தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை சமரசமாக தீர்க்கமுடியும். இதனை சமரசமாகத் தீர்க்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற முறுகல் நிலையானது சுமுகமாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் ஆசனப்பங்கீடு தொடர்பில் பிளவுபடக்கூடாது என்பது எமது சிந்தனையாகும். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அறிவுறுத்தியுமுள்ளார்.
இத் தேர்தல் தொடர்பான ஆசனப் பங்கீட்டினால் ஏற்பட்ட பிளவுகள் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. என்னோடு நேற்றுமுன்தினம் இரண்டு மணிநேரம் கலந்துரையாடினார். இதன்போது நாம் எங்கெங்கு பிரச்சினை உள்ளது என்பதை கிரமமாக ஆராய்ந்தோம். பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்தோம்.
இதன்போது தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்று இருப்பதாக எம்மிருவருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒவ்வொரு மாற்றுவழிகளைக் கண்டிருந்தோம். இவ்வாறான நிலையில் நாம் கண்ட தீர்வுவழிகள் தொடர்பாக எம் மாவட்ட தலைவர்களோடு நாம் கலந்துரையாடவுள்ளோம்.
இதனடிப்படையில் இப் பிரச்சினை தொடர்பான இணக்கப்பாட்டிற்கு நாம் வந்தால் தொடர்ந்து இணைந்தே பயணிப்போம். அந்தவகையில் இதனை சமரசமாகத் தீர்க்க முடியும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.
தேர்தலுக்காக அவிழ்த்து
விடப்படும் கதைகள்.
தற்போது உருவாகியிருக்கின்ற புதிய கூட்டணி, தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றவில்லை என்றும் அரசாங்கத்தை சர்வதேசத்தில் காப்பாற்றுகின்றது என்று தேர்தல் காலத்தில் கதைகளை அவிழ்த்து விடுகின்றது. அது தொடர்பில் பிரமிக்க தேவையில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாகியதாகத் தெரிகின்ற அக்கூட்டணி, அதற்காக சாட்டுப் போக்குகளையும் கொள்கை விளக்கங்களையும் செய்கின்றது.
தமிழரசுக் கட்சி அரசாங்கத்தை தப்பவைக்க செயற்படுகின்றது என எவரும் கூறமுடியாது. சர்வதேசத்தின் அழுத்தமானது இரண்டு அரசாங்கங்கள் மீதும் கொண்டுவரப்படுவதற்கு நாமே காரணமாக இருந்தோம்.
தற்போது இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அது எதிர்காலத்தில் வெற்றியளிக்குமா இல்லையா என்பது தொடர்பாக சாஸ்திரம் பார்த்து செயற்பட முடியாது.
இரண்டு முறையும் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டபோது இலங்கை அரசாங்கம் தாம் அதனை செய்வதாக கூறி பொறுப்பெடுத்துள்ளது. நாம் அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும் என கூறியபோது அவர்கள் அதனை செய்கின்ற போது நாம் அனுசரித்தே செல்லவேண்டும். அத்தகைய அணுகுமுறையில் சற்று வித்தியாசம் இருக்கும். அதேபோன்று சர்வதேசமும் அதன் அழுத்தங்களுடனும் செயற்பட ஆரம்பிக்கின்றபோது அதன் அணுகுமுறையும் வித்தியாசம் இருக்கும்.
புதிய கூட்டணி.
தற்போதைய புதிய கூட்டணியின் சின்னமாகவுள்ள உதயசூரியன் சின்னம் 2003ஆம் ஆண்டு ஆனந்தசங்கரியினால் முடக்கிவிடப்பட்டதாலேயே 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டு சின்னத்தில் போட்டியிட்டது.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிப்பவர்கள் இல்லை. கொள்கையை பார்த்து அந்தக் கொள்கையை யார் வைத்திருக்கின்றார்கள், யாரை நம்பலாம் என ஆராய்ந்து பார்த்தே தமிழ் மக்கள் வாக்களிப்பவர்கள்.
இந்நிலையில் மிக முக்கியமான பிரபலமான சின்னத்தை கைப்பற்றி விட்டோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி மக்கள் முன்னே சென்று நின்றால் அத்தகைய முக்கிய சின்னத்திற்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்துகின்றதாகவே முடியும்.
பொறுத்திருக்க வேண்டிய மக்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற தகராறு தொடர்பில் நாம் முதலில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில் புனித பயணமொன்றில் ஆசன பங்கீட்டிற்காக பிரிந்து செல்வதென்பது துரதிஸ்டவசமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் போராளிகளாக, இயக்கங்களாக இருந்து கட்சியாக மாறி வந்தமையால் அவர்களுக்கு கட்சி என்ற அடையாளம் இல்லாமல் இருக்கும். அதற்காக அவர்களை ஒதுக்கக்கூடாது. பங்காளிக் கட்சிகள் என்ற உரிய இடத்தை தமிழரசுக் கட்சி கொடுக்க வேண்டும்.
அதேபோன்று பங்காளிக் கட்சிகளும் அதே உரிய இடத்தை தமிழரசு கட்சிக்குக் கொடுக்க வேண்டும். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை சில தினங்களில் தீர்க்கப்பட்டு விடும். எனவே அதுவரை சற்று மக்கள் பொறுத்திருக்க வேண்டும்.
பிரிவு உறுதியானால் தமிழரசு கட்சி தனித்து போட்டி.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பங்காளி கட்சிகள் பிரிந்து செல்லமாட்டார்கள் என்பது எமது நம்பிக்கை. அதற்கான முயற்சிகளை நாம் செய்வோம். அதனையும் மீறி அவர்கள் பிரிந்து செல்வது தான் முடிவென்றால் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும்.
மேலும் எமது கட்சிக்குள் உள்ளே வரப் போகின்றவர்கள் என கூறுபவர்களைத் தடுக்க முடியாது. ஆனால் தேர்தல் காலங்களில் மாத்திரம் உள்ளே வருவார்களாயின் அதில் சந்தேகமுண்டு. இதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ்., பத்மநாபா அணியினர் இரண்டு ஆண்டுகளாக பேசி வருகின்றார்கள். எனவே அவர்களது விடயம் ஆராய்ந்து பார்க்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM