இந்தியாவுடனான பொருளாதார, வர்த்தக உடன்படிக்கைகளை பலப்படுத்துவது தொடர்பாக இலங்கை வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசப்படும். அதைவிடுத்து “சீபா” உடன்படிக்கை தொடர்பாக பேசவும் மாட்டோம். அதனை கையெழுத்திடவும் மாட்டோம் என திட்டவட்டமாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
உள்ளக விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் செய்ட் அல் ஹுசைனுடன் பேச்சு நடத்தி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் “சீபா” உடன்படிக்கை தொடர்பாக பேசப்படமாட்டாது.
அதேவேளை சீபா உடன்படிக்கை கையெழுத்திடப்பட மாட்டாது என அரசாங்கம் உறுதியாக அறிவித்துவிட்டது. ஆனால் இனவாத சக்திகள் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அதேவேளை இந்தியாவுடன் வர்த்தக, பொருளாதார உடன்படிக்கைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இவ்விடயத்தில் அரசு பின்னிற்கமாட்டாது.
தற்போது இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தொழில்நுட்பம் (ECTA) தொடர்பிலான உடன்படிக்கை கையெழுத்திடுவது தொடர்பாக இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இது தொடர்பில் இலங்கையில் கல்விமான்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், பொறியியலாளர்கள் சங்கம், நிர்மாண நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.
அவர்கள் அனைவரது கருத்துக்களும் பெறப்பட்ட பின்னரே இந்த உடன்படிக்கை தொடர்பான நகல் தயாரிக்கப்படும்.
இதைவிடுத்து அரசாங்கம் இவ்விடயத்தில் தனித்துத் தீர்மானம் எடுக்காது. அத்தோடு இந்தியாவுடனான வர்த்தக பொருளாதார உறவுகள் தொடர்பாக பொய்யான இனவாத பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து இந்தியாவின் வர்த்தக சந்தையை நாம் எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் மூலோபாயங்களை வகுக்க வேண்டும்.
இலங்கை பரிமாற்றத்திற்கான மத்திய கேந்திர நிலையமாக உள்ளது. இதனை எமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையை பொருளாதார அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டும்.
இன்று வியட்நாமில் தினமும் பொருளாதார வலயங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. ஏன் எம்மால் முடியாது. உலகில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகள், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலும் சீனாவிலும் இந்நிலையேற்பட்டுள்ளது.
இச் சந்தர்ப்பத்தில் இவைகளை வெற்றி கொள்ளும் விதத்தில் எமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னகர்த்த வேண்டும்.
எதிர்வரும் 6 ஆம் திகதி இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்.
இதன்போது ஐ.நா.வில் நிறைவேற்றப் பட்ட பிரேரணை தொடர்பிலும் உள்நாட்டு விசாரணைப் பொறி முறை தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளக விசாரணை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM