ஊழல், மோசடி, வறுமை இல்லாத தூய்மையான நாட்டைக்கட்டியெழுப்ப அனைத்து தலைமைகளும் மனப்பூர்வமாக முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையின் 70 ஆவது சுதந்திரதின வைபவம் இன்று காலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபத மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,
இன மத பேதமற்ற நல்லிணக்க வாழ்க்கையை நம் நாட்டில் உறுதிசெய்யவேண்டும். இனமோதல்கள் அற்றவகையில் மக்கள் வாழக் கூடிய வகையில் நாம் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.
கடந்த முப்பதாண்டு காலப் பகுதியானது இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு மிக முக்கியமானது. எதிர்பாராத விதமாக நாட்டில் யுத்தம் நிலவியிருந்தது. நாட்டின் அபிவிருத்தியை முப்பதாண்டு காலம் பின்னோக்கி இழுத்திருக்கிறது. எனவே, நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, நாட்டின் அனைத்துத் தரப்பினரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.
கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் உலகின் ஏனைய நாடுகளுக்கு இணையான சாதனைகளை நாம் புரிய முடியும்.
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சவால்களில் முக்கியமானது பொருளாதாரம். நாம் இன்று பொருளாதாரச் சீர்கேட்டுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இதற்கு முன் அமைந்த ஆட்சிகள் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிச் செயற்பட்டிருந்தாலும் அதில் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஜனாதிபதி பதவி முதல் கடை நிலை உத்தியோகத்தர் வரை, அரசின் அனைத்து உறுப்பினர்களும் அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி நாட்டின் அபிவிருத்தியை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.
அரசியல் தூய்மையானதாக, பேதங்கள் அற்றதாக, ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும்.
இன மத பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமதானம் சகவாழ்வை மக்களுக்கு உறுதி செய்வதுடன் மத நல்லிணக்கத்தையும் நம்பகத்தன்மையுடன் வாழும் சூழ்நிலை உறுதிசெய்யப்படவேண்டும்.
இவை அத்தியாவசியமானது என்று நாம் கருதவேண்டும். இதனை கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் செயற்படவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்க உயிரை பணயம் வைத்த படைவீரர்கள், பொலிசார் மற்றும் சிவில் இராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்கள் யுத்தத்தின்போது பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களில் பலர் கைகால்களை இழந்து ஊனமுற்ற நிலையில் குடும்ப வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர்.
இன்றைய 70ஆவது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளில் இவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவர்களது குடும்பங்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளோம்.
எமது நாட்டின் அபிமானத்தை எமது நாட்டின் பெருமையை எமது கடந்தகால அனுபவங்களை பாடமாக வைத்து நாங்கள் செயற்படவேண்டும். படித்தவர்கள் புத்திஜீவிகள் முக்கியமாக தமது பங்களிப்பை இதற்காக வழங்க வேண்டும் . இன்று எங்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான சவால் என்ன? நாம் செய்யவேண்டியது என்ன ? எதிர்காலத்தின் நன்மைக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். அதுதான் முக்கியமான சவாலாக இருக்கின்றது.
பொருளாதார ரீதியிலே எதிர்நோக்குகின்ற எல்லாப்பிரச்சனைகளுக்கும் நாங்கள் சிறப்பாக முகங்கொடுக்கவேண்டும். ஏழ்மை எங்களுக்கு இருக்க கூடிய பாரியசவாலாக இருக்கின்றது. அந்த ஏழ்மை , வறுமையைப் போக்க கடந்த காலத்தில் பணியாற்றிய போதிலும் நாம் நம் கடமைகளை மேலும் சரியாக செயற்படுத்தவேண்டும். ஏழ்மை வறுமை இவற்றிலிருந்து நாம் விடுதலைபெறவேண்டும் .அதேபோன்று நமது நாட்டு மக்கள் தேசிய அபிவிருத்தி பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.
சில செயற்பாடுகள் எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேசிய ரீதியான முக்கிய பிரச்சினைகளை அறிந்து நாம் சரியாக செயலாற்ற வேண்டும். எங்களுடைய கல்வித்துறையில் இருக்கக்கூடிய கல்விமான்கள், புத்திஜீவிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். எமது கல்விமுறையிலேயே இன்னும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் , இயற்கை வளங்கள் இவையனைத்தும் மேம்படுத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டிலே ஒரு அபிவிருத்தியை நாம் இன்னும் காணக்கூடியதாக இருக்கும்.
எமது நாட்டின் பல நிதிப்பிரமாணங்கள் பழைய நிதி தொடர்பான விதிகள் மிகவும் பழமைவாய்ந்ததாகும். காலத்திற்கேற்றவகையில் இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஒழுக்க விதிமுறைகளுக்கு முக்கியத்துவமளித்து நாம் செயற்படவேண்டும். தூய்மையான அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படவேண்டும். அபிவிருத்திவேலைகள் சிறப்பாக செய்யப்படவேண்டும். அபிவிருத்திக்கு அரசியல்வாதிகள் மக்களோடு இணைந்து நேர்மையாக செயற்படவேண்டும். அர்ப்பணிப்பு நம்பிக்கை இவைதான் காலத்தின் தேவை.
ஊழல், மோசடி, வறுமை இல்லாத தூய்மையான நாட்டைக்கட்டியெழுப்ப அனைத்து தலைமைகளும் முன்வரவேண்டும்.
தேசிய பொருளாதார பங்களிப்பே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமானது. அதற்காக அனைவரும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM