(வீரகேசரி இணையதளம்)
கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
1984 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது.
அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு வெளியேறும்படி அவர்களில் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா படி வழங்கி வெளியேற்றியுள்ளனர்.
இவர்களுள் சிலருக்கு அக்கரப்பத்தனை, டயகம, கந்தபளை போன்ற பகுதிகள் மட்டுமன்றி இன்னும் சில இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
இருந்தும் திஸ்பனை, மொச்சகொட்டை, கட்டுகொல்ல பகுதிகளில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அவர்களுக்கு ஓர் இடம் வழங்காததால் இதுவரை அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
மகாவலி அபிவிருத்தி திட்டம் நிறைவேற்றம் அடைவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த பகுதிகள் பெறப்பட்டு இருந்த போதிலும் முழுமையாக அங்கு அப்பகுதி தோட்ட தொழிலாளர்களுக்கு மாற்று இடங்களில் காணிகளும், வீடுகளும் வழங்கப்படுவதற்கு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்பே அவ்விடத்திலிருந்து தொழிலாளர் குடும்பங்கள் அகற்றப்பட வேண்டும் என அன்றைய மலையக தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் பெரியசாமி சந்திரசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் ஏனைய தலைவர்கள் கையொப்பம் இட்டதன் பின்பே அங்கிருந்து தொழிலாளர் குடும்பங்கள் அகற்றப்பட்டனர்.
ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வேறு, செயல்ப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் வேறு என்பது 30 வருடங்களின் பின் இப்பொழுது தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பின் மீள் குடியமர்த்தும் திட்டங்களும் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் வெளியிடங்களிலிருந்து சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டதுடன், இதில் அதிகமானோர் தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் பெருந்தொகையான ஏக்கர் காணிகளை தமதாக்கி கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அத்திட்டத்தின் பின் இந் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மகாவலி அபிவிருத்தி திட்ட அமைச்சு என ஒன்று உருவாக்கி அப்பகுதியில் வாழ்கின்ற சிங்கள மக்கள் இடங்களுக்கு காணி உறுதி பத்திரங்களையும் வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் மறைந்த முன்னால் தலைவர் காமினி திஸாநாயக்க, ரணசிங்க பிரமதாஸ, டீ.பி.விஜயதுங்க ஆகியோர்களுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ஷ என பல தலைவர்கள் ஊடாக காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏனைய வெளிப்பிரதேசங்களிலிருந்து மகாவலி திட்டத்தின் இடங்களில் மக்களை குடியமர்த்த முடியுமென்றால் காலங்காலமாக அந்த இடத்தில் வாழ்ந்த தமிழர்களை குடியமர்த்த முடியாமல் போனமைக்கு காரணம் தான் என்ன ?
மறுபுறுத்தில் அங்கிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தமிழர்களில் எஞ்சிய குடும்பங்களுக்கு மலையக தமிழ் தலைவர்கள் செய்தது தான் என்ன ? அல்லது பெற்றுக்கொடுத்தது தான் என்ன? என்ற கேள்வி 30 வருடங்களாக இருந்து வருகின்றது.
இப்பகுதியில் மகாவலி திட்டத்தின் போது வசித்து வந்த தொழிலாளர் குடும்பங்களை வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகங்கள் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதியே கடைசியாக சம்பளத்தை வழங்கியுள்ளது.
அத்தோடு குடும்பத்தில் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு மாற்று இடங்களுக்கு செல்லுமாறும் பணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாமலும், தமக்கென ஒரு இடம் கிடைக்காத பட்சத்திலும் பரம்பரையாக வாழ்ந்த சொந்த இடத்தில் வாழ்ந்து வருகின்ற 35 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் அநாதைகளாகப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இவர்கள் வசிக்கும் இடமும் சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட இடமாகவே காணப்படுகின்றது. அந்த இடங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும், குடியிருப்பு ரீதியாகவும் அடிப்படை வசதிகளிலும் பின் தள்ளப்பட்ட நிலையில் குப்பி விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்த இம்மக்கள் கடந்த 6 மாத காலமாகவே மின்சாரம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மின்சாரத்தை கூட பெறுவதற்கு தமிழ் தலைவர்கள் உதவவில்லை எனவும், அப்பகுதியின் கிராம சேவகரின் உதவியை கொண்டு கொத்மலை பிரதேச உப செயலாளர் பிரிவின் ஊடாக அனுமதி பெற்று மின்சாரம் பெற்றிருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு ஒரு இடம் கிடைத்தவுடன் உங்களுடைய இடங்களை கொடுத்து விட்டு நாம் செல்கின்றோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தற்பொழுது வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தமக்கென ஒரு இடத்தை தமிழ் தலைவர்க்ள பெற்றுத் தருவார்களா? என்ற ஏக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த இடத்தில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் சிற்சில வாக்குவாதங்கள், பிணக்குகள் என ஏற்படுவது கடந்த 30 வருட காலமாக வளர்ந்து வருகின்றது.
குடிநீர் பிரச்சினை, வீதி பிரச்சினை, தொழில் பிரச்சினை ஆகியவற்றில் பிணக்குகள் ஏற்படுவதுடன் அவ்விடத்தில் வாழும் 35 குடும்பங்களில் பாடசாலை மாணவர்கள் முறையாக கல்வி கற்கும் வசதிகள் அற்று இருப்பதுடன் இன்னும் பல அடிப்படை பிரச்சினைகளில் பின் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இந்த இடத்தில் வாழ்ந்த எமது மக்களை வெளியேறும்படி பணித்த மலையக தமிழ் கட்சி தலைவர்கள் இந்த இடத்தில் தற்பொழுது வாழ்ந்து வருகின்ற மக்களின் மீது கவனம் செலுத்தாதது ஏன்? எமக்கும் வாக்குரிமை உண்டு. தேர்தல் காலங்களில் வாக்குகள் செலுத்துகின்றோம். இவ்வாறான அந்தஸ்த்துகள் இருந்த போதிலும், குடியமர்ந்து வாழ்வதற்கு இடமில்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு என்ன செய்ய போகின்றோம் என்ற கவலையை சுமந்துக் கொண்டு இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு மட்டுமன்றி சிங்கள அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்ட இம்மக்களின் நிலை தொடர்பில் 30 வருடங்களின் பின் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக அமைச்சர் கபீர் காசீம் அவர்களுக்கு இம்மக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தும் படி கடிதம் ஒன்று மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனால் வாக்குறுதிகள் வழங்குவது போல் செயற்பாடுகள் ஒன்றும் இடம்பெறவில்லை என இம்மக்கள் கவலை கொள்கின்றனர்.
தற்பொழுது வாழும் குடியிருப்புகள் வெள்ளையர்களின் காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக பெய்த மழையில் குடியிருப்பு பகுதியின் ஓர் அறை நீரினால் ஊரி விழுந்துள்ளது.
இவ்வாறான நிலையில் மலையக தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர்கள் எம்மீது முக்கிய கவனத்தை செலுத்தி கொலப்பத்தனை பகுதியில் வீடுகளை அமைத்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க இப்பகுதியில் சிங்கள மக்களுக்கு மகாவலி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை போலவே எமக்கும் வழங்க முன்வர வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM