நேர்மையான, கொள்கையில் உறுதியான விட்டுக்கொடுப்பின்றிய மாற்றுத் தலைமை உருவாகக் கூடாது என்ற தேவை இலங்கை அரசுக்கு மட்டுமன்றி பல வல்லரசு நாடுகளுக்கும் இருக்கின்றது. தமிழ் மக்களின் மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகிறது.
தூய்மையான மாற்று அணி உருவாவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி அந்த முயற்சிக்கு அவரை துணைபோக வைத்துள்ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றவர்கள், வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை எனக்கூறுபவர்கள், சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு கொள்கையாக வெளிப்படுத்தி வருபவர்களுடன் இணைந்துதான் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இதன்மூலம் மக்களை நேர்மையாக வழிநடத்தக் கூடிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே இந்தக் கூட்டணி மக்களை ஏமாற்றுகின்ற கூட்டாகத்தான் மாறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொருத்தமான கட்சியல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாக நாங்கள் விமர்சிக்கின்றோம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ , ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை கொள்ளை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை விடுகின்றது. நிச்சயமாக அரசாங்க தரப்புக்கு விலை போய் இருக்கின்றது. தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாஷைகளை மீறுகின்ற வகையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டுவந்து தமிழ் மக்களிடம் விற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை எதிர்க்கவேண்டும்.
தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் தியாகங்கள் செய்தும் ஒற்றையாட்சிக்கு ஆணையிடக்கூடாது. தற்போது இடைக்கால அறிக்கையொன்று வெளிவந்துள்ள நிலையில் இந்த விடயங்கள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தீர்வை ஏற்றுக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளின் செயற்பாட்டை எதிர்த்து நிற்கவேண்டும். ஆகவே அந்தக் கொள்கைச் செயற்பாடுகள் பிழை என்பதைக் கூறி மாற்றுக் கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்தால் கொள்கை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முடியாத நிலைக்குத் நாங்கள் தள்ளப்படுவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில்தான் போட்டியிட்டோம். அதற்குப் பிற்பாடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்களும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு மாறாக செயற்பட்டமையினாலும் குறைந்த பட்ச தீர்வை ஏற்றுக்கொண்டமையினாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி சின்னத்தை கைவிட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.
போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் கூட கொள்கை ரீதியாக எதிர்த்தது மட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர், ஈ.பி.டி.பி. கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் உலக நாடுகளுக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நடத்திய போரை நியாயப்பத்தியவர் என்ற வகையில் அந்தக் கட்சியுடன் சேருவது பொருத்தமானதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சம்பந்தன் போன்றவர்கள் பேருக்காவது சமஷ்டியைப் பற்றிக் கதைக்கிறார்கள்.
தேர்தலில் வாக்கு எடுப்பதற்காகவாவது சுயநிர்ணய உரிமை பற்றி வடகிழக்கு இணைப்புப் பற்றி பேசுகிறார்கள். ஒற்றையாட்சியை நிராகரிக்கிறோம் எனப் பேசுகிறார்கள். ஆனால் இங்கு ஆனந்தசங்கரி இவற்றை நிராகரிக்கின்ற கொள்கை உடையவராக உள்ளார். அவருடன் சேருவதன் மூலம் ஆரோக்கியமான நேர்மையான ஒரு கொள்கையை முன்னுக்குக் கொண்டு செல்ல முடியாது. மக்களை நேர்மையாக வழிநடத்தக் கூடிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பமுடியாது. அப்படிப்பட்ட கூட்டு மக்களை ஏமாற்றுகின்ற கூட்டாகத்தான் மாறும்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய குற்றச்சாட்டு குறிப்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேருக்கு மட்டும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்றதே தவிர தமிழரசுக் கட்சியில்தான் இருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் முடிவே கூட்டமைப்பின் முடிவாக இருக்கின்றது. தங்களுடைய கட்சி ஆதிக்கம் செலுத்தமுடியாது. தம்மை கணக்கெடுப்பதே இல்லை என்பவையேயாகும்.
ஆகவே தமிழரசுக் கட்சியின் சின்னத்திலோ பேரிலோ போட்டியிடமுடியாது. அது உண்மையான கூட்டமைப்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறியே சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியேறினார். இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பேருக்குத்தான் கூட்டணி. தமிழரசுக்கட்சி போலவே அதுவும் ஒரு கட்சி. அக்கட்சியின் செயலாளர்தான் வீ.ஆனந்தசங்கரி. அப்படிப்பட்ட நிலையில் இன்னுமொரு கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் போட்டியிடுவது என்பது கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பிரச்சினையை இங்கும் உருவாக்கும்.
நாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரிலும் சின்னத்திலும் போட்டிபோடுவதை காலம் தாமதிக்கப்பட்ட நிலையில் கருத்து முரண்பாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்வதென்று நாங்கள் பார்க்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவோடும் மேற்குலக நாடுகளினுடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்டிருப்பதாக நாங்கள் பல தடவை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றோம்.
அந்த நிகழ்ச்சி நிரல் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கூட்டமைப்பினுடைய அரசியல் பாதை தமிழ்த் தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தமிழ்த் தேசத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்கின்ற அளவிற்கு அவர்கள் விலை போயிருக்கிறார்கள் என்ற தெளிவான செய்தியை 2009 இற்குப் பிற்பாடு தெளிவாகக் கூறி வருகின்றோம். அக் கருத்துக்கள் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் பேரவை மட்டுமன்றி வடமாகாண முதலமைச்சர் உட்பட பலர் அக் கருத்தை முற்றுமுழுதாக விளங்கிக் கொண்டு அந்த கூட்டை அம்பலப்படுத்துகின்ற நிலை உருவாகியிருக்கின்றது.
அந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கொள்கை ரீதியாக எதிரான கருத்து மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பு இல்லாது தமது சொந்த மக்களை சந்திக்க முடியாதுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு மாற்றுத்தலைமை என்பது ஒரு புதிய நேர்மையான கொள்கையுடன் உறுதியாக இருக்கக்கூடிய புதிய கலாசாரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அணியாக இருக்க வேண்டும். நாங்கள் அத்தகைய தலைமையை கட்டியெழுப்பிக் கொண்டு வருகின்றோம். அதன் விளைவாகத்தான் எழுக தமிழுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள்.
அப்படிப்பட்ட நேர்மையான கொள்கையில் உறுதியான விட்டுக்கொடுப்பின்றி செயற்படத் தயாராக இருக்கின்ற கூட்டு, மாற்றுத் தலைமையாக உருவாகக்கூடாது என்ற தேவை இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி பல வல்லரசு நாடுகளுக்கும் இருக்கின்றது.
எவ்வளவு தூரம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நகர்த்தி அந்த நிகழ்ச்சி நிரல் அம்பலமாகி தமிழ்மக்கள் அந்த நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக கிளம்பியுள்ள நிலையில், மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்கவேண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய அரசியலில் நேர்மையாக இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய நலனை மட்டும் கவனிக்கின்ற தரப்பிற்கு மாற்று அணியில் பிடி வைத்திருக்கக்கூடாது என்பதற்காகவும் ஆரோக்கியமான நேர்மையான கொள்கையில் இணக்கப்பாடுடைய ஒரு தூய்மையான மாற்று அணி உருவாகுவதைத் தவிர்ப்பதற்காகவுமே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரதிஸ்டவசமாக சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி அத்தகைய முயற்சிக்கு அவரை துணைபோக வைத்திருக்கிறார்கள் என்பது எங்களுடைய பார்வையாகும்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் நாங்கள் மதிப்பு வைத்திருக்கின்றோம். அத்தகைய மதிப்பு இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டுச் சேருவதற்கு இணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருந்தோம்.
எங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்கள் முக்கியமில்லை. தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் அணி தமிழ் மக்கள் பேரவைக்கு வந்தபிற்பாடு கொள்கை ரீதியாக சரியான நிலைமை ஒன்றை எடுத்துள்ள நிலையில் அவர்களுடன் சொந்தம் கொண்டாட எந்தவிதமான கூச்சமும் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட கொள்கையில் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய தரப்புக்களுடன் கூட்டணி உருவாக்காமல் எமது கொள்கைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற ஒரு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் இணைந்துள்ளமையானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எம்மைப் பொறுத்தவரையில் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமிழ்த் தேசிய விரோதிகள் இந்தக் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள் என்றே கருதுகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM