அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது பெரும்பான்மையின குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர். இதனால் அம்பாறை நகர பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை - டி.எஸ்.சேனநாயக்க வீதியில் உள்ள ஜும் ஆப்பள்ளிவாசல், பள்ளிவாசல் காரியாலயம், தங்குமிடம், அதனை அண்மித்து அமையப் பெற்றுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான மூன்று உணவகங்கள், ஒரு பலசரக்குக் கடை ஆகியவற்றின் மீதே பெரும்பான்மை இனக் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அங்கிருந்த முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் அம்பாறை நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் மேலதிக பொலிஸ் படையணியினரின் பாதுகாப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் நேற்றும் முழுமையாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அம்பாறை நகருக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கேசரியிடம் தெரிவித்தார்.
' நிலைமையை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவை ஏற்படுமாயின் இராணுவத்தை அழைக்கவும் தயங்கமாட்டோம். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
நேற்று முன் தினம் இரவு 10.30 மணியளவில் அம்பாறை, டி.எஸ்.சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள நியூ காசிம் உணவகத்துக்கு சில பெரும்பான்மை இன இளைஞர்கள் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் சாப்பிட கொத்து ரொட்டி, பராட்டா கோரியுள்ள நிலையில் அவை தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பரிமாறப்பட்ட உணவில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்தமை தொடர்பில் சுட்டிக்காட்டி, கருத்தடை அல்லது இன விருத்தியை தடுக்கும் வண்ணமான பதார்த்தம் கொத்து ரொட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி அந்த இளைஞர்கள் குழு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து அந்த குழுவினர் உணவகத்தின் காசாளர் கதிரையில் இருந்த இளைஞருடன் இது தொடர்பில் கடும் தொனியில் வாக்கு வாதப்பட்டு, அவர் பேசுவதை வீடியோவும் எடுத்துள்ளனர்.
கருத் தடை மருந்து போட்டீர்களா?
இதன்போது அந்த இளைஞர் குழு, நீங்கள் உணவுக்கு கருத்தடை மாத்திரை போடுகின்றீர்கள் தானே என தொடர்ச்சியாக உரத்த குரலில் கேட்டபோது அதற்கு காசாளர் முதலில் இல்லை என்றும் பின்னர் அச்சுறுத்தும் பாணியில் கேட்கப்படும் போது ஆம் எனவும் பதிலளிக்கும் வீடியோ பதிவு செய்யப்பட்டு அது சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டுள்ளன. எனினும் தன்னை கட்டாயப்படுத்தியே, சிங்கள மொழி சரியாக தெரியாத நிலையில் அந்த வீடியோவை அவர்கள் எடுத்துள்ளதாக காசாளர் தரப்பினர் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது
பஸ்ஸிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த குழுவினர்
இந் நிலையில் நள்ளிரவு 12.00 மணி அளவில் பஸ் வண்டியொன்றிலும், 50 வரையிலான மோட்டார் சைக்கிள்களிலும் பெரும்பான்மை இன குழுவினர் குறித்த உணவகம் அமைந்துள்ள இடத்துக்கு வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள் அராஜகமான முறையில் நடந்துகொண்டுள்ளதுடன் உணவகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிவாசல், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்:
இந் நிலையில் அந்த உணவகம் மீது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அமைந்துள்ள மேலும் இரு உணவகங்கள், பலசரக்கு கடை ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ள அந்த குழுவினர் அதனுடன் நிற்காது பள்ளிவாசல் மீதும் அத்து மீறியுள்ளனர்.
முதலில் பள்ளிவாசல் மதிலை முற்றாக உடைந்தெறிந்துள்ள அவர்கள், பின்னர் பள்ளிவாசலின் கண்ணாடிகள், ஜன்னல், கதவுகளை உடைத்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அங்கிருந்த புனித அல் குர் ஆன் பிரதிகள் உட்பட சமய நூல்களை தீயிட்டு எரித்துள்ளனர். அத்துடன் பள்ளிவாசலுடன் இணைந்ததாக அமைந்துள்ள பள்ளிவாசல் நிர்வாக காரியாலயத்தையும் அடித்துடைத்து, பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அந்த கட்டிடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கும் ஏனைய பாதுகாப்பான இடங்களுக்கும் ஓடி தப்பித்துக்கொண்டதாக சம்பவத்துக்கு முகம் கொடுத்த நபர் ஒருவர் தெரிவித்தார்.
தாமதமாக வந்த பொலிஸார்
இந்த வன்முறைகள் இவ்வாறு நடந்தேறும் போது, பள்ளிவாசலில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஸ்தலத்திற்கு வரவில்லை எனவும் அவர்கள் தாக்குதல்களும் சேதப்படுத்தல்களும் நிறைவடைந்த பின்னர் ஸ்தலத்திற்கு வந்ததாகவும் சம்பவத்துக்கு முகம்கொடுத்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் 3 நிமிடங்களில் சம்பவ இடத்தை வந்தடைய கூடியதாக இருந்த போதிலும் தாக்குதல் ஆரம்பித்து ஒன்றரை மணி நேரத்தின் பின்னரே பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் வினவிய போது, அது குறித்து கேசரி கேட்கும் வரை தான் அறிந்திருக்கவில்லை எனவும், அவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் விரிவான விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சேதமாக்கப்பட்ட வாகனங்கள்:
இந்த வன்முறைகளின் போது பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் வேன், லொறிகள் இரண்டு, 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்தும் தீவைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வேனும் மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பும், ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளும்
இந் நிலையில் ஸ்தலத்திற்கு சென்றுள்ள பொலிஸார் முதலில் பிரதேசத்தின் அமைதியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதி முற்று முழுதாக விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றைய தினமே வாக்கு மூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்த பொலிஸார், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகரவின் உத்தரவுக்கு அமைவாக அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே.வெதசிங்கவின் மேற்பார்வையில் அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் சமந்த டீ விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளில் அம்பாறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் அம்பாறை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், சி.சி.ரி.வி. காணொளிகளை ஆராயும் நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் ஆரம்பமானது.
ஸ்தலம் விரைந்த முஸ்லிம் பிரதானிகளும் எதிர்ப்பு வெளியிட்ட பெரும்பான்மை மக்களும்
இந்த சம்பவம் தொடர்பிலான விபரங்கள் பரவிய நிலையில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாசல் வளாகத்துக்கு நேற்று காலையிலேயே விஜயம் செய்தனர். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பிரதியமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் உள்ளிட்டோர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
பிரதியமைச்சர் ஹரீஸ், பள்ளிவாசல் அருகே சென்ற போது, பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள பாதையில் கூடியிருந்த பெரும்பான்மையினர் அவருக்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு அவர் கருத்துக் கூறக் கூடாது என அவர்கள் கூறியதுடன் அவர் அங்கிருந்து வெளியேறும் வரை அங்கு பதற்றமான சூழல் ஒன்றினை உருவாக்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர்.
சமாதானக்கூட்டம்
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட செயலாளர் துசித் பீ வணிகசூரியவின் தலைமையில், சமாதான கூட்டமாக இந்த கூட்டம் இடம்பெற்றது. எனினும் குறித்த கூட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த டி விஜேசேகர, பிரதியமைச்சர்களான ஹரீஸ், பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், நஸீர் உள்ளிட்டோருடன் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
பெரும்பான்மையினர் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, பிரதேசத்தின் பிக்குகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
சம்பவத்துக்கு கண்டிப்பும், சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையும்
இதன்போது கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்துள்ள பிக்குகள், பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர். எனினும் சம்பவம் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் அதனை தொடர இடமளிக்காது அமைதியை ஏற்படுத்தும் விதமாக எவரையும் கைது செய்யாது சுமுகமாக பிரச்சினையை தீர்த்துக்கொள்வோம் என கூறியுள்ளனர்.
பிரதியமைச்சர் ஹரீஸ் எதிர்ப்பு:
எனினும் இதன்போது பிரதியமைச்சர் ஹரீஸும் ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளும் பிக்குகளின் கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று முடிந்தவுடன், சுமுக தீர்வுக்காக குற்றவாளிகளை தப்பிக்கச் செய்ய முடியாது எனவும், உடன் சட்ட நடவடிக்கை அவசியம் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே கலந்துரையாடல்கள் வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்வதாக உறுதி
இதன்போது, சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தமது கடமை என ஒப்புக்கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சந்தேக நபர்களை கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.
அம்பாறை நகரில் இருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்வு:
அம்பாறை நகரில் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக அம்பாறை நகரில் தங்கி தொழில் செய்துவந்தவர்களும் நகர பகுதியில் வசித்த முஸ்லிம் குடும்பங்கள் பலவும் அங்கிருந்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹரீஸ் கேசரிக்கு தெரிவித்தார்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், எந்த நேரத்திலும் கலவரம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
நிரந்தர இனவிருத்தியை தடை செய்ய முடியாது; மருத்துவர்கள்:
இதனிடையே, ஒருவரை நிரந்தரமாக இனவிருத்தியை தடை செய்யும் விதமாகவோ அல்லது கருத்தடை ஏற்படுத்தும் விதமாகவோ எவ்வித இரசாயனங்களும் இதுவரை உலகில் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் உணவிலும், உடைகளிலும் அவ்வாறான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் இனவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும் உணவு, உடையில் கலந்து கருத்தடை, இன விருத்தி இல்லாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உலகில் இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் ஆரியசேன யூ.கமகே தெரிவித்தார்.
பின்னணி தொடர்பில் சந்தேகிக்கத்தக்க சம்பவம்:
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க சம்பவம் ஒன்று குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஒரு கட்சியால் பள்ளிவாசல் மதிலில் போஸ்டர் ஒன்று ஒட்டப் பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அது ஒரு முஸ்லிம் இளைஞரால் கிழித்தெறி யப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி பள்ளிவாசல் மதில் உடைக்கப்பட்டதா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
எம்.எப்.எம்.பஸீர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM