காணாமல்போனோர் அலுவலகம் ஏனைய ஆணைக்குழுக்களை போல ஆக்கபூர்வமாக செயற்படுமாக இருந்தால் பிழைகளை சுட்டிக்காட்டி வழக்குகளை தாக்கல் செய்யக்கூடிய பலத்தை கொண்டிருக்க வேண்டும். ஆனால் இச்சட்டத்தின் ஊடாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
பிரதமரும் ஜனாதிபதியும் பலதடவைகள் கூடியும் ஒரு பயனும் இல்லை. இந்த அலுவலகம் கடந்த கால சம்பவங்களை ஒருபோதும் தேடப்போவதில்லை. விசாரிக்கப் போவதுமில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜெனிவா வந்துள்ள கஜேந்திர குமார் பொன்னம்பலம் 'கேசரி'க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செவ்வியின் முழு விபரம் வருமாறு;
கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
பதில்:இரண்டு வருட கால அவகாசம் வழங்கி ஒரு வருடம் முடிவடையும் காலப்பகுதியில் வாய்மூல அறிக்கை ஒன்றை ஆணையாளர் வெளியிட வேண்டும் என்ற பின்னணியில்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாகக் கூறிய போதிலும் ஆணையாளரின் கருத்து கடந்த வருடம் மார்ச் மாதம் ஆணித்தரமாகவே முன்வைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எமது அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
மனித உரிமை பேரவையோடு ஒத்துப்போகின்றோம் என்பதை வெளியில் காட்டிக் கொள்வதற்காக ஒத்துக் கொண்டனரே ஒழிய உண்மை தன்மையோடு ஒத்துக்கொள்ளவில்லை. தமது அசமந்த போக்கையே காட்டி வந்துள்ளது. இடைக்கால அறிக்கையை பார்க்கும்போது அரசாங்கத்தை முற்றுமுழுதாக அம்பலப்படுத்தி 30 - 1 பிரேரணையை நிறைவேற்ற எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என ஹுசைன் தெரிவித்திருந்தார். இறுதியில் ஆணித்தரமாக 'மாற்று வழியை தேட வேண்டும் " என்பதை உறுப்பு நாடுகளிடம் பரிந்துரைத்துள்ளார்.
அதன் ஒரு வழியாக அந்தந்த நாடுகள் இலங்கையில் போர்க் குற்றங்களை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கெதிராக வழக்குகளை அந்தந்த நாடுகளிலேயே முன்னெடுக்கலாம் என சொல்லியிருந்தார். காரணம் அத்தகைய செயற்பாடுகளுக்கு பெரியளவிலான ஏற்பாடுகள் தேவையில்லை. இலங்கையில் பொறுப்புக் கூறலை உறுப்பு நாடுகள்தான் கேட்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அந்த 30 இல் 1 பிரேரணையை நிறைவேற்றாமல் உள்ளது. எனவேதான் உறுப்பு நாடுகளை இவ்வாறு அந்தந்த நாடுகளிலேயே வழக்கு தாக்கல் செய்யுமாறு சொல்லப்பட்டுள்ளது.
இலங்கை கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைபேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இலங்கை சுமார் 5 ஆண்டுகளாக முக்கியமான ஒரு இடத்தில் இருந்துள்ள நிலையில் மனித உரிமை ஆணையாளரே மாற்று வழியை தேடுமாறு சொல்வாராக இருந்தால் மனித உரிமைப்பேரவையிலுள்ள மிகப்பெரிய பலவீனம் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். உறுப்பு நாடு விரும்பாவிடில் பேரவையில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் குறித்த நாடு பிரேரணையை விரும்பி ஏற்றாலும் கூட அதனை விரும்பி நடைமுறைப்படுத்த தயாரில்லாவிட்டால் பேரவையினால் ஒன்றுமே செய்ய முடியாது.
எனவே, அந்த யதார்த்தத்தை விளங்கி கொண்டுதான் மாற்று வழிகளை தேடச் சொல்லியுள்ளார். அந்த வகையில் 2012ஆம் ஆண்டிலிருந்து சொல்லி வருவது மனித உரிமைப் பேரவை மிக பலவீனமான ஒரு கட்டமைப்பு என்பதாகும். எனவே, வருகின்ற இரண்டாவது வருடத்தில் இலங்கை அரசு தப்பிக்க முடியாது. நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க கூடிய வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. சுமந்திரன் இங்கு மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்குமாறு கேட்டிருப்பதாக தற்போது நீங்கள் கூறியிருக்கின்றீர்கள், ஆனால், அரசு எவ்வித பொறுப்பு கூறலையும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில், மேலும் கால அவகாசம் வழங்குவது எந்த வகையில் இப்பிரேரணையை நிறைவேற்றுவதில் பங்களிப்பு செய்யும்?
பதில்: என்னைப் பொறுத்தவரையில் அரசு எவ்வித பொறுப்பு கூறலையும் செய்ய போவதில்லை. ஆனால், அரசாங்கத்தினால் முகபாவனைபோல முன்னெடுக்கப்படுவதாக காட்டப்பட்டுவரும் ஒரே விடயம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம். அந்த அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் முதலாவதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அவ்வலுவலகத்தை நிராகரிப்பதற்கான காரணம் , அவ்வலுவலகத்தில் உள்ள விசாரணை அதிகாரிகள் அல்லது உறுப்பினர்கள் இராணுவத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர். சிவில் சமூக தலைவர்கள் அரசாங்க பங்காளிகளாக செயற்பட்டவர்கள். எனவே, இப்படிப்பட்டவர்களை கொண்டு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின்மையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிராகரிக்கின்றன.
இரண்டாவது, இவ்வலுவலகம் ஏனைய ஆணைக்குழுக்களைப் போல ஆக்கபூர்வமாக செயற்படுமாக இருந்தால். பிழைகளை சுட்டிக்காட்டி வழக்குகளை தாக்கல் செய்யக்கூடிய பலத்தை கொண்டிருக்க வேண்டும். ஆனால், இச்சட்டத்தின் ஊடாக அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. பிரதமரும் ஜனாதிபதியும் பலதடவைகள் கூடியும் ஒரு பயனும் இல்லை. இந்த அலுவலகம் கடந்த கால சம்பவங்களை ஒருபோதும் தேடப்போவதில்லை. விசாரிக்கபோவதுமில்லை. இந்நிலையில் 30 -1 தீர்மானத்தை நிறைவேற்ற தாங்கள் ஏதோ ஒருவகையில் நடவடிக்கை முன்னெடுக்கின்றோம் என வெளியில் காட்டிக்கொள்ளும் இவ்விடயத்தில் கூட இத்தனை குளறுபடிகள் நிலவுமாயின் மற்ற விடயங்களில் அரசாங்கம் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.
உண்மையில் கடந்த வருடமே இந்த இரண்டு வருட கால அவகாசம் வெறுமனே இந்த அரசாங்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று நாம் சொல்லிவிட்டோம் . காரணம் கடந்த வருடமே இந்த அரசு பொறுப்புக் கூறலை முன்னெடுக்கத் தயாரில்லை என்று கூறியதுமட்டுமன்றி பிரதமரும் ஜனாதிபதியும் பல மேடைகளில் நாம் ஒருபோதும் எந்தவொரு இராணுவ வீரரையும், நீதிமன்றின் முன்னால் நிறுத்தப் போவதில்லை என கூறியிருந்தனர். இந்நிலையில் பொறுப்பு கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றவாறு செயற்படுவார்களா என நம்பமுடியாது. எனவே, கால அவகாசம் வழங்குவது என்பது மீண்டும் இந்த அரசை நெருக்கடிகளின்றி தப்பிக்க செய்யும் செயலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
கேள்வி:மனித உரிமைப் பேரவை யின் ஆணையாளர் ஹுசைனே மாற்றுத் திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், உங்களது கட்சியோ அரசு இழைத்த குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென கூறியுள்ளது. ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது தற்போது இதனை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது என ஆணித்தரமாக சொல்லி வருகின்றது. இது குறித்து உங்களின் கருத்து?
பதில்: அவர்களது கருத்தானது இந்த குற்றவியல் விடயத்தில் ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடவில்லை என்பதாகும். அந்த வகையில் இதில் கையொப்பமிடாத ஒரு நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஒரு நாட்டை விசாரிப்பதாக இருந்தால் யுத்தக் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் விடயத்தில் ஆதரவு வழங்கப்படும் என்று தற்போது ஐ.நா. சபை அமர்வுகளில் பங்கேற்க வந்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறுகிறார்.
என்னைப் பொறுத்தவரையில் அப்படி பார்க்கப் போனால் சுமந்திரன் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ரீதரன் இவ் அமர்வுக்கு வந்ததே தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்கேயாகும். தான் ஒரு நல்ல பிள்ளை. இந்த சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களின் கருத்தோடு இல்லை என்பதை காட்டி கொள்ள தமிழ் மக்களிடையே நல்ல பெயர் எடுக்கவே இங்கு வந்துள்ளார். சொந்த தலைமைத்துவத்தை வழிக்கு கொண்டு வரமுடியாமல் தன்னுடைய சொந்த அரசியல் எதிர்காலத்திற்காகவே அவர் இங்கு வந்துள்ளார் என்பதே உண்மை.
இன்று இங்கு அவர் வந்து என்ன சொன்னாலும் தலைமைத்துவம் கூறும் கருத்தையே உலகம் கேட்கபோகின்றது அந்த தலைமைத்துவம் மிகத் தெளிவானது வெளிப்படையானது. விமர்சிக்கலாம் ஆனால் அது வெளிப்படையாக நேர்மையாக அவர்கள் கூறியிருக்கிறார்கள் ஒரு வருட கால அவகாசம் வழங்கியே ஆக வேண்டும்.
கேள்வி: தற்போது அமெரிக்காவில் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ள சுமந்திரன் ஒருவருட காலத்துக்குள் மாற்று வழிகளை கையாளுமாறு கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது எவ்வகையில் சாத்தியமாகும்
பதில்: அவர்களுடைய மாற்று வழிகள் இந்த 30 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் கடும் அழுத்தம் வழங்க வேண்டும். அந்த கடும் அழுத்தத்தில் மாற்று வழிகள் வழங்க வேண்டும் என்று கூறுகின்றார்களே தவிர பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் மாற்று வழி என்ற வேறு தளத்திற்கு நாங்கள் இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என கூறவில்லை. அது தான் அவர்களின் நிலைப்பாடு.
கடந்த மார்ச் மாதத்திலும் இரண்டு வருட கால அவகாசம் என்ற விடயம் சொல்லப்பட்ட போது அரசாங்கத்தை இரண்டு வருடம் காப்பாற்றியுள்ளார்கள் என்ற விமர்சனம் வரத் தொடங்க அவர் கள் கூற வந்தது அரசாங்கத்திற்கு கால அட்டவணை ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதை தாங்கள் கேட்டிருக்கின்றோம் என்பதாகும். தவிர அரசாங்கத்தை இரண்டு வருடத்திற்கு காப்பாற்ற இணங்கவில்லை என்று பொய் சொன்னார்கள்.
கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் இந்தச் செயற்பாடுகள் அரசாங்கத்தை கப்பாற்றுவதற்கான முயற்சி என்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இந்த அரசாங்கத்தின் ஒரு அங்கம். அது அரசாங்கத்தின் நலன்களை பேணுவதற்காக செயற்பட்டு வருகின்றது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து உங்கள் பார்வை எவ்வாறுள்ளது.
பதில்: நான் நினைக்கின்றேன் முதலாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இந்த தேர்தல் ஒரு முக்கிய அத்திவாரத்தை வழங்கியுள்ளது. அது யாழ். தேர்தல் மாவட்டத்தில் தான் கூடுதலான தளத்தை வழங்கியுள்ளது. ஆனால் நிச்சயமாக தேர்தல் முடிவடைந்த பிற்பாடு ஏனைய மாவட்டங்களையும் விட யாழ்ப்பாணத்தில் இந்தளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளமையானது ஏனைய மாவட்டங்களிலும் கூட மாற்று சக்தியாக மக்கள் எங்களை கருதும் அளவிற்கு யாழ்ப்பாணத்தின் வெற்றி அமைந்துள்ளது. பலர் தொடர்பெடுத்து யாழ்ப்பாணத்தில் இந்தளவு வெற்றி பெறுவீர்களாயின் உங்களுக்கே நாங்கள் வாக்களித்திருக்கலாம் என்று கூறும் அளவிற்கு இந்ததேர்தல் நிலைமைகள் மாற்றியமைத்துள்ளன. அந்த வகையில் கட்சி என்ற வகையில் இது எமக்கு முக்கியமான களம். அதற்கு எமது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஊடகங்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஊடகங்கள் நியாயமானமுறையில் எங்களுடைய கருத்துக்களை வெளிக் கொண்டு வந்திருந்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களுடைய அமைப்பு இன்று திருப்பு முனையாகவே இருக்கிறது. அவர்களுக்கு இரண்டு பாதைகள்தான் உள்ளன. அவர்கள் தொடர்ந்தும் கடந்த 8 வருட காலத்தைப் போன்று மக்களை ஏமாற்றி வந்த பாதையை தொடருவார்களாயின் அல்லது அந்த தலைமைத்துவத்தை நீக்கி நம்பகத்தன்மை கொண்ட தலைமைத்துவத்தை ஏற்படுத்தி திருந்தாவிடின் இந்த தேர்தல் ஊடாக கிடைத்த வீழ்ச்சி எதிர்காலங்களிலும் அதிகரித்து கொண்டு செல்லும்.
யாழ்ப்பாணத்தில் நாங்கள் கணிசமாக அவர்களின் அருகில் வந்துள்ளோம். வட கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் அவர்களின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் அச்சரிவின் மிகப் பிரதான தரப்பாக சரிவை எங்களுக்கு சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அவர்களின் வீழ்ச்சியை எங்களுக்கு சார்பாக பாவித்தி ருக்கின்றோம். ஆனால் ஏனைய மாவட்டங்களில் அது பிரிந்து சென்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறையைப் பொறுத்தவரையில் அது உதயசூரிய னுக்கும் பிள்ளையானுக்கும் என பிரிந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அப்படியல்ல ஒரு தரப்பாக நாங்கள் மாற்றியமைத் துள்ளோம்.ஆகவே கூட்டமைப்பை பொறுத்தவரையில் அடிப்படை அரசியலில் செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால் இந்த தேர்தலில் மக்கள் கூறிய விடயங் களை சரியாக நோக்கோடு அவர்கள் அதை எடுக்காமல் ஐ.நா. மனித உரி மைப் பேரவை விடயத்தில் நடந்து கொண்ட மாதிரி தொடர்நதும் நடந்து கொண்டிருந்தால் அவர்களுடைய வீழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.
(எஸ்.ஸ்ரீகஜன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM