மாணிக்கக்கல் வியாபாரிகளும் அகழ்வாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாணிக்கக்கல் வியாபாரிகளும் அகழ்வாளர்களும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
சட்டரீதியான அனுமதிப்பத்திரத்துடன் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுகையில் தேசிய மாணிக்கக்கல், ஆபரணங்கள் அதிகார சபையினர் அல்லாத வேறு பிரிவினரால் அகழ்வுப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, மாணிக்கக்கல் அதிகாரசபையின் அதிகாரிகள் மாத்திரம் உரிய தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கினார். மேலும் சட்டரீதியான அனுமதிப்பத்திரத்துடன் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தேடுதல்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
காலை 06 மணி முதல் மாலை 06 மணிவரை மாத்திரம் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையினால் தமது தொழிலை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக கைத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். அதிகாலை 02 மணியளவில் மாணிக்கக்கல் சுரங்கங்களில் இருந்து நீர் இறைக்க வேண்டி ஏற்படுவதனாலும் பராமரிப்பு நடவடிக்கைகளை இரவு பகலாக மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள சட்டத்தினை நீக்குவதற்கும் ஜனாதிபதி உரிய பிரிவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
மாணிக்கக்கல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு முறையான, வினைத்திறனான செயற்திட்டமொன்றினைப் பின்பற்றவும் கமநல சேவைகள் திணைக்களத்தினதும் ஏனைய நிறுவனங்களினதும் அனுமதியை ஒரு வார காலத்துக்குள் வழங்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
புதிய வரவு செலவுத் திட்டத்தில் மாணிக்கக்கல் ஏற்றுமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 14 சதவீத வரி தொடர்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் பற்றியும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிப்பதாகவும் தெரிவித்தார்.
இயந்திரங்களின் உதவியுடன் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கும் முறை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பெகோ இயந்திரத்தின் உபயோகத்துடன் மேற்கொள்ளப்படும் மாணிக்கக்கல் அகழ்வினை மட்டுப்படுத்தவும் மாணிக்கக்கல், ஆபரணங்கள் அதிகார சபையினால் தீர்மானிக்கப்படும் இடங்களில் மாத்திரம் அவ்வியந்திரங்களை உபயோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் அவற்றை மாணிக்கக்கல், ஆபரணங்கள் அதிகாரசபையினால் மேற்பார்வை செய்யவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
தமது சங்கத்தினரால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஜனாதிபதிக்கு மாணிக்கக்கல் வியாபாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. குறித்த முன்மொழிவுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் செயற்படுத்த முடியாத விடயங்கள் தொடர்பான அறிக்கையை இரண்டு வாரத்தினுள் தமக்கு சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டியது மாணிக்க கல் கைத்தொழிலாளர்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அண்மையில் மாகாணங்கள் பலவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளும் அப்பிரதேசங்கள் முறையாகப் பேணப்படாமையும் காரணமாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, குறித்த மாவட்டங்களில் டெங்கு நோய் துரிதமாக பரவுவதற்கும் சட்ட அனுமதியற்ற அகழ்வு நடவடிக்கைகளே காரணமாகும் எனவும் தெரிவித்தார்.
மாணிக்கக்கல் கைத்தொழிலில் பணிபுரியும் அனைவரினதும் முன்னேற்றத்திற்காக தற்போது அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதில் அவர்களது பங்களிப்பினை பாராட்டினார்.
மாணிக்கக்கல் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு கருத்துக்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM