ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஜனநாயக ரீதியில் தீர்க்க முயற்சிக்கின்றோம். கட்சியினை குழப்பும் எந்தவொரு நகர்வுகளும் முன்னெடுக்கப்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் பலம் எம்மிடம் உள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் எனவும் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனவும் கட்சியின் பின்வரிசை ( இளம் எம்.பி. க்கள் ) தெரிவித்து வருகின்றமை மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருகிற முயற்சிகள் குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் நிலைப்பாட்டினை விவவியபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மறுசீரமைப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. எனினும் எமது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் கட்சியின் ஒற்றுமை மிகவும் அமசியமானதாகும். தனித்து செயற்பட ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்களில் எம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் கட்சிக்குள் ஒற்றுமையும் ஜனநாயகமும் நிலவவேண்டியது அவசியமாகும். அவ்வாறான நிலையில் இப்போது ஒருசிலர் கட்சியின் செயற்பாடுகளை குழப்பும் வகையில் சில தீர்மானங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் இவை எதுவும் கட்சியின் ஏகமனதான தீர்மானம் அல்ல.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையிலா பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் நிலையில் அதனை நாம் முறியடிப்போம். ஆனால் கட்சிக்குள் சிலர் அதற்காக தூண்டுதலாக இருக்கும் நிலையில் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு ஜனநாயக ரீதியில் தீர்வுகளை பெற்றுக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம். முக்கியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறும். அதில் சந்தேகம் இல்லை. தலைமைத்துவ மாற்றம் என்பது தொடர்பில் கட்சிக்குள் ஆழமாக சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது. இதில் உடனடியாக தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய நிலைப்பாடு என்னவென்பது எமக்கு நன்றாகவே தெரியும். நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல தரப்புடனும் இணைந்து செயற்பட்டு வருகின்ற காரணத்தினால் அனைவரும் எவ்வாறு சிந்திக்கின்றனர் என தெரியும். கட்சிக்குள் மறுசீரமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சி உள்ளது. அதற்கமைய அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்கும் திட்டங்களை இதில் முன்வைத்துள்ளோம். ஆகவே நாளை ( இன்று ) கூடும் கட்சியின் பாரளுமன்ற குழுக் கூட்டத்திலும் அதன் பின்னர் கட்சி செயற்குழுக் கூட்டத்திலும் முக்கியமான விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும். எனினும் கட்சியிக்குள் ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகள் காரணமாக எந்தவித நகர்வுகளும் இடம்பெற்றப்போவதில்லை. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக கூறப்படுவதை வெறும் வாய் வார்த்தைகளாகவே கருதுகின்றோம். அவ்வாறு கொண்டுவந்தாலும் நாம் சுமூகமாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக கூறுகையில்,
இன்று நாட்டில் பாரிய அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலரது தனிப்பட்ட தேவைகளை கொண்டு கட்சியினை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். கட்சியின் தலைமைத்துவம் குறித்து நாம் அதிருப்தி கொள்ளவில்லை. மாற்றங்கள் அவசியம். அது கட்சியின் வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். மாறாக கட்சியினை பலவீனப்படுத்தும் தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது.
கட்சியின் இளம் உறுப்பினர்கள் அதனை தெரிந்துகொள்ள வேண்டும். மாற்றங்களை நாமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டினை முன்னெடுக்க பலமான கட்சி அவசியம்,. இந்த நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை கட்டியெழுப்ப சரியான தலைமைத்துவம் அவசியம். ஆகவே தலைமைத்துவத்தை பலப்படுத்த வேண்டிய தேவை இளம் உறுப்பினர்கள் அனைவருக்கும் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலைமையை உருவாக்கியுள்ளது. எனினும் இந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்கள் ஒரு எச்சரிக்கையை மட்டுமே விடுத்துள்ளனர். அதேபோல் பிரதமரை நீக்கவும் ஒரு அணி முயற்சித்து வருகின்றது. ஒரு சிலரது தூண்டுதலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் தீர்மானம் எடுக்க முடியாது. கட்சியின் மறுசீரமைப்பு திட்டங்கள் அவசியம், அதனை நாம் சரியாக முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு கூடுகின்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து முக்கியமான சில தீர்மானங்கள் முன்வைக்கப்படவுள்ளன எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM