நீதிக்கான தாமதமும் நம்பிக்கையும்

Published By: Priyatharshan

02 Feb, 2018 | 03:22 PM
image

கன்றிழந்த பசுவுக்கு நீதி கிடைக்க மனுநீதிச் சோழ மன்னன் தன் மகன் வீதிவடங்கனை தானே தேர்ச்சில்லில் வைத்து உயிர்நீற்கச் செய்தான். பொற்கைப் பாண்டியன் தன் கையை வெட்டி நீதியை நிலைநாட்டினான். இப்படி அரசகாலத்தில் நீதியை நிலைநாட்டிய உதாரணக்கதைகளை நாம் அறிந்திருந்தாலும்  இலங்கையில் நீதி என்பது சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் அதுவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்னமும் கானல் நீரான விடயமாகவே உள்ளது. இன்னொரு பக்கம் கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதன் காரணமாக தற்போதுவரையில் எந்த பிரிவில் வழக்குகளை தொடுப்பது என்று கூட முடிவொன்றை எடுக்கமுடியாத நிலையிலும் சில இளைஞர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தமது அன்புக்குரியவர்களின் விடுதலைக்காக நாட்கள் கடந்து, மாதங்கள் மறைந்து வீதியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் உறவினர்கள். இந்த நிலைமைக்கு நீதித்துறையின் செயற்பாடுகளே பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறிருக்கையில் இலங்கையைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நீதி விசாரணைகளில் ஆமைவேகமான தன்மையே காணப்படுகின்றன. குறிப்பாக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் அவசியமான வழக்குகள் விரைவாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு நிறைவுக்கு வருகின்ற போதும் சாதாரண மக்களின் வழக்குகள் இன்னமும் தேக்க நிலையிலேயே உள்ளன.நீதி அமைச்சு 2017ஆம் ஆண்டு வெளிட்ட தகவல்களின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு நிறைவில் 725, 944 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவற்றில் உயர் நீதிமன்றத்தில் 3566வழக்குகளும், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4837வழக்குகளும், மேல் நீதிமன்றத்தில் 3758வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 142,749வழக்குகளும், நீதிவான் நீதிமன்றங்களில் 535,644 வழக்குகளும் உள்ளடங்குகின்றன. இந்த வழக்குகளுக்கான தீர்ப்புக்கள் எப்போது கிடைக்கும். தீர்ப்புக்கள் கிட்டும்போது குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான காலம் இருக்குமா? அவ்வாறு தண்டனை அறிவிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படுமா? மனுதாரர் உயிருடன் இருப்பாரா இல்லையா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியாதிருக்கின்றது. புதிய ஆட்சியாளர்கள் மிகப்பழைய சட்டக்கோவைகளை திருத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள். நீதிமன்றங்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுக்கின்றார்கள். விசேட நீதிமன்றங்களைக் கூட அமைக்கின்றார்கள். இருப்பினும் இவையெல்லாம் வழக்கு விசாரணைகளுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் நடைமுறையில் அது சாத்தியமாகுமா என்ற பாரிய ஐயப்பாடு எம்முள் இன்னமும் இருக்கின்றன. இது இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் இதையொத்த நிலைமைகளே காணப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவினை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காணப்படும் நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களிலும் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.  நம்பிக்கைஇத்தகைய நிலையில் தாழ்த்தப்படும் நீதி கிடைக்காத நீதியாகவே போய்விடும் ஆகவே ஆகக்குறைந்தது வழக்குகள் விரைவாக்கப்பட வேண்டும். அது தமக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்ற மனோநிலையில் உள்ள கேரளமக்கள் சற்றே வேறுபட்ட நம்பிக்கையை அதீதமாக கொண்டிருக்கின்றனர்.அரேபிக்கடலின் அருகில் அமைந்துள்ள இந்திய மாநிலமான கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கொச்சியில் பொன்குந்தம் எனப்படும் அழகிய அமைதியான பகுதியில் செருவேளி கிராமத்தில் தேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  ஆயிரத்து நூறு வருடங்கள் தொன்மையைக் கொண்டிருப்பது செருவேளி தேவி அம்மன் ஆலயத்தின் பெருமையாக இருந்தாலும் இங்கு உலகின் அனைத்து தரப்பினரையும் வரவழைத்து நிறுத்தும் மற்றொரு விடயமும் உள்ளது.ஆம், செருவேளி ஆலயத்திற்குள்ளே பிரதான கடவுளான செருவேளி தேவிக்கு அண்மித்ததாக (மலையாளத்தில்) ஜச்சி அம்மாவன் எனப்படும் சிறு ஆலயமொன்று உள்ளது. இந்தியாவின் பிரபல்யங்கள் உட்பட பலநாடுகளிலிருந்து ஜச்சி அம்மாவன் இடத்தில் தமது வேண்டுதல்களை முன்வைப்பதற்காகவே வருகின்றார்கள். ஜச்சி அம்மாவன் தாமதமாகும் வழக்குவிசாரணைகளை விரைந்து முடிப்பதற்கும் தீர்ப்புக்கள் தமக்கு சார்பாக அமைவதற்கும் அருள் பாலிக்கின்றார் என்பது தான் அனைவரினதும் அதீத நம்பிக்கையாகவுள்ளது. பின்னணி18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் என்ற மாகாணத்தினை மன்னர் தர்மராஜா கார்த்திகா திருநல்ராம வர்மா என்பவர் ஆட்சிசெய்து வந்திருந்தார். இக்காலப்பகுதியில் பிரபல்யமாகவும் மன்னரின் நேர்த்தியான ஆட்சிக்கும் நிருவாகத்திற்கும் பக்கபலமாகவும் இருந்தவர் பொன்குந்தம் கிராமத்தினை பூர்வீகமாகக்கொண்ட நீதிபதி கோவிந்தப்பிள்ளை.இவருடைய தீர்ப்புக்களும், வழக்குகளை கையாளும் திறமைகளும் மக்கள் மத்தியில் பெரும்வரவேற்பினை பெற்றிருந்தன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பாரபட்சமின்றி நேர்மையாக செயற்பட்டு வந்தார் கோவிந்தப்பிள்ளை. இவ்வாறான நிலையில் குறித்த வழக்கொன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அதில் அவருடைய மருமகனான பத்மநாபா பிள்ளை மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கினை விசாரணைக்குட்படுத்திய நீதிபதி கோவிந்தப்பிள்ளை தனது மருமகன் என்று கூட பார்க்காது அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக கூறி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு அறிவிப்பின் சில நாட்களின் பின்னர் அவர் தான் குற்றம் இழைத்து விட்டதாக உணர்ந்து கொண்டதால் பெரும் மனச்சஞ்சலத்திற்கு உட்பட்டிருந்தார். இதனால் என்ன செய்வதென்றறியாது தனது தவறினை மன்னர் தர்மராஜா கார்த்திகா திருநல்ராம வர்மாவிடத்தில் குறிப்பிட்டு தனக்குரிய தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இருப்பினும் மன்னர் அதனை பெரிதாக்க விரும்பாததன் காரணமாக காலம் கடத்த முற்பட்டபோதும் நீதிபதி கோவிந்தப்பிள்ளை கடும் மன உழைச்சல் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவதை உணர்ந்தார். இதனால் தனக்கு உரிய தண்டனை கிடைக்காது விட்டால் தனது நிலைமை மோசமடைந்துவிடும் என்பதை மன்னரிடத்தில் எடுத்துரைத்ததோடு தனக்கு சிரச்சேதம் செய்யப்பட்ட பின்னர் மரத்தில் மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார். ஈற்றில் மன்னரும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கோவிந்தப்பிள்ளையின் நேர்மை மற்றும் உயரிய குணங்களை கருத்திற்கொண்டு அவருடைய சிறு ஆலயமாக அவரால் பராமரிக்கப்பட்டு வந்த செருவேளி ஆலயத்தின் மூலஸ்தானத்திற்கு அருகில் மரியாதையின் நிமித்தம் வைக்கப்பட்டது. அக்காலத்தில் நாயர் குலத்தினைச் சேர்ந்த கோவிந்தப்பிள்ளை மீது அனைவரும் மதிப்பு வைத்திருந்தார்கள். இதனால் அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் அவரை வணங்குவதால் நீதி கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை பரம்பரைபரம்பரையாக ஏற்பட்டதோடு மட்டுமன்றி இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் உலக நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. பூஜையும் நடைமுறையும்செருவேளி தேவி ஆலயத்தின் பூஜைகள் ஐந்து மணிக்கு ஆரம்பித்து நிறைவடைந்ததும் ஒவ்வொரு நாளும் இரவு எட்டுமணிக்கு ஜச்சி அம்மாவன் ஆலயத்தின் கதவு திறக்கப்படும். இதன்போது அங்கு வருகை தருபவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பார்கள். கோரிக்கைகளை முன்வைக்கும் ஒவ்வொருவரும் காணிக்கையாக ஒரு தட்டில் இலையப்பம், எண்ணெய், தேங்காய், வழக்கு இலக்கம், வழக்குள்ள நபர்களின் பெயர் போன்றவற்றை வைத்து பூஜைக்காக வழங்குவதே வழமையாகவுள்ளது. சுமார் 30 நிமிடங்களில் ஜச்சி அம்மாவன் ஆலய கதவு மூடப்படுவதே வழமையாகவுள்ளது. இந்தக்கோவிலின் பிரதம சிவாச்சாரியராக சாபரிமலை தாழ்வன்மடத்தினைச் சேர்ந்த ஈஸ்வரன் நம்பூதிரி காணப்படுகின்றார். கேரள மாநில அரசாங்கத்தின் கீழ் கோவில் நிருவாகம் காணப்படுகின்ற அதேநேரம் கோவில் தேவஸ்தானத்தின் தலைவராக அஜயன் செயற்பட்டு வருகின்றார். அவர் கூறுகையில், பலர் தமது வழக்கு விடயங்களுக்கான தீர்வுகளுக்காகவே அன்றாடம் வருகை தருகின்றனர். அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. இனம், மதம், மொழி கடந்து இங்கு வருகை தந்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றிச் செல்கின்றார்கள். ஜச்சி அம்மாவன் பாரபட்சம் காட்டுவதில்லை. சாதாரண பொதுமகன் முதல் முக்கியஸ்தர்கள் வரையில் அனைவரும் இங்கு வந்து செல்கின்றார்கள் என்றார்.மிக அண்மையில் ஜச்சி அம்மாவன் சக்திக்கு உதாரணமாக பல விடயங்களை குறிப்பிட முடியும். குறிப்பாக 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் சிறிசாந் சிக்குண்டிருந்த நிலையில் அவருடைய உறவினர்கள் அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டதன் பின்னரே சிறிசாந்துக்கு பிணை அனுமதி கிடைத்துள்ளது. இதேபோன்று சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர்  மறைந்த ஜெயலலிதா ஜெயராம் சிக்குண்டிருந்த சமயத்தில் அவருடைய ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். சசிகலாவுக்கான தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்னரும் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களும் இங்கு பிரார்த்தனை செய்துள்ளனர். மிக அண்மையில், மலையாள நடிகரான திலிப்குமார் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்குண்டிருந்த சமயத்தில் அவருடைய சகோதரர் மற்றும் உறவினர்கள் இங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயங்களை, ஆலயத்தின் அன்றாட நிருவாகத்தினை கவித்துக்கொள்வதற்கு பொறுப்பாகவிருக்கும் திலிப் உறுதிசெய்துகொண்டார். அதேநேரம் ஜச்சி அம்மாவன் ஆலயத்திற்கு வருகை தரும் மக்கள் நியாயத்தின் பக்கமே ஜச்சி அம்மாவன் இருப்பார். குற்றமிழைத்தவர்கள் தம்மைக் காப்பாற்ற பிரார்த்தனைசெய்தாலும் அதனால் பலனில்லை என்று அடித்துக் கூறுகின்றார்கள்.  இவ்வாறு தான் கேரள மக்களின் நம்பிக்கை தற்போது வெகுவாக அனைத்து இடங்களிலும் பரவிவருகின்றது. இந்த ஆலயத்திற்கு சென்று பார்த்த பின்னர் இலங்கையன் நீதித்துறை நிலைமைகளை சீர்செய்வதற்கு அங்கு ஜச்சி அம்மாவன் உதவிக்கரம் அவசியமாகின்றது என்பது இயல்பாகவே எழுக்கின்றதல்லவா?( ஆர். ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48