பலவீனமாகவுள்ள எமது தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும், அபிலாஷைகளும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட வேண்டிய காலகட்டம் இது. சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாமல் பணியாற்றக்கூடிய அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்கபூர்வமான எந்த முன்மொழிவும் தமிழ்க் கட்சியின் தரப்பினால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலத்தை தமிழர்களின் அரசியல் ரீதியாக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் தமதுஅரசியல் எதிர்காலம் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டியகாலம் இது. எம் முன்னே காணப்படுகின்ற ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் இனங்கண்டு சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் செயற்பட தவறுவோமாயின் கடவுளால் கூட எம்மைக் காப்பாற்ற முடியாத ஒருநிலை ஏற்படும்.
ஒரு சில தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக் கூடாது. இதுகாறும் ஆட்டுமந்தைகள் போல மக்கள் தம்பின்னே பின் தொடர்வார்கள் என்று எமது தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். தாம் எதைச் செய்தாலும் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதையில் இருந்தார்கள். தற்போது மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்.
யுத்தத்தின் பின்னர் எமதுமக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தின் அணுகுமுறையில் நாம் பாரியதவறு இழைத்துள்ளோமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பது குறித்து எமது திடமான கோரிக்கைகளை முன்வைத்து எமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலமைப்பு திருத்தம் அல்லது அரசியலமைப்பு மாற்றத்திற்குள் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் கொண்டு சென்றதன் மூலம் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்திமுற்றிலும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்த எமது பிரச்சினை எமது தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கைகளில் இருந்து விடுபட்டு இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடே மனித உரிமைகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வலுவிழந்துள்ளமைக்கான காரணமாகும். அதேபோல, யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்று தனியார் காணிகளில் இருந்து மட்டும் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையாக எம்மவர்களினாலேயே மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இராணுவம் வடக்கு, கிழக்கில் பொதுக்காணிகளில் தொடர்ந்து நிலைகொண்டு எதிர்காலத்தில் பாரியளவில் நிரந்தர சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் ஆபத்து உருவாகியிருக்கிறது. காணிகளே எமக்கு எமது தனித்துவத்தைத் தருவது. எமது உணர்வோடு ஒன்றியது. அதேகாணிகள் பறிபோகின்றன என்றால் எமது தனித்துவம் அழிந்து வருகின்றது என அர்த்தம்.
இந்த நிலைமைகளை கவனத்தில் எடுத்தே வடமாகாண சபை சில முக்கியமான அரசியல் நகர்வுகளை கடந்த சில வருடங்களில் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக இனவழிப்பு தீர்மானம் மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்ட முன்மொழிவு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
எமது அந்தத் தீர்மானம் மற்றும் முன்மொழிவுகளை சாதகமாகப் பயன்படுத்தி எமக்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச ரீதியாக பலப்படுத்த முயற்சிக்காமல் துரதிர்ஷ்டவசமாக அவற்றை மழுங்கடிப்பதிலேயே எம்மவர்கள் கவனஞ் செலுத்தி வந்துள்ளனர். இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்கபூர்வமான எந்த முன்மொழிவும் தமிழ்க் கட்சியின் தரப்பினால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை.
வடமாகாண சபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை ஆராய்ந்து பார்க்குமாறு கூடக் கேட்பதற்கு எமக்குத் துணிவு இருக்கவில்லை அல்லது மனம் இடம்கொடுக்கவில்லை.
உத்தேச அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையானது எவற்றுக்காகக் கடந்த 70 வருடங்களாக நாம் போராடினோமோ அவற்றை எல்லாம் முற்றாக மறுதலித்து முற்றிலும் சிங்கள பௌத்த மக்களுக்கான ஒரு முன்மொழிவாகவே வெளிவந்துள்ளது. பௌத்த மதத்திற்கு முன் உரிமை எனும் போது ஏனைய மக்கள் இலங்கையில் இரண்டாம் தரமானவர்கள் என்று ஆகிவிடுகின்றார்கள் என்பதே உண்மை. அதன் பின்னர் நாம் இறைமை, தாயகம், சுயநிர்ணயம், சுயாட்சி என்பவற்றை பற்றிக் கதைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேற்கொண்டு கட்சித் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குவதிலும் பயனில்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் வடகிழக்கில் 1000 விகாரைகளைக் கட்டுவார்கள். நாளைய ஆட்சியாளர்கள் 10,000 விகாரைகளைக் கட்டுவார்கள். அதன் பின் வருபவர்கள் அவற்றைச் சுற்றிய பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தானவை என்று பிரகடனம் செய்வார்கள். இவ்வாறே ஏட்டிக்குப் போட்டியாக மாறிமாறி ஆட்சிக்கு வருபவர்கள் தமிழின அழிப்பினூடாக எவ்வாறு சிங்களப் பேரினவாத்தை திருப்திப்படுத்தலாம் என்று நான் முந்தி, நீ முந்தி என்று செயற்படுவார்கள்.
இவற்றைத் தட்டிக்கேட்க நீதிமன்றம் சென்றால் அரசியலமைப்பில் அவ்வாறுதான் உள்ளது. நீங்கள் இரண்டாம்தரப் பிரஜைகள் தான் என்று எமது நீதிமன்றங்கள் கூறி அவற்றுக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்படும் நிலைமையே ஏற்படும்.
பலவீனமாகவுள்ள எமது தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும், அபிலாஷைகளும் நூர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடனும் பற்றுறுதியுடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இது. சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாமல் பணியாற்றக்கூடிய அரசியல் வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.
தூரநோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற மக்கள் பிரதிநிதிகளை நாம் உருவாக்க வேண்டும். ஆகவேதான் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM