இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையானது இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் எதிராகவே காணப்படுகின்றது. ஆகவே அந்தக்கொள்கை மாறாத வரையில் தமிழர்களுக்கு விமோசனமில்லை. அக்கொள்கையை மாற்றும் வகையிலான ஆளுமை மிக்க தலைமையொன்றே தமிழகத்திற்கு அவசியம் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் குறிப்பிட்டார். கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- விடுதலையை எதிர்பார்க்கும் உறவுகளுக்காக தமிழகத்திலிருந்து தொடர்ச்சியாக குரலெழுப்பி வரும் நீங்கள் ஈழத்தமிழர்களின் விடயம் சார்ந்து இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எவ்வாறான அழுத்தங்களை கொடுத்துள்ளீர்கள்?
பதில்:- 2009ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எமது கட்சியானது அப்போதைய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் பகிரங்கமான கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
அந்தக் கடிதத்தில் குறிப்பாக, விடுதலைக்காக போராடி வருகின்ற ஒரு தேசிய இனத்தினை அடக்குவதற்கு 2009ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் எவ்வாறான சூழ்ச்சிகளைக் கையாண்டது. இந்தியா உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன் எவ்வாறு மிலேச்சத்தனமாக நடந்து கொண்டுள்ளது.
தமது விடுதலைக்காக காந்திய தேசத்துக்கே காந்தியம் கற்றுக்கொடுத்துள்ளார்கள். தியாகி திலீபன், அன்னை பூபதி அம்மா போன்றவர்கள் போராடி உயிர்துறக்கும்போது இந்திய மத்திய அரசாங்கமும், இந்திய இராணுவமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளன.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வகுத்த பஞ்சசீலக்கொள்கைக்கு அமைய இந்திய மத்திய அரசாங்கம் செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை தவறி வரலாற்றுப்பெருமை கொண்ட இனமொன்று பத்து மைல் தொலைவில் அழிந்து கொண்டிருந்தபோது வேடிக்கை பார்க்கும் போக்கு இருந்துள்ளது.
ஆகவே உடனடியாக இவற்றைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் பாராளுமன்றத்தில் இருந்த சில கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே குரலெழுப்பிய போதும் தமிழர்கள் தானே மரணமடைகின்றார்கள் என்ற எண்ணத்தில் வட இந்தியர்கள் அதிகமாகவிருந்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் அதனை கருத்தில் கொள்ளவில்லை.
அதேநேரம் ஈழவிடுதலை போராட்டம் ஆரம்பமான காலத்திலிருந்து தொடர்ச்சியாக பல தலைவர்கள் குரலெழுப்பி வந்தாலும் ஒரு மேடையில் ஒன்றாக அணிதிரண்ட வரலாறு இல்லை. அவ்வாறான நிலையில் முதற்தடவையாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்றொரு கூட்டமைப்பினை எனது தலைமையில் உருவாக்கினோம்.
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே. அதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாக பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பாரிய பேரணியை நடத்தினோம். தற்போது வரையில் அந்த கூட்டமைப்பு தொடர்கிறது. பல்வேறு களங்களில் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக ஈழமக்களுக்கான போராட்டங்களோ அல்லது குரல்களோ ஆங்காங்கே ஒலித்தாலும்கூட இத்தகையதொரு கூட்டமைப்பின் ஊடாக உலகத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தினை முன்னெடுத்தமை காத்திரமானதொரு விடயம் என்று கருதுகின்றேன்.
கேள்வி:- ஈழத்தமிழர்கள் விடயத்தினை மத்திய அரசாங்கம் அவ்வாறு கவனத்தில் கொள்ளாது நடந்து கொண்டமைக்கு என்ன காரணம்?
பதில்:- இறுதி யுத்தத்தில் நடைபெற்ற இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பங்குள்ளது. இந்திய மத்திய அரசாங்கமானது இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கியது. ராடார் கருவிகள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்களை வழங்கியது. விமான நிலையங்களை அமைத்துக் கொடுத்தது.
இவ்வாறான செயற்பாடுகளால் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? அதனால் தான் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்தினர் எமது கோரிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு விடயத்தினையும் பெரிதாக கருத்திற்கொள்ளவில்லை. ஆட்சிகள் மாறிய பின்னர் காட்சிகள் மாறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தற்போதுள்ள பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கமும் கடந்த ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது.
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஆதரித்தார். தனி தமிழீழ அரசாங்கம் உருவாகுவதனால் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையையோ அல்லது தேசிய பாதுகாப்பினையோ அச்சுறுத்தலுக்கு உள்ளாக்காது என்று நம்பினார். அதன் காரணத்தினாலேயே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சியை இரகசியமாக வழங்கினார். தற்போது அவருடைய நிலைப்பாடுகள் எல்லாம் மாற்றமடைந்து விட்டன.
கேள்வி:- தற்போதைய இந்திய வெளியுறவுக்கொள்கையானது எவ்வாறுள்ளதாக உணர்கின்றீர்கள்?
பதில்:- இந்திய வெளியுறவுக்கொள்கையானது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவானதாகவும், ஈழத்தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் எதிராகவுமே அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் ஈழத்திலும் சரி, தமிழகத்திலும் சரி எந்த நேரத்திலும் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்து பிரிந்து செல்ல எத்தனிக்கக் கூடியவர்கள். இதனால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கக்கூடியவர்கள் என்று வடஇந்தியர்கள் தற்போதும் நம்புகின்றார்கள்.
மத்திய அரசாங்கத்தில் கொள்கை வகுப்பு, ஆலோசனை வழங்கல், புலனாய்வுத்துறை உள்ளிட்ட மிகப்பெரும் ஆளுமை செலுத்தக்கூடிய இடங்களில் அனைவரும் தமிழர்களை சற்றும் பிடிக்காத வட இந்தியர்கள், மலையாளிகள் உள்ளிட்டவர்களே இருக்கின்றார்கள். இவர்கள் தமிழர்களை தட்டி வைக்க வேண்டும் என்றே கருதுகின்றார்கள்.
ஈழத்திலுள்ள தேசிய தமிழினத்திற்கான தனித்தேசம் அங்கீகரிக்கப்பட்டு விட்டால் இந்தியாவிலும் தமிழர்கள் தனிநாட்டினை கோரிவிடுவார்களோ என்ற அச்சம் மத்தியில் உள்ள அதிகார வர்க்கத்தினருக்கு உள்ளது. இதன் வெளிப்பாடுகளை தற்போது காண முடிகின்றது.
ஈழத்தில் எவ்வாறு இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட திட்டமிட்ட சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றதோ அதேபோன்றுதான் அண்மைக்காலமாக தமிழகத்திலும் பாரிய இராணுவ மயமாக்கல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இராணுவ பயிற்சிக்கூடங்கள், முகாம்கள் என்பது ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கையில் மறுபக்கத்தில் தமிழகத்திற்கு சொந்தமான காணிகளை கைப்பற்றும் முயற்சியில் செல்வந்தர்களை பயன்படுத்தி காணிகளை கையகப்படுத்தி பெருநிறுவனங்களை அமைக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுகின்றது. அதனைவிடவும் அணுஉலைகள், அணு ஆராய்ச்சி கூடங்கள் அமைத்தல், மீதேன் எரிவாயு போன்ற நாசகார திட்டங்கள் தமிழகத்தில் மாத்திரமே திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
அதனைவிடவும் இந்தி மொழி திணிப்பு நடைபெறுகிறது. அரச பதவிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லை. அரச விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகின்றது. காவிரி நீர் மறுக்கப்படுகின்றது. பாலாறு பாலைவனமாக்கப்படுகிறது. முல்லைப்பெரியாற்றின் அணைக் கட்டை உயர்த்த கேரளம் தயாரில்லை. மருத்துவத்துறைக்கு பேர் போன இந்த பூமியில் நீட் முறை திணிக்கப்படுகின்றது.
கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்படுகின்றது. வெளிநாட்டவர்களுக்கு பிரஜாவுரிமை முறையற்ற வகையில் வழங்கப்படுகின்றது. இவ்வாறு ஆயிரம் அடக்குமுறை விடயங்களை அடுக்கிச் செல்லமுடியும். ஈழத்தில் எவ்வாறு சிங்கள பேரினவாதம் தமிழர்களின் இருப்பினை தகர்க்க முற்படுகின்றதோ அதே நிலைமைதான் இங்கும் உள்ளது.
மத்திய அரசாங்கமானது அறிவிக்கப்படாத சிவில் யுத்தமொன்றை தமிழக மண்ணில் திட்டமிட்டு செய்து வருகின்றது. இவ்வாறு சென்றால் இன்னமும் 25ஆண்டுகளில் தமிழகம் பறிபோகும் நிலைமையே ஏற்படும்.
தமிழகத்தின் முன்னைய தலைவர்கள் அடைந்தால் தமிழ்நாடு இல்லையேல் சுடுகாடு என்றார்கள். பெரியார் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழங்கினார். அந்த கோட்பாடுகளை மையப்படுத்தியே தற்போதும் மத்திய அதிகாரவர்க்கம் தமிழர்களுக்கும், அவர்களின் தேசத்திற்கும் எதிராக இருக்கின்றது.
கேள்வி:- நீங்கள் குறிப்பிட்ட மத்திய அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை தகர்ப்பதற்கு தமிழ்த் தேசிய சிந்தனையுடன் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றீர்கள்?
பதில்:- எமது வாழ்வுரிமை தொடர்பான விழிப்புணர்வை எம்மைப்போன்றவர்கள் மக்கள் மத்தியில் முழு வீச்சில் முன்னெடுத்து வருகின்றார்கள். பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டு விடயத்தில் அமைதியான வீதிப்போராட்டம் மூலம் வெற்றி பெற்றோம். அதனை விடவும் போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு கூடங்குளம், நெடுவாசல், கதிராமங்கலம், வடகாடு போன்ற பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.
தமிழர் உரிமைக்காகவும், தமிழ் நிலத்தின் உரிமைக்காகவும் சமரசமில்லாது இருக்கின்ற அரசியல் சக்திகளுக்கு தமிழக மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. தமிழகத்தினை தமிழர்கள் ஆளலாம். ஆனால் அவ்வாறு ஆள்பவர்கள் தமிழர்களின் உரிமைக்காக இருக்கின்றார்களா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறானவர்கள் ஆட்சிக்கு வருகின்றபோதுதான் தமிழர்களின் இருப்பு உறுதியாகும்.
கேள்வி:- தமிழகத்தில் ரஜினி, தினகரன், கமல் போன்றவர்களால் புதிய கட்சிகள் உதயமாகி வருகின்ற நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- தி.மு.க, அ.தி.மு.க. போன்ற பெரும் கட்சிகள் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மத்தியில் உள்ள பிரதான கட்சிகளுடன் கூட்டணிகளை வைத்து மிகப்பெரும் இலஞ்ச ஊழலை மேற்கொண்டுள்ளன. அவ்வாறு வருமானமீட்டிய தொகையை பயன்படுத்தி மக்களை விலைக்கு வாங்குகின்ற நிலைமையே இருக்கின்றது. இந்த கலாசாரத்திலிருந்து எமது மக்கள் விழிப்புணர்வு பெற்ற சமூகமாக சிந்திக்க வேண்டும்.
தற்போது கூத்தாடிகள் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கின்றார்கள். எமது உறவுகளின் தேசத்தில் இனப்படுகொலை நடக்கும்போது அதற்கு குரல்கொடுத்தார்களா? சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று அறிவித்தார்களா? அதனை விடுங்கள். தமிழகத்தில் கூலி வேலைக்குச் சென்ற 20 தமிழர்களை சுட்டுக்கொன்றபோது இவர்கள் ஆகக்குறைந்தது அஞ்சலி அறிவிப்பையாவது விட்டார்களா?
காவிரிப்பிரச்சினை உள்ளிட்ட எந்தப்பிரச்சினையிலும் அமைதியாக இருந்து தற்போது கட்டமைப்பு சரியில்லை. நான் வந்து மாற்றத்தினைக் கொண்டுவருகின்றேன் என்று கூறுவது வேடிக்கை. சினிமாக்காரர்களால்தான் நாட்டை ஆள முடியும் என்ற பிம்பத்தினை உடைத்தெறிவதை மையப்படுத்தியே களமாடி வருகின்றோம்.
கேள்வி:- ஜெனிவா ஊடான அழுத்தங்களால் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த முடியும் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- ஜெனிவா வல்லாதிக்க நாடுகளின் கூட்டு அரங்கமாகவே உள்ளது. இனப்படுகொலை நடக்கின்றபோது அதனை ஜெனிவா வேடிக்கை பார்த்தது. ஜெனிவாவின் பிரதிநிதிகளை சிங்கள அரசாங்கம் வெளியேற்றியபோதும் அமைதியாகவே இருந்தது. அவ்வாறிருக்கையில் தமக்கான நீதி கோரி ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறுகின்ற போராட்டங்கள், விடாமுயற்சியுடைய அரசியல் செயற்பாடுகள் மிகவும் அவசியமாகின்றன.
இவற்றுக்கெல்லாம் அப்பால் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா என்பது மாபெரும் பொருளாதாரச் சந்தையுடைய நாடாகும். ஆகவே இந்தியாவைப் பகைத்துக்கொண்டு இருப்பதற்கு எந்தவொரு வல்லாதிக்க நாடும் விரும்பாது. அவ்வாறான நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிரான வெளியுறவுக்கொள்கை மாற்றமடைய வேண்டும்.
அவ்வாறு கொள்கை ரீதியான மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் அதிகாரம் பெற்ற சக்தியாக தமிழகம் மாறவேண்டும். குறிப்பாக தமிழக அதிகாரத்தில் உள்ள முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் சரியான தீர்வை நோக்கி மத்திய அரசாங்கத்தினை அழுத்தமளிக்கக்கூடிய மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் கரிசனை இல்லாது ஈழ விடுதலைக்கோ அல்லது ஈழத்தில் இடம்பெற்ற விடயங்களுக்கோ வல்லாதிக்க நாடுகள் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்று நம்பமுடியாது. இந்தியாவைப் பகைத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்காக செயற்படுகின்ற அப்பளுக்கற்ற அரசியல் தலைமைகள் உலக பூமிப்பந்தில் இல்லை.
ஈழதேசம் உருவானாலும் அது இந்திய பிராந்தியத்திற்கு நன்மையாகவே இருக்கும் என்ற மனநிலை உடைய இந்திரா காந்தி அம்மையார் போன்றவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும். அதேநேரம் மத்தியில் உள்ளவர்களுக்கு அழுத்தமளிக்கக் கூடிய ஆளுமை கொண்ட மறைந்த ஜெயலலிதா அம்மையார் போன்றவர்களோ அல்லது ஓய்வில் உள்ள கலைஞர் போன்றவர்களோ ஆட்சியில் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் அத்தகைய ஆளுமை மிக்க எந்தவொரு தலைமைகளும் தமிழகத்தில் இல்லை. ஆகவே தான் எம்மைப்போன்றவர்கள் மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கின்றோம்.
கேள்வி:- ஈழத்திலுள்ள அரசியல் தலைவர்கள், அவர்களுக்காக குரல்கொடுக்கும் புலம்பெயர் அமைப்பினர் அடுத்த கட்ட நகர்வுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- தமிழீழ தேசிய தலைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாத அரசியலை முன்னெடுக்கும் வகையில் 2009வரையில் நெறிப்படுத்தி வந்திருந்தார். ஆனால் தற்போது தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது போன்றுதான் நிலைமைகள் உள்ளன. அதாவது, சிங்கள பேரினவாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதும், டெல்லி அழைத்தவுடன் வருகை தந்து விருந்துண்டு செல்லும் நிலைமைதான் இருக்கின்றது.
அவர்கள் மீது நான் குறை சொல்லவில்லை. காரணம், அவர்களுக்கு அங்குள்ள நெருக்கடியின் காரணமாகவோ அல்லது தமிழீழ தேசிய தலைவர் மீண்டும் வந்து கேள்வி கேட்கவா போகின்றார் என்ற மனநிலை காரணமாகவோ அவர்கள் நினைத்ததை செய்து கொண்டிருக்கலாம். அது அவர்களுடைய அரசியல். அது குறித்து இங்கிருந்து நான் விமர்சனம் செய்யவிரும்பவில்லை.
இருப்பினும் இனப்படுகொலைக்கு முகங்கொடுத்த, உயிர்த்தியாகம் செய்த இனத்திற்காக உறுதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டுமே தவிர சிங்களத் தலைமைகளின் கால்களை கழுவி செயற்படும் வகையில் எந்தவொரு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இருக்கக்கூடாது என்பதே எனது வேண்டுகோளாகும்.
புலம்பெயர் தேசங்களில் ஈழத்தில் விதையாக வீழ்ந்துள்ளவர்களுக்காக குரல்கொடுத்து உணர்வுடன் செயற்படுகின்றார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறும் அதேநேரம் ஒற்றுமையோடு தொடர்ந்தும் உலக சமூகத்திற்கு அழுத்தமளியுங்கள். என்றாவது ஒருநாள் உலக சமூகம் நீதியின் பக்கம் திரும்பி எமக்கான விடுதலையை வழங்கும் என்ற நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாது பயணியுங்கள்.
(நேர்காணல் : தமிழகத்திலிருந்து ஆர். ராம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM