பதுளை மகளிர் கல்லூரியின் பெண் அதிபரை முழந்தாளிடச் செய்தமைக்கு எதிராகவும் அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியும் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை அட்டன் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களா திலகராஜ், வடிவேல் சுரேஸ் ஆகியோர் கூட்டாக அறித்துள்ளனர்.
அரசியல் பேதமின்றி அரச ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அனைத்து தரப்பினரும் அணிதிரள வேண்டுமென்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக ஊவா முதலமைச்சர் சாமர சம்பத்தை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரினர்.
அத்துடன் ஊவாமாகாண கல்வி அமைச்சினை கீரியிடமிருந்து மீளப்பெற்று நரியிடம் வழங்கியுள்ளதாக அதிருப்பதி வெளியிட்ட அவர்கள், உடனடியாக மாகாண கல்வி அமைச்சினை மீளப்பெறுவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த மலைய மக்களுக்கு செய்யும் பிரதான பிரதியுபகாரம் எனவும் சுட்டிக்காட்டினார்கள்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு மூன்று மக்கள் பிரதிநிதிகளும் வலியுறுத்தினார்கள். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
அமைச்சர் பழனி திகாம்பரம்
மோசடிகாரர்கள், சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக தனது வாளைச் சுழற்றப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அது அவருடைய மிகச் சிறந்த அறிவிப்பாகவே பார்க்கின்றோம். இவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டிற்கு அவசியம் என்று நாம் கூறுகின்றோம். அவ்வாறிருக்கையில் அவருடைய கட்சியைச் சார்ந்த ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக இருக்கின்றவர் தொடர்பில் சரியானதொரு பதிலினை அளிப்பதற்கு ஜனாதிபதி தவறியுள்ளார். சட்டத்திற்கு முரணான செயற்பாட்டினை மேற்கொண்ட முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது அவரிடமிருந்து கல்வி அமைச்சு மட்டுமே மீளப்பெறப்பட்டுள்ளது. இதனையிட்டு நாங்கள் மிகவும் வேதனையடைகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்த காலத்தில் வௌ்ளைவான்கள் இருந்தன. அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால் தமிழ் அதிபர் ஒருவர் எங்கும் முழந்தாழிட்டதாக வரலாறில்லை. ஆகவே உடனடியாக தமிழ் அதிபரை முழந்தாழிடச் செய்த முதலமைச்சரை அவருடைய பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அரசசேவையாளர்கள் இந்த நாட்டுக்காவும் மக்களுக்காவும் சேவையாற்றுபவர்கள். தற்போது அதிபர் ஒருவருக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதுதொடர்பில் ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் எதிர்காலத்தில் அரச சேவையாளர்களுக்கு எதிராக மோசமாக அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் நடந்துகொள்ளும் மோசமான நிலைமையே ஏற்படும் ஆபத்துள்ளது.
இதுவொருபுமிருக்கையில் தற்போது மாகாண கல்வி அமைச்சானது செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது முதலமைச்சர் சமார சம்பத் போன்ற மற்றுமொருவரிடத்திலேயே மாகாண கல்வி அமைச்சு கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் பெண் அதிபருக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு பிராயச்சித்தம் தேடுவதற்காகவே கல்வி அமைச்சுப் பதவி செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சு பதவியானது செந்தில் தொண்டமானுக்கு வழங்கியமை தவறான செயன்முறையாகும். ஆகவே ஜனாதிபதி அதுகுறித்தும் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
முதலைமச்சர் விடயத்தில் இராஜங்க அமைச்சர் டிலான் பெரோ மாறுப்பட்ட நிலைமையில் உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பாராயின் அவர் நிச்சயமாக பதவி விலக வேண்டும். ஆனால் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவர் அவ்வாறு செய்தால் அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் கருத்துக்களை அவர் கூறுகின்றார். எவருக்கும் இரண்டு நிலைப்பாடு இருக்க முடியாது. அதேபோன்று மேல்மாகாண முதலமைச்சரும் வேறெரு கருத்தினை கூறுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி சரியோ பிழையே அக் கட்சியிலிருந்து தற்போது அமைச்சர்கள் இருவர் தமது பதவிகளை இராஜினாமச்செய்துள்ளனர்.
ஆகவே இந்த விடயத்தில் நாம் ஜனாதிபதியித்திலிருந்தே நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். அவர் கூறுவதைப்போன்று இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவருடைய வாக்குறுதிகளை நம்பியே எமது மக்கள் தமது வாக்குகளை வழங்கியுள்ளார்கள். ஆகவே அவர்களின் நம்பிக்கையை வீணடிக்ககூடாது என்றார்.
வடிவேல் சுரேஷ் எம்.பி
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உரையாற்றுகையில், பதுளை மகளிர் கல்லூரி பெண் அதிபரை முழந்தாழிட செய்த சம்பவம் மூன்றாம் திகதி இடம்பெற்றது. அதன் பின்னர் அச்சம்வத்தினை மூடிமறைக்கும் நோக்குடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொங்கிறீட் இட்டு நிரந்தரமாக மூடுவதற்கே முயற்சித்தார்கள். ஆனால் அது முடியாது போனது. கடந்த 9ஆம் திகதி முதல் அந்த விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு தற்போது பாராளுமன்ற தெரிவிக்குழுவிலும் விசாரணை இடம்பெற்றுள்ளது.
அந்த பெண் அதிபர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை பகிரங்கமாக கூறியுள்ளார். எவ்வாறு முழந்தாழிட்டேன் என்று மக்கள் மத்தியில் பொலிஸாரிடத்தில், ஊடகங்களிடத்தில், வைத்தியசாலையில் பாராளுமன்ற குழுவில் என அனைத்து இடங்களிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிக அண்மையில் தனது கணவை இழந்து தனிமையாக வாழும் ஒரு பெண்ணுக்கு இவ்வாறான அநீதி இழைக்கப்படுகின்றமையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
நாங்கள் பெண்கள் உரிமைகள் தொடர்பில் பேசுகின்றோம். பெண்களுக்கான அங்கீகாரம் வேண்டி உள்ளுராட்சி மன்றங்களில் 25சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டங்களை நிறைவேற்றுகின்றோம். அவ்வாறெல்லாம் செய்து விட்டு பெண்களை இவ்வாறு நடத்துவது நியாயாமா? ஓவ்வொரு வருடமும் கல்வி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிக்கின்றோம். கல்விச் சேவையை வழங்கி நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு குருவுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதென்றால் நாம் எங்கிருக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள இலவசக் கல்வித்துறைக்கு என்ன நிகழ்ந்திருக்கின்றது. தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தி உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தவிடயத்தில் தமதங்களைச் செய்ய முடியாது. விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய முடியாது. பெண் அதிபருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஒருபக்கம் அநீதி இழக்கப்பட்டிருக்கையில் மறுபக்கத்தில் என்ன நடைபெற்றிருக்கின்றது கீரியிடமிருந்து மாகாண கல்வி அமைச்சினைப் பெற்று நரியிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சினைப் பெற்றுள்ள செந்தில் தொண்டமான் ஏற்கனவே பாரதி வித்தியாலத்திற்குச் சென்று அதிபரின் கதிரையில் அமர்ந்த ஒருவரேயாவார். அதுமட்டுமன்றி அவர் மேசையில் இரண்டு கால்களையும் வைத்தவாறே யாருடனும் பேச முற்படுவார். இத்தகைய ஒருவர் கல்வி அமைச்சுக்கு பொருத்தமானவரா?
இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்கும் கலாசாரம் இருக்கின்றது. இலங்கையில் பிறந்து கல்வி கற்றிருக்கவேண்டும். அவ்வாறு கல்வி கற்றிருந்தால் அத்தகைய கலாசாரங்களை அவர்களால் அறிந்திருக்க முடியும். இங்கும் இந்தியாவைப்போன்று பந்தா அரசியல் செய்யமுடியாது. அது இந்த நாட்டுக்கான கலாசாரமுமம் அல்ல. இதனை புரி்ந்துகொள்ள வேண்டும்.
செந்தில் தொண்டமான் பதவியை ஏற்றதும் குறித்த பாடசாலைக்கு செல்கின்றார். அவர் உடனடியாகச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இத்தனை நாட்களாக பிரச்சினை காணப்பட்டபோது ஏன் அவர் செல்லவில்லை. பெண் அதிபர் உட்பட மலைய மக்கள் செய்த பாவம் என்ன? இத்தகையவொருவருக்கு அமைச்சுப்பதவியை வழங்கியதன் மூலம் மலையமக்களின் நிலைமை எண்ணைச் சட்டியில் இருந்து நெருப்பிற்குள் விழுந்த கதையாக மாறியுள்ளது.
இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளும் மலைய மக்களின் வாக்குகள் இன்றி ஆட்சிக்கு வரவில்லை. இதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். 31ஆம் திகதி நடைபெறும் பாரிய ஆர்ப்பாட்டதில் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் முழுமையாக பங்கேற்று தனது கடுமையான கண்டனத்தினை வெ ளிப்படுத்தும். இவ்வாறான முதலைமைச்சர் ஒருவர் பதவியில் இருந்து மட்டுமல்ல அரசியலிலிருந்தே வெ ளியேற்றப்பட வேண்டும்.
அதுமட்டுமன்றி எங்கிருந்தோ பரசூட்டில் வந்திறங்கி கறுப்புக் கண்ணாடியை அணிந்தவுடன் அவர்களுக்கு அமைச்சுப்பதவியை வழங்க முடியுமா? இத்தகைய அநீதிகளை பார்த்துக்கொண்டு தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டிருப்பதற்கு மலைய மக்கள் முட்டாள்கள் அல்லர். பெண் அதிபருக்கு நீதி கிடைப்பதற்கு நாம் அரசியலில் இருப்பது தான் தடை என்றால் அதனை தூக்கி எறிந்து விட்டு வீதிக்கிறங்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
திலகராஜ் எம்.பி
நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலராஜ் உரையாற்றுகையில்,
ஊவா மாகாண முதலமைச்சரின் கீழ் கல்வி அமைச்சுப் பொறுப்பு காணப்பட்டாலும் தமிழ் விடயங்களை கையள்வதற்கான பொறுப்பினை செந்தில் தொண்டமானிடத்தில் தான் முதலமைச்சர் வழங்கியிருந்தார். அவரது அமைச்சான வீதி அபிவிருத்தி அமைச்சின் கட்டத்திலேயே தமிழ் கல்வி விடயங்களை மேற்பார்வை செய்யும் பகுதி காணப்பட்டது.
அவ்வாறான நிலையில் முதலமைச்சரிடத்தில் இருந்த கல்வி அமைச்சுப் பொறுப்பு தற்போது செந்தில் தொண்டமானிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது ஏற்கனவே அவரிடத்தில் அளிக்கப்பட்ட பொறுப்பினை முழுமையாக நிறைவேற்றாத நிலையில் மீண்டும் அவரிடத்தில் முழமையான பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் செந்தில் தொண்டமான் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அரசசேவையில் இருந்த தபால் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் பண்டாரவளை நீதிமன்றத்தில் நீதி விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அரச சேவையாளரை தாக்கி விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் அத்தகையவொருவருடத்தில் அதிகாரம் கையளிக்கப்படுவது குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
ஏற்கனவே ஆனைமடுவ பகுதியில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடையவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமையானது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இச்சம்வம் குறித்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அது பாரதூரமானதாக அமைந்துவிடும். ஆகவே ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கையை எடுப்பதோடு மட்டுமின்றி மாகாண அமைச்சுப்பதவி வழங்கியமை தொடர்பில் உடனடியாக தலையீடு செய்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM