ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது பதவி மேலுள்ள மோகம் அதிகரித்துவிட்டது. தான் தொடர்ந்தும் ஜனாதிபதி யாக இருக்கவேண்டும் என்ற ஆசையிலேயே நீதிமன்ற ஆலோசனையினை பெறுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விசாரணையினை வெளிப்படையாக செய்தவர்களுக்கு விசாரணை அறிக்கையினை ஏன் வெளியிட முடியாதுள்ளது எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
அரசாங்கதின் போக்கு நாளுக்கு நாள் மோசமான வகையில் மாற்றம்கண்டு வருகின்றது. இன்று அரசாங்கம் மக்களுக்கு என்ன வாக்குறுதியினை கொண்டுப்பது என்பது தெரியாது திண்டாடி வருகின்றது. பிரதான கட்சிகளின் பிரதான கருத்தாக ஊழலை ஒழிப்போம் என்று கூறப்பட்டு வருகின்றது. எனினும் இவர்களே இத்தனை காலமாக ஆட்சியில் இருந்து ஊழல் செய்தனர். இன்று தாம் தூய்மையானவர் என கூறிக்கொண்டு ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர் .
ஊழல் செய்தவர்கள் இன்று ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். கொலை, கொள்ளை பாரிய குற்றங்கள் செய்தவர்கள் இன்று அதனை தடுப்பதாக கூறுகின்றனர். ஆகவே இவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்துமே பொய்யான கருத்துக்களாகும். வெறுமனே மேடைகளில் மாத்திரம் இவர்கள் கருத்துக்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆகவே மக்கள் இனியும் இவர்களை நம்பி செயற்பட வேண்டுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும் .
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து கள்வர்களை பிடிப்பதாக கூறினர். ஆனால் இன்று மூன்று ஆண்டுகள் கடந்தும் கள்வர் எவரையும் கைதுசெய்யவில்லை. தண்டிக்கவும் இல்லை. ஆகவே இந்த அரசாங்கம் கள்வர்களை பிடிக்கும் அரசாங்கம் அல்ல. மாறாக கள்வர்களை பாதுகாக்கும் அரசாங்கம். அத்துடன் இந்த அரசாங்கமும் கள்வர்களுடன் இணைந்து களவுகளை முன்னெடுத்து வருகின்றது.
ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய வங்கியில் கை வைத்துவிட்டனர். இது குறித்து வெ ளிப்படையாக ஒரு விசாரணையை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுத்தது. ஊடகங்கள் முன்னிலையில் ஒவ்வொரு நாளும் நபர்கள் விசாரிக்கப்பட்டனர். விசாரணையினை வெளிப்படியாக செய்துவிட்டு அறிக்கையினை மூடி மறைத்து வருகின்றனர். ஆகவே குற்றவாளிகளை காப்பாற்றி தமது அரசியலை தக்கவைக்கவே இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது .
அறிக்கையினை அரசியலாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனை அரசியல் வாய்ப்புகளாக பயன்படுத்த வேண்டாம். இது மக்களின் பிரச்சினை ஆகவே குற்றவாளிகளை தண்டியுங்கள். ஊழல் வாதிகளே இன்று ஆட்சியில் இருந்துகொண்டு ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். கள்வரால் களவை ஒழிக்க முடியாது. ஆகவே இனியும் இந்த கட்சிகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது.
இவர்கள் தொடர்ந்தும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் இன்று கள்வர்கள் இருதரப்பினரும் திட்டமிட்டு அடித்துக்கொள்கின்றனர். இவை அனைத்துமே உண்மைகளை மறைக்கும் சூழ்ச்சி என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் கள்வர்கள் சாயம் பூசப்படாத ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணி மட்டுமேயாகும். கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். ஊழல், சர்வாதிகார போக்கில் இருந்து பிரதேச சபைகளை மீட்டு ஜனநாயக ரீதியில் மக்களுக்கு சேவை செய்யும் பிரதேச சபைகளாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான போராட்டத்தையே மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருகின்றது.
மேலும் இந்த அரசாங்கத்தில் யார் தீர்மானம் எடுப்பது என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஜனாதிபதி என ஒருவர் ஏன் இருக்கின்றார் என தெரியவில்லை. நிதி அமைச்சர் கொண்டுவரும் திட்டத்தை ஜனாதிபதி வானொலியில் கேட்டே அறிந்து கொள்கின்றார். அடுத்த நாள் ஏதோ ஒரு மக்கள் கூட்டத்தில் அவ்வாறான திட்டங்களை நீக்குவதாக கூறுகின்றார். இது மிகவும் வேடிக்கையான அரசாங்கமாகும். அதிகாரம் யார் கையில் உள்ளது என்பது யாருக்குமே தெரியவில்லை. ஆகவே இவ்வாறான நிலையில் அரசாங்கம் ஒன்று செயற்பட முடியாது. எனவே முதலில் நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்தே மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நகர்வுகளில் மக்கள் விடுதலை முன்னணியுடன் மக்கள் கைகோர்த்து செயற்பட வேண்டும்.
மேலும் , ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் பொய்யாக்கி வருகின்றார். தான் ஆட்சிக்கு வரும் போது என்ன கூறினார். தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதாக கூறினார். 19 ஆம் திருத்தமும் கொண்டுவந்தார் இன்று நீதிமன்றத்திடம் சந்தேகம் கேட்கின்றார். அவரது ஆட்சி காலம் குறித்து அவர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு சந்தேகம் எழுந்துள்ளது என்றால் ஆட்சிக்கு வந்த நேரம் வினவியிருக்க வேண்டும், அல்லது 19 திருத்தம் கொண்டுவந்த நேரம் கேட்டிருக்க வேண்டும். அல்லது நீதிமன்றம் தானாக ஜனாதிபதி கால எல்லை ஆறு ஆண்டுகள் என கூறினாலும் தான் ஐந்து ஆண்டுகளே ஆட்சி செய்வதாக கூற வேண்டும். அதுவே கொடுக்கப்பட்ட வாக்குறுதி. அவ்வாறு இருக்கையில் இன்று அவர் நீதிமன்ற ஆலோசனையினை பெறுகின்றார் என்றால் அவருக்கு பதவி மோகம் வந்துவிட்டது என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி கொடுத்து விட்டு 19 ஆம் திருத்தம் கொண்டுவரும் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் கேட்கின்றார். அவர்களுக்கு இப்போது அதிகார மோகமும் அச்சமும் வந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தினை உறுதிப்படுத்த அவர்களுக்கு காலம் அவசியமாகின்றது. ஆகவே ஜனாதிபதியின் கதை ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் உள்ளது. இது முழுமையாக ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாக்குறுதிகளைக் கூறி ஊழல் வாத அரசியலையே முன்னெடுத்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM