்ளமையினை அறிந்துள்ளார்.

இருப்பினும் இலங்கைக்கு திரும்பிவருவதற்கு போதுமான நிதிவசதி அவரிடம் காணப்படவில்லை. சுதீர் கௌதம் எனும் நண்பர் ஒருவரினால் மொஹமட்டின் நிலைமையினை இந்திய அணித்தலைவர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அறிந்தனர். 

பின் ரோஹித் சர்மா மொஹமட் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் , மொஹமட்டின் இல்லத்திற்கு வருகைதருவதாகவும் வாக்களித்தார். வாக்களித்தவாறு இம்மாதம்   16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண முத்தரப்பு போட்டித்தொடரில் கலந்துகொள்ள வந்திருந்த வேளையிலே மொஹமட் நிலமின் இல்லத்திற்கு சென்றார்.

“ரோஹித் சர்மா மனிதாபிமான மனமுடையவர் , எனது நிலைமையினை அறிந்தவுடன் இலங்கைக்கு திரும்புவதற்கான பயணச்சீட்டுக்களை ஏற்பாடு செய்தார். அது மட்டுமின்றி எனது தந்தையின் மருத்துவ செலவுகளுக்கும் உதவுயளிப்பதாக கூறினார். இருப்பினும் நான் அதை மறுத்துவிட்டேன். அவர் எனது  பயணச்சீட்டுக்களை ஏற்பாடு செய்தமைக்கே பெரும் நன்றிகடன்பட்டுள்ளேன்.

விராட் கோலி அவ்வேளையில் இந்தியாவில் இருக்கவில்லை. இருப்பினும் , தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தந்தையின் நலன் தொடர்பாக விசாரித்ததுடன் நிதியுதவி தேவைப்படின் தயக்கமின்றி கேட்குமாறு கூறினார். விராட் கோலி மிகவும் எளிமையானவர். 

இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியினரின் அன்பினை பெறுவதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவனாகவும்  அதிர்ஷடசாலியாகவும் உணர்கின்றேன். அத்துடன் நாம் இந்திய கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட செல்லுகையில் சீட்டுக்களை இலகுவில் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இந்திய கிரிக்கெட் அணியினர் செய்து தந்துள்ளனர். மேலும் , இந்திய கிரிக்கெட் அணியினர் மட்டுமல்ல முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவரான ஷஹிட் அஃபரிடியும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார் என மொஹமட் நிலம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right