மிக் - 27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் நேற்று வரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களே நேற்று வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அவரை அழைத்துவர இதுவரை எந்த குழுவும் பொலிஸ் தரப்பில் அனுப்பப்படவில்லை என குறிப்பிட்ட அவர், குற்றப் புலனாயவுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து அவரை நாட்டுக்கு அழைத்துவருவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது மனைவியுடன் அமெரிக்கா நோக்கி செல்ல டுபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு உதய்ங்க வீரதுங்க நேற்று முன் தினம் வந்த போது, விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவரை கைது செய்து தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
உதயங்க வீரதுங்க, இலங்கை கடவுச் சீட்டை பயன்படுத்தி அமெரிக்கா செல்ல முற்பட்ட நிலையில், அந்த கடவுச் சீட்டானது கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கு அமைய இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தியே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வரை, உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் பொலிஸார் எவ்வித தீர்மானத்தினையும் எடுத்திருக்கவில்லை எனவும், டுபாய் சென்று அழைத்து வருவதா இல்லையா என்று கூட முடிவு செய்யப்படவில்லை என பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
' இதில் பாரிய சட்ட சிக்கல்கள் உள்ளன. அவரை அழைத்து வருவது என்பது உன்மையில் சிக்கலான விடயம். அதனால் தான் இந்த விடயத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இலங்கைக்கும் டுபாய்க்கும் இடையே குற்றவியல் தொடர்பிலான ஒப்பந்தங்கள் ஏதும் இல்லாமை இந்த சம்பவத்தை பொறுத்த வரை பாரிய பின்னடைவாகவே கருத வேண்டியுள்ளது.டுபாய் நல்லெண்ண அடிப்படையில் அவரை எம்மிடம் கையளித்தால் சிக்கல் இல்லாமல் அழைத்து வரலாம். எனினும் உகேரைன் பிரஜை என்ற ரீதியில் உதயங்க குழப்பம் விளைவித்தால் அவரை விமானத்தில் ஏற்றுவது கூட சிக்கலை அளிக்கலாம்.எவ்வாறாயினும் இது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் டுபாயயியும் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக தற்போது காத்திருக்கின்றோம்' என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்கவை டுபாய் அதிகாரிகள் விசாரணை செய்து, தடை செய்யப்பட்ட கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டமை தொடர்பில் கைது செய்து அந் நாட்டு சட்டத்தை நடை முறைப்படுத்த முற்பட்டுள்ளனர். இதன்போது தான் உக்ரேன் பிரஜை எனவும் அதனால் தன்னை உக்ரேனுக்கு நாடு கடத்துமாறும் இதன்போது உதயங்க வீரதுங்க டுபாய் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை கோரியுள்ளதாக அறிய முடிகின்றது.
எனினும் அவர் வெளி நாடு செல்ல முற்பட்ட கடவுச் சீட்டுக்கு எதிரான தடை உத்தரவு கோட்டை நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையின்ல் இடம்பெறும் குற்றம் ஒன்றுடன் தொடர்புடையது என்பதாலும், சர்வதேச பொலிஸார் ஊடாக பிடிவிறாந்து ( நீல அறிவித்தல்) பிறப்பிக்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு அவரை இலங்கையிடம் கையளிப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இந் நிலையில் பெரும்பாலும் உதயங்கவை இலங்கைக்கு டுபாய் நாடுகடத்தலாம் எனவும் அவ்வாறு இல்லை எனில் நிதிக் குற்றப் புலனாயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவரை அங்கு அனுப்பி அவரை கையேற்று வருவது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்துள்ள சட்ட திட்ட ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நேற்றும் ஆராய்ந்திருந்தன .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM